சென்னை, ஜூலை 15 சமூகநீதிக்கான அய்ந்து அம்சங் களை வலியுறுத்தி அறப்போராட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவிப்பின்படி, இன்று (15.7.2020) காலை 10 மணிக்குத் தமிழகம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் தனிமனித இடை வெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் அறப்போராட்டம் நடைபெற்றது.
சென்னை பெரியார் திடல் நுழைவு வாயில் முன்பு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களின் தலைமையில், ‘நீட்’ தேர்வை ரத்து செய்க! சுகாதார, மருத்துவ உதவி ஒவ்வொரு குடி மகனுக்கும் அரசு அளிப்பதை அடிப்படை உரிமை ஆக்குக! தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு தருக! மத்தியத் தொகுப்பில் மருத்துவக் கல்வியில் பிற்படுத் தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டைத் தாமதிக்காதே! மருத்துவக் கல்லூரி இடங்களை மத்திய அரசின் தொகுப்புக்கு மாநில அரசுகள் கொடுக்கவேண்டிய அவசியமில்லை! ஆகியவற்றை வலியுறுத்தி சமூக நீதிக்கான அறப்போராட்டத்தில் ஒலிமுழக்கம் எழுப்பட்டன.
இந்த அறப்போராட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யச் செயலாளர் முனைவர் மங்களமுருகேசன், மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் சமூகக்காப்பு அணி ஒருங்கிணைப்பாளர் சோ.சுரேஷ், மகளிரணி சி.வெற்றிச் செல்வி, திராவிட மாணவர் கழக சென்னை மண்டலச் செயலாளர் வி.எம்.வேலவன், திராவிட மகளிர் பாசறை மரகதமணி, பவானி, கார்ல்மார்க்ஸ், உடுமலை வடிவேல், மீனாகுமாரி, சக்திவேல், ஆனந்த், இருதயநாத் உள்ளிட்ட கழகத்தோழர்கள் மூன்று தனித்தனி அணியாகப் பிரிந்து பங்கேற்று ஒலிமுழக்கம் இட்டனர்.
இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முகக்கவசம் அணிந்துகொண்டு தனி நபர் இடை வெளிவிட்டு பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக் கங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment