கிறித்துவத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரையும் எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 10, 2020

கிறித்துவத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரையும் எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்


சென்னை, ஆக. 10- சீக்கியம், பவுத்தம் ஆகிய மதங்களைத் தழுவி யவர்களுக்குக் காட்டப்படும் பரிவு கிறித்தவத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்ட வர்களுக்கும் காட்டப்பட வேண்டும். இதில் ஓர வஞ்சனை செய்வது கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன் அறிக்கை விடுத்துள்ளார்.


அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு


இந்து மதத்தைப் பின்பற்றும் தாழ்த்தப்பட் டோரை மட்டுமே அட்டவணை ஜாதிகளின் பட்டியலில் சேர்க்கவேண்டும் என 1950 ஆகஸ்டு 10 ஆம் நாள் குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனால் கிறித்தவம், இஸ் லாம் ஆகிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட் டோர் எஸ்சி பட்டியலில் சேர்க்கப்படாமல் நிரா கரிக்கப்பட்டனர். எனவே,அரசாங்கத்தின் கவ னத்தை ஈர்க்க அந்த நாளை தலித் கிறித்தவர்கள் கறுப்பு நாளாகக் கடைபிடித்து வருகின்றனர். அவர்தம் அறப் போராட்டம் வெற்றிபெற விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மத் திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்று அதனை நடை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.


இந்து மதத்தைப் பின்பற்றுவோரைத்தான் எஸ்சி பட்டியலில் சேர்க்கவேண்டும் என்ற குடிய ரசுத் தலைவரின் ஆணையில் 1956இல் திருத்தம் கொண்டுவரப்பட்டு சீக்கிய மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரையும் எஸ்சி பட்டியலில் சேர்ப்பதற்கு வகைசெய்யப்பட்டது. அடுத்து 1990 ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தால் பவுத்த மதத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரையும் எஸ்சி பட்டியலில் சேர்த்துக்கொள்வதற்கு அனு மதியளிக்கப்பட்டது.


ஆனால், கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோர் மட்டும் எஸ்சி பட்டியலில் சேர்க்கப்படாமல் தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றனர்.


மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 'ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்' தலித் கிறித்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அறிக்கை அளித்து 10 ஆண்டுகள் ஆன பின்னரும்கூட மத்திய அரசாங்கம் அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.


ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றுவதற்கு நமது அரசியலமைப்புச் சட்டத் தின் உறுப்பு 25இல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். கிறித் தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரை மட்டும் எஸ்சி பட்டியலில் சேர்க்காமல் வஞ்சிப்பது அரசியலமைப்புச் சட்டத் தால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையை மறுப்பதாகும். இந்த அநீதியை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு கடந்த 15 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் இந்து மதத்தின் சாதி கோட்பாடு எல்லா மதங் களையும் தொற்றிப் பாழாக்கிவிட்டதால் எந்த மதத்தைத் தழுவினாலும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்த உண்மை ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருந் தும்கூட தலித் கிறித்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்காமல் பாரபட்சம் காட்டுகின்றனர். இந்தப் போக்கு மாறவேண்டும்.


சீக்கியம், பவுத்தம் ஆகிய மதங்களைத் தழுவி யவர்களுக்குக் காட்டப்படும் பரிவு கிறித்தவத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்டவர்களுக்கும் காட்டப்பட வேண்டும். இதில் ஓரவஞ்சனை செய்வது கூடாது என மத்திய அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம்.


இந்நிலையில், ஆகஸ்டு 10 ஆம் நாளை கறுப்பு நாளாகக் கடைபிடிக்கும் தலித் கிறித்தவர்களின் அறப் போராட்டம் வெல்க என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்! என்று தனது அறிககையில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment