அகில இந்திய வானொலியில் நீண்ட காலம் பணியாற்றி (குறிப்பாக நாடகத் துறை) முத்திரை பொறித்த - பட்டுக்கோட்டை குமாரவேல் என்று அறியப்பட்டவரும், தந்தை பெரியார் பாலும், அவர்களின் கொள்கைபாலும், நம்மிடத்திலும் மிகவும் ஈடுபாடு கொண்டவருமான அந்தப் பெருமகனார் தமது 96ஆம் அகவையில் நேற்று மாலை மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
திருச்சியில் அவர் பணியாற்றியபோது தந்தை பெரியாரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு சென்னைப் பெரியார் திடலோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர். "பெரியார் விருது" அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர்.
"யார் சொன்னது - பெரியார் மறைந்தார் என்று!" என்று அவர் எழுதிய பாடல் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒலிப் பேழையில் இடம் பெற்றுள்ளது. அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.9.2020
No comments:
Post a Comment