செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 10, 2020

செய்தியும், சிந்தனையும்....!

‘ஓடி விளையாடு பாப்பா!'


திருவொற்றியூரில் வேல் யாத்திரை - பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கைது  - பிறகு விடுவிப்பு.


காலையில் கைது - மாலையில் 'விடுதலை' என்ற சிறுபிள்ளை விளையாட்டா?


மற்ற கட்சிகள் இப்படியெல்லாம் செய்தால் அ.தி.மு.க. அரசு அனுமதிக்குமா?


அசல் சிறுபிள்ளைத்தனம்!


கண்ணீராகும்!


தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான, இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 121 படகுகள் அழிக்கப்பட உள்ளன.


தண்ணீரிலே பிறந்து, தண்ணீரிலே வாழும் மீனவர்களின் வாழ்வு கண்ணீரிலே மூழ்க வேண்டுமா?


இந்திய அரசு என்ன செய்கிறது - என்ன செய்யப் போகிறது?


சாலை விபத்தா?


மலேசியாவில் இரு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல்- இருவர் பலி.


சாலை விபத்துபோல் அல்லவா இருக்கிறது?


தகுதி- திறமை


உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் 100-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டினர்.


இட ஒதுக்கீட்டால் தகுதி- திறமை போய்விடும் என்று தவளைபோல் இரைச்சல் போடும் கூட்டம் - இட ஒதுக்கீட்டின் கழனியான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கள் தகுதியை, திறமையை நிரூபித்துவிட்டார்கள் என்பது நினைவிருக்கட்டும்!


இரயிலில்


ஏற மாட்டார்கள்


ஹிந்துக் கடைகளில் மட்டுமே ஹிந்துக்கள் பொருள்களை வாங்கவேண்டும் என்று உத்தமபாளையத்தில் சுவரொட்டி ஒட்டிய பி.ஜே.பி.யினர் கைது.


இதனைக் கண்டித்துள்ளார் பி.ஜே.பி.யின் முன்னாள் தேசிய செயலாளர் - மன்னிப்புப் புகழ் பேர்வழி.


அப்படி என்றால், கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்த மின்சாரம் உள்ளிட்டவற்றைப் புறக்கணிக்கத் தயாரா? செல்போனைக் கண்டுபிடித்தது ஹிந்துக்களா - அதனைக் கைவிடத் தயாரா? இனிமேல் இரயில் ஏற மாட்டார்களா - விமானத்தில் பறக்கமாட்டார்களா?


நாம் வாழ்வது எந்த யுகத்தில்?


வரும் தீபாவளியன்று ராமஜென்ம பூமியில் - பசு மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட 5 லட்சம் அகல் விளக்குகள் ஒளியேற்றப்படும்.


'கிடந்தது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையில் வை!' என்ற கதைதான்.


இதல்கூட பசு மாட்டுச் சாணியாம். ஏன் காளை மாடு சிவனின் வாகனம் அல்லவா! அதனை ஏன் ஒதுக்கவேண்டும்? சாணியில்கூட ஜாதியா?


பக்ராநங்கல் அணை திறப்பு விழாவில் பிரதமர் நேரு பேசினார்:


''We are not living in Cow Dung Age.'' (நாம் பசு மாட்டுச் சாணி யுகத்தில் வாழவில்லை'') என்று சொன்னது நினைவிற்கு வந்து தொலைகிறது.


‘கலர் கலராக' மூடநம்பிக்கை!


4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் 'லீப்' ஆண்டில், புதிய அணிதான் அய்.பி.எல். கோப்பையைக் கைப்பற்றும்.


மூடநம்பிக்கை 'கலர் கலராக' வெளிவந்து கொண்டிருக்குமோ! திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டுப் போட்டியில்கூட இத்தகைய மூடநம்பிக்கையா?


இந்திய வியாதி!


அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுக்கு வந்த பிறகும் டொனால்ட் டிரம்ப், தேர்தல் முடிவை எதிர்த்துப் பேரணியாம்!


இந்தியாவைப் பீடித்த வியாதி, அமெரிக்காவையும் பிடித்து ஆட்டுகிறதோ!


No comments:

Post a Comment