மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து - தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களை நிதியளித்துக் காப்பாற்றுக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 20, 2020

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து - தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களை நிதியளித்துக் காப்பாற்றுக!


அரசு பள்ளிகளில் படித்து ‘நீட்' எழுதிய இருபால் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடம் கிடைத்தும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிர்ணயிக்கும் கட்டணச் சுமையைத் தாங்க முடியாமல், கைபிசைந்து நிற்கும் மாணவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு ஏற்கவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அவரது அறிக்கை வருமாறு:


அரசு பள்ளிகளில் படித்த பிளஸ் டூ மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப் படையில் இடம் அளித்திருப்பது - நல்ல பலன்களை அடைந்துள்ளது.


இவர்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இருபால் மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.


அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காத இந்த இருபால் மாணவர்களுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது.


அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் களுக்கான கட்டணத்திற்கும் - தனியார் மருத்துவக் கல்லூரிகளில் விதிக்கப்பட்ட கட்டணங்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடாகும்.


கைக்குக் கிட்டியும் வாய்க்குக் கிட்டவில்லை!


தையற் தொழிலாளியின் மகன், பெயிண்டருடைய மகள்  - வீட்டு வேலை செய்யும் பெண்மணியின் மகள் போன்றோர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாயை செலுத்தும் நிலையில் இல்லாத ஒரு சூழலில், மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு வாய்ப்புக் கிட்டியும் இவ் வளவுப் பெருந்தொகையை செலுத்தும் நிலையில் இல்லை.


கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற பரிதாப நிலைப்பாடுதான் இது!


இந்த சோகத்திலிருந்து இந்த ஏழைப் பாழைகளை மீட்கும் கடப்பாடு அரசுக்கு முக்கியமாக - கண்டிப்பாக - இருக்கவே செய்கிறது.


உயர்ஜாதியினருக்கு உதவவில்லையா?


உயுர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு (மாத வருவாய் ரூ.65,000 ஈட்டுவோர் ஏழைகளாம்!) உதவி செய்யும் நிலையில் - இந்த அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களுக்கு  இருகரம் நீட்டி உதவிட முன்வரவேண்டும் - அதுதான் உண்மையான சமூகநீதி!


தமிழ்நாடு அரசு இதனை முக்கியமாகக் கருதி, இடம் கிடைத்தும் பொருளாதாரத் தடையால் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத அவல நிலைக்கு ஆளாக்கப்பட்ட இருபால் மாணவர்களையும் கை கொடுத்துத் தூக்கவேண்டும்!!


சமூகநீதியில் இது மிகவும் முக்கியமான அம்சமே!


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


20.11.2020


No comments:

Post a Comment