செத்த பின்பும் வாழலாம் - எப்படி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 19, 2020

செத்த பின்பும் வாழலாம் - எப்படி

செத்த பின்பும் வாழலாம் - எப்படி?



மனிதர்களின் சுயநலமும், சுரண்டலும், ஏய்த் துப் பிழைக்கும் சுபாவமும் உலகில் ஒருபுறம் வளர்ந்து வந்து கொண்டிருந்தபோதிலும், நாம் நம்பிக்கை இழக்க வேண்டிய அளவுக்கு சமூகம் இன்னமும் சீர்கேடடையவில்லை என்பதும், மனித நேயம் பட்டுப்போகாமல், துளிர்த்து வளர்ந்தும் வருகிறது என்பதும் மிகவும் ஆறுதல் தரக் கூடிய மகிழ்ச்சி ஊற்றாகும்!


கொடைகளில் எத்தனையோ வகை உண்டு. தருமம் செய்கிறோம் என்று புகழுக்கும், பெரு மைக்கும் கூட செய்பவர்கள் மலிந்ததால்தான் இத்தனை வகை போலும்! நமது தமிழ் இலக்கி யங்களில் ‘அறவிலை வணிகன் ஆய்-அண்டி ரன் அல்லன்' என்று ஒரு வள்ளல் பற்றிய தமிழ்ப் பாட்டு இடம் பெற்றுள்ளது!


காலணா தர்மம் செய்துவிட்டு நாலணா விளம்பரம் தேடும் மனிதர்கள் அறத்தை - தர்மத்தை இங்கே பொருள் கொள்ளத்தான் வேண்டும். (பொதுவாக அறம் வேறு; தர்மம் வேறு என்பது பண்பாட்டுக்குரிய மிகப்பெரிய விழுமம். அறம் - அது வள்ளுவர் சொன்னதைப் போல ‘மனத்துக்கண் மாசு இலனாதல் அனைத்து அறன்' அல்லவா?)


உள்ளபடியே வலது கையில் கொடுத்ததை இடது கையே அறியாத அளவுக்கு அள்ளிக் கொடுத்தும் விளம்பர வியாதியில் பீடிக்கப்படாத பெருமக்களும், உண்மை ‘கொடைஞர்களும்' உலகில் இருக்கத்தான் செய்கின்றனர்.


அவைகளைப் பற்றி எவ்வளவோ எழுதலாம்.


சீதக்காதியைப் பற்றி ‘செத்தும் கொடை கொடுத்தார் சீதக்காதி' என்பார்கள்! அத்தகைய சான்றாண்மை - இந்த மண்ணில் பஞ்சமில்லை என்பது, விபத்துக்கள் ஏற்பட்டு, அதனால் உயிர் பிழைக்க முடியாது மரணத்தைத் தழுவும் தத்தம் பிள்ளைகளையோ, உறவுகளையோ அப்படியே புதைப்பதோ, எரிப்பதோ செய்வதற்கு முன்பு, அந்த மூளைச் சாவு அடைந்த இனி பிழைக்க முடியாது என்று மருத்துவர்களால் அறிவிக்கப் பட்டவர்களின் உடல் உறுப்புகள் - அந்த உறுப் புகளின் தேவைக்காக நோயுடன் போராடும் மற்ற மனிதர்களுக்குக் கொடையாக - உடல் உறுப்புக் கொடையாகத் தந்து, அதன் மூலம் தாங்களும், தம் பிள்ளைகளும் உலகில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டே இருக்கும் நிலை; சாகவில்லை என்ற ஆறுதல் கொண்டு அமைதியுடன் அந்த மாளாத, மறையாத துக் கத்தை, துயரத்தைப் போக்கிக் கொள்வது நல்ல வழியே அல்லவா?


ஒருவர் துக்கம் மாறுகிறது; மற்றது ஒரு மகிழ்ச்சி - உடல் உறுப்பு கிடைத்து பொருத்தப் பட்டதால் - கூடுதலாகச் சேருகிறது என்பது எவ்வளவு சிறப்பான மனிதநேயம்! - இல்லையா?


கோவையில் உள்ள கோவை மெடிக்கல் சென்டரில் விபத்தில் அடிபட்டு சேர்க்கப்பட்ட இளைஞன் (18, 19 வயதுக்குட்பட்ட இளைஞன்) ஜி.வைத்தீஸ்வரன் என்று பெயர்.


அவரை சேர்த்த பின்பு மூளைச்சாவு ஏற் பட்டதனால், அவர் இனி பிழைப்பது இயலாது, அதனால் அவரது உடல் உறுப்புகளைக் கொடை யாக தேவைப்படும் நோயாளிகளுக்குத் தந்து மற்றவரை பிழைக்க வைக்கலாம், மறுவாழ் வளிக்கலாம் என்ற மனிதநேய உணர்வுடன் அவரது பெற்றோர் கோபால்-விமலாதேவி ஆகி யோர் மனமுவந்து அவருடைய இருதயம், நுரையீரல்கள், கல்லீரல், சிறுநீரகம், கண்கள், எலும்புகள், தோல் இவற்றையெல்லாம் பிறருக்கு அளிக்க முன்வந்து - இழப்பில் கூட சிறந்த மனிதர்களாக உயர்ந்துள்ளார்கள்.


நமது வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் உரியவர் கள். இறந்த சோக கட்டத்தைக் கூட, ஆனந்தமாக ஆக்கிட்ட அந்த அரும்பெரும் வாழ்விணையர் கள்.


இதயம் சென்னை மருத்துவமனை ஒன்றுக் கும், நுரையீரல்கள் செகந்தராபாத் மருத்துவ மனைக்கும் உடனடியாக தனியாக ஏற்பாடு செய் யப்பட்ட விமானங்களில் எடுத்துச் செல்லப்பட்டு பொருத்தப்பட்டன என்பது, அறிவியலும், மனித நேயமும் எப்படி போட்டி போட்டுக் கொண்டு மனித மாண்பை ஒளி வீசச் செய்கிறது - பார்த் தீர்களா?


செத்தவரை பிழைக்க வைக்க முடியும், துன் பத்தையும் இன்பமாக்கிட முடியும், அழிவையும் கூட ஆக்கத்திற்குத் திருப்ப முடியும், இறந்த பின்னும் பலராக வாழலாம் என்பதே உடல் உறுப்புக் கொடையாகும்!


பெரியார் உடல் உறுப்புக் கழகம்  1984 முதலே தொடங்கப்பட்டு, பலரும் மறைந்த பிறகும் உடற் கொடை, உறுப்புக்கொடை, குருதிக் கொடை, விழிக்கொடை வழங்குவது - ஏதாவது ஒரு வகையில் பயனுறு சாவாக மரணத்தை மாற்ற லாமே என்பதால்தான். இத்தகைய அமைப்பு களின் ஆரவாரமற்ற அமைதிப் பணி தொடர் கிறது.


No comments:

Post a Comment