கரோனா : போலி சான்றிதழ் அளித்த பா.ஜ.க.சட்டமன்ற உறுப்பினர்மீது வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 29, 2020

கரோனா : போலி சான்றிதழ் அளித்த பா.ஜ.க.சட்டமன்ற உறுப்பினர்மீது வழக்கு

லக்னோ, டிச.29 உத்தரப்பிரதேச மாநிலம் மெந்தவா சட்டப்பேரவை தொகுதியில் இருந்து பா... சார்பில் தேர்வு செய்யபட்டவர் ராகேஷ் சிங் பாகல்.

இவர் மீது சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள  கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆள்கடத்தல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நான்கு ஆண்டுகளாக ஏதாவது ஒரு காரணம் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்த சட்டமன்ற உறுப்பினர் ராகேஷுக்கு எந்த ஒரு விளக்கமும் தேவையில்லை நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராகவேண்டும் என்று எச்சரிக்கையோடு சம்மன் அனுப் பப்பட்டது . நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்க அவர் கரோனாவை பகடைக் காயாக பயன்படுத்திக் கொண்டார்.

தனக்கு கரோனா தொற்று உள்ளதாக அங்குள்ள தனியார் பரிசோதனை கூடத்தில் போலி சான்றிதழ் பெற்று அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

ஆனால் சட்டமன்ற உறுப்பினர்..ராகேஷ், கொடுத்தது போலி சான்றிதழ் என தெரிய வந்ததால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ,ராகேஷ் மீது கலீலாபாத் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தப்பிக்க பா... சட்டமன்ற உறுப்பினர் பொய்யாக கரோனா சான்றிதழ் அளித்து நீதிமன்றத்தை ஏமாற்றிய செயல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காலாவதியான வாகன ஆவணங்கள்ஓட்டுநர் உரிமம் 2021 மார்ச் வரை செல்லும் என  அறிவிப்பு

சென்னை,டிச.29, காலாவதியான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்கள் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து அரசு அலுவலக பணிகளும் முடங்கின.

இதன்காரணமாக, பிப்ரவரி 2020 முதல் காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம், பல்வேறு வாகனங்களின் ஆர்.சி., பர்மிட், தகுதிச் சான்று ஆகியவற்றை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, காலாவதியான இந்த ஆவணங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்தது. பின்னர் அவ்வப்போது இந்த சலுகை நீட்டிக்கப் பட்டு வருகிறது. கடைசியாக டிசம்பர் 31 வரை ஆவணங்கள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த சலுகையை 2021 மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச் சகம்  உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அமைச்சகம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘கடந்த பிப்ரவரி முதல் காலாவதி யான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்கள் 2021 மார்ச் 31 வரை செல்லத்தக்கதாக கருதப்படும்என கூறப் பட்டுள்ளது.

வாகனங்கள் முடக்கம்

கரோனா பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டாலும், தங்கள் வாகனங்கள் அனைத்தையும் இயக்க முடியாத சூழல் உள்ளதால் சலுகையை நீட்டிக்க வேண்டும் என வர்த்தக வாகனஉரிமையாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். குறிப்பாக கல்வி நிறுவ னங்கள் மூடப்பட்டுள்ளதால், அவற்றுக்கான வாகனங்கள் முற்றிலும் முடங்கிக்கிடக்கின்றன.

எனவே, அவற்றின் ஆவணங்களை புதுப்பிக்க முடியாத சூழல் நிலவுவதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை ஏற்று, சலுகை காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

ஜன. 31 வரை ஊரடங்கு நீட்டிப்புபுதிய கரோனா எச்சரிக்கை அவசியம்

புதுடில்லி,டிச.29, கரோனா பாதிப்பு குறையத் தொடங்கி யதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கை படிப்படியாக மத்திய அரசு தளர்த்தி வருகிறது. புதிய வகை தளர்வுகளுடன் டிசம்பர் 31ஆம் தேதி வரை கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில், இந்த ஊரடங்கு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று  (28.12.2020) அறிவித்தது.

இது தொடர்பாக விடுக்கப்பட்ட புதிய வழிகாட்டு நெறி முறையில், ‘‘நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஆனாலும், இங்கிலாந்தில் கண்டறியப் பட்டுள்ள புதிய வகை கரோனா வைரசால் உலக அளவில் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல், முன்னெச்சரிக்கை யுடன் இருக்க வேண்டியது அவசியம்’’ என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

 

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம்,டிச.29, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2ஆவது உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி தொழில் நுட்பக் கோளாறால் உற்பத்தி நிறுத்தப்பட்டு மீண்டும் டிசம்பர் 11இல் உற்பத்தி தொடங்கிய நிலையில் மீண்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment