பெரியாரியமும் சூழலியமும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 24, 2020

பெரியாரியமும் சூழலியமும்!

எல்லாச் சூழலுக்கும் பொருத்தமானது பெரியாரியம் என்று சொல்வதற்கான முக்கியமான எடுத்துக்காட்டு, சூழலியம் குறித்த பெரியாரின் பார்வை!

அவர் காலத்தில் உலகமயமாக்கல் - தாராளமயமாக்கல் - நகரமயமாக்கல் - இயந்திரமயமாக்கல் இல்லை. இந்தளவுக்கு இயற்கையியல், சூழலியல், பசுமையியல் பேசப்படவும் இல்லை. ஆனால் சூழலி யலை மிகத் தெளிவாக உணர்ந்து சொல்லி இருக்கிறார் பெரியார்.

அவர் பகுத்தறிவாளர்களை, இயற்கை வாதிகள் என்றே அடையாளப்படுத்தினார். ''அறிவு என்பது இயற்கையைப் பற்றிய தெளிவை அடிப்படையாகக் கொண்டது. அறிவுள்ளவன் இயற்கைவாதியாய் இருப் பான். இயற்கைவாதி அறிவாளியாய் இருப் பான்'' என்று சொன்னவர் பெரியார்.

இயற்கையை அறிவது தான் அறிவு என்று சொன்னார். "இயற்கையை நல்ல வண்ணம் உணர்ந்து கொள்வதும், அதற் கேற்பதான வாழ்வை அமைத்துக் கொள் வதுமான அறிவுதான் ஞானமாகும்" என்று சொன்னவர் பெரியார்.உண்மையான அறிவு நம்மை அண்டாமல் போனதற்குக் காரணம், இயற்கைக்கு விரோதமான நமது சிந்தனைகள் தான் என்றும் சிந்தித்தவர் அவர்.

இயற்கைக்கு எதிரானது தான் கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய அனைத்தும் என்றார். இயற்கையைக் குலைக்கவே அவை உருவாக்கப்பட்டன என்றும் சொன் னார். அரசு, அதிகாரம் ஆகியவற்றையும் இயற்கைக்கு விரோதமானதாகத் தான் பெரியார் சொன்னார்.

'' இயற்கைக்கு விரோதமான முறைகள் ஒழிந்துவிடாமல் பாதுகாப்பதற்குத் தான் அரசாங்கமும் மதமும் கடவுளும் இருக் கின்றன. சாஸ்திரமும் இதற்காகத் தான் அமைக்கப்பட்டு இருக்கின்றன" என்று சொன்னவர் பெரியார்.

அவர் மனிதனை மகத்தானவனாக எந்தக் காலத்திலும் சொல்லவில்லை. மனி தன் - புல்லையும், பூண்டையும், யானையை யும் எறும்பையும், பேனையும் சிறு பல்லு யிரியையும் விட மேலானவன் அல்ல என்று சொன்னவரும் அவர் தான். இன் றைய நவீனத்துவ இயற்கைச் சூழலியல் அனைத்தையும் அவர் அந்தக் காலத்தி லேயே பேசி இருக்கிறார். அதனால் தான் அவர் பெரியார்! பெரியாரில் பெரியார்!

பெரியார் பேசியது இயங்கியல் இல்லை என்று இயந்திரவியல் தேசியம் பேசி வரு பவர்கள் சொல்லித் திரிகிறார்கள். பெரி யாரை அறிவியல் வழிபாட்டாளர் என்றும் பேசித் திரிகிறார்கள். இல்லை! அவர் இயற் கையியல் வாதி! அவரது எழுத்துக்களை மேலோட்டமாகப் படிப்பவர்களால் உணர முடியாது.

பெரியார் இருந்திருந்தால் கூடங் குளத்தை ஆதரித்திருப்பார், மீத்தேன் திட்டத்தை ஆதரிப்பார் என்று கற்பனா  தேசியம் பேசித் திரிகிறார்கள் சிலர்.

இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது, ''போர்க்களம் புகட்டப்போகும் புத்தி'' என்று தலையங்கம் தீட்டினார். 'ஜெர் மன் மக்கள் இன்று துப்பாக்கித் துரையின் தர்பாருக்கு இலக்காகி இருக்கிறார்கள்.

எந்த நாட்டுக்கும் இவ்விதச் சர்வாதி காரம் கூடாது"( குடிஅரசு 10.9.1939) என்றார் பெரியார். சர்வாதிகாரம் உலகுக்கே ஆகாது என்றும் உரிமைக்கு உலைவைக்கும் என்று எழுதினார்.

ஹிட்லரிசம் என்றும் அதற்கு ஆரி யனிசம் என்றும் 1944 ஆம் ஆண்டே பெயர் சூட்டி எழுதி இருக்கிறார் பெரியார். இந்த ஹிட்லரிடம் விஞ்ஞானத்தின் துணைக் கொண்டு மற்றநாடுகளின் சுதந்தி ரத்தைப் பறிக்கிறது என்று குற்றம் சாட் டினார் பெரியார். இதனை அழித்தாக வேண்டும் என்றார்.    

ஹிட்லர் இறந்தபோது  இது பொது வுடமைக்கு கிடைத்த வெற்றியாக எழுதி யது குடிஅரசு. ''... ஹிட்லர் பலாபலனை சிந்திக்காத வெத்துவேட்டு வீரராக முடிவெய்திவிட்டார்..பொதுவுடமைக் கொள்கைக்கு எதிராய் நிற்கும் யாரும் இந்தக் கதியைத்தான் அடைவார்கள். பொது வுடமைக் கொள்கையை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல போலிப்பொதுவுடைமையாளர்க ளும் இந்தக் கதியைத்தான் அடைவார்கள். (குடிஅரசு 5.5.1945) என்று எழுதியவர் பெரியார். எனவே, அறிவியலை அழிவு வேலைக்கு பயன்படுத்துவதைக் கடுமை யாக எதிர்த்தவர் தான் பெரியார்.

மீத்தேன் திட்டத்தை ஆதரித்திருப்பார் பெரியார் என்று சொல்வதன் மூலமாக, விவசாயத்துக்கு அவர் எதிரி என்று காட்ட முயற்சிக்கிறார்கள்.  பெரியாரின்  கிராமசீர் திருத்தம், விவசாயத் தொழிலாளர் சங்கம் ஏன் ஆகிய நூல்களை அவர்கள் முதலில் படிக்க வேண்டும். விவசாயம், அது ஒதுக் கப்பட்டதாக இல்லாமல் தலைநிமிர்ந்து விவசாயியை வாழ வைக்கும் தொழிலாக மாற வேண்டும் என்றே பெரியார் சொல்லி இருக்கிறார்.

விவசாயத் தொழிலாளர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே அச்சங்கத்தின் நோக்கமாக பெரியார் அறிவித்தார்.

கிராமங்களைச் சீர்திருத்தம் செய்ய வேண்டுமானால் உழவுத்தொழிலை உடல் உழைப்பு தொழிலாக இருப்பதில் இருந்து மாற்றி அதனை இயந்திரத் தொழில் முறை யாக மாற்ற வேண்டும் என்றார். உழுவதும், விதைப்பதும் அறுப்பதும் இயந்திரத்தால் செய்யப்பட வேண்டும் என்றார். கிணறு வெட்டுதல், நீர் இறைத்தல், நீர் பாய்ச்சுதல் இயந்திரத்தால் செய்யப்பட வேண்டும் என்றார்.  இதனால் வேலை இல்லாமல் ஆகிவிடாது. நாள் முழுவதும் உடலுழைப்பு என்பது, சில மணிநேர ஓய்வுக்கு வழி வகுக்கும் என்றும் பெரியார் சொன்னார்.

பெரிய விவசாயிகளை விட சிறுகுறு விவசாயிகளைப் பற்றி அதிகம் கவலைப் பட்டவர் அவர். விவசாயிகள் பாதி விவ சாயமும், பாதி அளவுக்கு ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். உணவுப்பஞ்சம் இதனால் ஒழியும் என்றார். அரிசி சாப்பிடுவதைக் குறைத்துவிட்டு, இறைச்சி சாப்பிடுவதை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.

வெள்ளை கொல்லும் என்று சொல்லி வருகிறார்கள் இயற்கை மருத்துவர்கள். அரிசி,பால்,சர்க்கரை ஆகிய மூன்றையும் கடுமையாக அவர் எதிர்த்து எழுதி இருக் கிறார். காப்பிக்கே பெருமளவு பால்போவ தால் காப்பியைதடை செய்ய வேண்டும் என்றார்.சத்துள்ள கேப்பை, கீரைகளையும் மனிதன் புறக்கணித்துவிட்டான் என்று கண்டித்தவர் பெரியார். 'அரிசியினால் உடலில் உறுதி இல்லை, வீண் செலவும் நோயும் தான் மிச்சம்' (குடிஅரசு 17.2.1945) என்று எழுதியவர் அவர்.   விவசாயத்தை புறக்கணித்தவர் அல்ல பெரியார்.

பொங்கல் விழா மட்டுமே பெரியார் ஏற்றுக் கொண்டார். அதற்கு அவர் சொன்ன ஒரே காரணம் இது உழவர்களுக்கு உரியது என்பதால் தான்.

''இந்நாள் உழைப்பாளிகளுக்கு உரியது, உழவர்களுக்கு உரியது' என்றார். ''உழவர் கள் உழைக்கிறார்கள். ஆனால் உழைப் புக்குத் தகுந்த ஊதியம் பெறுவதில்லை. பாடுபடுகின்றனர். ஆனால் பசியார உணவு உண்பதில்லை. இதற்கெல்லாம் காரணம் யாது?.... நாட்டில் உள்ள நிலங்கள் எல்லாம் அட்டைக் குணம் படைத்த ஒரு சிறு கூட்டத் தினர் கைக்குள் சிக்குண்டு கிடக்கின்றன." ( குடி அரசு 11.1.1947) என்றவர் பெரியார்.

'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே அல்லவா? வரப்புயர்ந்தால் தான் மற்றவை உயர முடியுமல்லவா? எங்கு சுற்றியும் உழவனின் காலடியை நோக்கித் தானே இவ்வுலகம் கிடக்கின்றது...இன்று யார் யார் உழவுத்தொழிலைச் செய்கிறார் களோ சேற்றிலும் பனியிலும் கிடந்து சீரழி கின்றார்களோ அவர்களுக்கு நிலத்திலே உரிமையில்லை. ஒரு சிலருக்கு ஏதோ ஒரு அளவுக்கு உண்டு என்றாலும் அது இறங்கு முகமாக நாளுக்கு நாள் கரைந்து கொண்டு தான் வருகிறது. ஏன் இந்த நிலை? என் றைக்குமே இவர்களுக்கு நிலத்தில் உரிமை யிருந்ததில்லையா? இல்லை என்று எவரா லும் கூறமுன்வர முடியுமா? காடு திருத்தி வயலாக்கிக் கழனியாகக் கண்டவன் -அவன் பரம்பரை - பின் சந்ததிக்கு எதனால் அந்தக் கழனியில் உரிமை இல்லாது போயிற்று? வயல் வரப்பையே மிதித்தறியாத வாடாத மேனியருக்கு அந்த உரிமை எப்படி வந்தது? ஏமாந்த காலத்தில் சிலர் ஏற்றங்கொண்டு விட்டார்கள்..."( குடி அரசு 15.1.1949) என்று எழுதியது பெரியார்.

''விஞ்ஞான அறிவு, தன்மான உணர்வு இவை இல்லாவிட்டால் பட்டம், பணம் பெற்று எந்தப் பயனுமில்லை. காலத்துக் கேற்ப உருவாகும் விஞ்ஞான வசதிகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மாறு தலைக் கண்டு மிரள்பவர்களுக்கு எதிர் காலம் இல்லை' என்பதுதான் அவரது அறிவியல் பொதுநோக்கு. இது அறிவு, பயன்பாடு சார்ந்ததே தவிர அழிவு சார்ந்தது அல்ல.

விவசாயத்தை உடலுழைப்புத் தொழி லாக இல்லாமல் இயந்திர தொழில்துறையாக மாற்ற வேண்டும் என்ற பெரியார், பூமிகளை சீர்திருத்த வேண்டும் என்றார். பயன்படாத பூமிகளில் பாடுபட அவசியமில்லாத பயிர் களைச் செய்யவேண்டும் என்றார். விளை பொருள்களை ஆங்காங்கே கூட்டுறவு முறைப்படி விறபனை செய்யப்பட்டு பயன் விவசாயிகளுக்கே கிடைக்க வேண்டும் என்றார். கீழான தொழில், ஈனத்தொழில், கஷ்டமான தொழில், சரீரத் தொழில் எதுவும் இருக்கக் கூடாது. எனது முடிவான இலட்சியம், உயரிய கூட்டுறவு வாழ்க்கை முறையே என்றார். அது அமைந்தால் மக் களே கவலையற்று இருப்பார்கள். அதில் அரசாங்கம் என்பது தனியாக இருக்காது. மக்கள் தான் அரசாங்கம் என்றார்.

அவரது அறிவு என்பது அறிவியலை பயன்பாட்டு வழியில் ஆதரித்தது. ஆனால் இயற்கையையே அது தழுவி நின்றது.

மானம் - அறிவு இரண்டையும் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார் பெரியார்.மானம் என்னும் குணத்தின் அரசியல் சொல்லே சுயமரியாதை. அறிவு என்னும் தன்மையின் அரசியல் சொல்லே பகுத்தறிவு.

சுயமரியாதைக்காரர்களை பகுத்தறிவு வாதிகள் என்றார்.

பகுத்தறிவுவாதிகளை இயற்கைவாதி கள் என்றார். பெரியாரும் இயற்கைவாதியே! பெரியாரியர்களும் இயற்கைவாதிகளே!

No comments:

Post a Comment