விலை மதிப்பற்ற புன்னகையுடன் கூடிய முகங்களைத் தேடுவோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 20, 2021

விலை மதிப்பற்ற புன்னகையுடன் கூடிய முகங்களைத் தேடுவோம்!

துன்பத்தைக்கூட வரவேற்கும் மனப்பக்குவம் நம் ஒவ்வொரு பகுத்தறிவாளருக்கும் வரவேண் டும். இன்பத்தை அனுபவிக்க சிறந்த வழி என்ன தெரியுமா? துன்பத்தைச் சுவைத்துப் பார்த்த அனுபவத்தின் மூலமே இன்பம் எவ்வளவு சுகமானது, தேவையானது என்பதை எவராலும் உணர முடியும். பசியிருந்தால்தானே உணவு மிகவும் சுவைக்கிறது. உணவின் தேவையும் அப் போது தானே தெரிகிறது! அதுபோல எதிர்ப்பு இருந்தால்தானே வெற்றியின் வீச்சும், விவே கத்தின் சிறப்பும் நமக்குக் கிட்டும் நேரத்தில் பொருளுடையதாகும்! - இல்லையா?

எனவேதான் நண்பர்களே, துன்பத்தைக் கண்டு துவளாதீர்கள்!

துயரத்தைக் கண்டு மனம் நொந்து போகா தீர்கள்!

தற்கொலைகள் எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்காது என்பதை கோழை மனத்தவர்கட்கு குட்டிச் சொல்ல முயல வேண்டும்.

இன்றைய தோல்வி, நாளைய வெற்றி - அத்தோல்வியைக்கூட ஓர் அனுபவமாக மட்டுமே பாருங்கள்!

வாழும் மனிதர்கள் தங்கள் வயிற்றுக்குச் சோறிடும் போதும் ஏற்படும் மகிழ்ச்சி - மன நிறைவைவிட, பசி என்று வந்தவர்கட்குப் பகிர்ந் தளித்து அவரது பசி தீர்ந்தபோது நன்றி கூறி னாலும், கூறாவிட்டாலும் அவர் முகமலர்ச்சி யைக் கண்டு நமக்கு ஏற்படும் அகமலர்ச்சிக்கு அளவுதான் ஏது நண்பர்களே!

எதிரிகளைக் கண்டு வெறுப்பதைவிட, உள்ளத்தால், நம் நடத்தையால் அவர்களையும் வெல்லும் வகையில் நமது அன்பு, கருணை உள்ளம் அமைதல் வேண்டும்.

அது எளிதானதா? என்று தானே கேட்கத் தோன்றுகிறது!

இதோ பவுத்த அறிஞர் தலாய்லாமா கூறு கிறார்... “உங்கள் துன்பங்களை - இடர்களை - தொல்லைகளை - வலிகளை - இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள் முதலில்.

ஒன்று உள்ளத்தைப் பொறுத்தது (Mental) மற்றொன்று உடலைப் பொறுத்தது (Physical). இதில் உள்ளம்தான் அதிகமான அளவு நம்மைப் பாதிப்புக்கு உள்ளாக்குவதாகும்!

 நலமான உள்ளம் நலமான உடலில் (A sound mind in a sound body) என்பது இலக் கானாலும் கூட உடலின் பங்கு இரண்டாவதே!

மனம் - உள்ளம் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பதிவு செய்கிறது - அது எவ்வளவு சாதாரண மானதாக இருப்பினும் கூட! எனவே மன அமைதி - உள்ளத்தூய்மை என்பதற்கே நாம் முழுக்கவனம் செலுத்திட வேண்டும். உள்ளம் தூய்மையுடனும், அமைதியுடனும் இருந்தால் உடற் பிரச்சினைகள், வலிகள் யாவும் இருக்காது; ஒருவேளை இருந்தால் பொருட்படுத்தும் அள வுக்கு இருக்கவே இருக்காது!”

உள்ளத்தூய்மை, அமைதி என்பவற்றை எப்படிப் பெறுவது? அவ்வளவு எளிதா என்று தானே உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது?

எளிதுதான் - ஆகாயத்தில் பறப்பதைப் பிடிப்பதை விட நம்முள் உள்ள அன்பு, கருணை, இரக்கம் இவற்றை வளர்த்தலே உள்ளத் தூய் மைக்கு - மனத்துக்கண் மாசிலானாகும் அனைத்து அறனைத்தரும் ஊற்றாக அமைந்துவிடும்! அதற்கு என்ன தயக்கம்? அன்பு, கருணையை புன்னகைமூலமும், நட்புறவு மூலமே எளிதில் பரப்பிட முடியுமே!

நாளும் எதிரிகளைச் சம்பாதிப்பதை விடுத்து உண்மையான நண்பர்களைத் தேடிப்பிடித்து அதன் எண்ணிக்கையைப் பெருக்க முயலுங்கள். அன்பு நதியினில், கருணை வெள்ளமாக ஓடு வதில் நீராடி நீராடி மகிழுங்கள்!

நட்புறவுகளைவிட நாம் சேர்க்கும் சிறந்த செல்வம் - நமக்கு ஒடோடி வந்து உதவிட மட்டு மல்ல - கருத்துப் பரிமாறிட, இடித்துரைத்து நல் வழிப்படுத்த, நேரிய பாதையில் இருந்து நம்மை நழுவ விடாமல் பாதுகாக்கும் நல்ல நட்புறவு வட்டம் நமக்குப் பெரும் பாதுகாப்பு அரண் அல்லவா?

தனித்து இருப்பவர்கள்தான் தவறுக்கு ஆளா கிறவர்கள். நண்பர்களிடையே இருக்கும்போது பாதை தவறுவது பெரும்பாலும் நடப்பதில் லையே! (தவறான நண்பர்களுடன் கூடினால் தவறான வழியில் இழுப்பார்கள். எனவே நண் பர்களைத் தேர்வு செய்வதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்).

புன்னகையுடன் கூடிய புதுமுகங்களாக நம் முகங்கள் அமையட்டும்; பொன்னகையாளர் களைத் தேடி அலுக்காதீர்கள்; புன்னகைப் பொங்கும் முகங்களைத் தேடுவீர்! நலம் நாடுவீர்!

மகிழ்ச்சியில் திளைப்போம், வாரீர்! வாரீர்!!

No comments:

Post a Comment