அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டில் ஆதாரம் உள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 13, 2021

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டில் ஆதாரம் உள்ளது

விசாரணைக் குழுவின் தலைவர்  தகவல்

சென்னை,பிப்.13- அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாமீதான குற்றச்சாட்டில் ஆதாரங்கள் இருப்பதால், நேரடி விசாரணைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தகவல் தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர் சூரப்பாமீது அண்ணா பல்கலைக்கு சிறப்பு தகுதிக்கோரி கடிதம் எழுதியது, பல்கலைக்கழகத்தில் 200 கோடி ரூபாய் நிதி முறைகேடு, பணி நியமனத்தில் லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து தமிழக அரசு இந்த புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமை யில் விசாரணை குழுவை நவம்பர் 11ஆம் தேதி அமைத்தது. ஆணைய கோரிக்கையின் படி கடிதம், நேரடி புகார்கள் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஏகப்பட்ட புகார்கள் சூரப்பா மீது குவிந்தது. இதனால் விசா ரணை சூடுபிடித்தது. ஆனால் பல்கலைக் தரப்பில் விசாரணை குழுவுக்கு முழுமை யான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், கடந்த 11ஆம் தேதியுடன் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் விசாரணை ஆணை யத்தின் காலக்கெடு முடிவடைந்த நிலை யில், அதனை நீட்டிக்க நீதிபதி கலையரசன் அரசிடம் அவகாசம் கேட்டிருந்தார்.

இந்நிலையில், துணைவேந்தர் சூரப்பா ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்களை யும் திரட்டி ஆராய்ந்த போது, சூரப்பா ஊழல் புகார் ஆவணங்களில் ஆதாரம் இருப்பதாக நீதிபதி கலையரசன் நேற்று  (12.2.2021) தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த வாரத்தில் பதிவாளர், தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர், அதிகாரிகள், அலு வலர்களிடம் விசாரணை நடத்தப்படும். ஏற்கெனவே பெற்ற ஆவணங் களில் ஆதாரங்கள் இருக்கும் நிலையில், அதிகாரிகளிடம் மேலும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. சூரப்பா மீதான குற்றச் சாட்டுகளில் ஆதாரங்கள் இருக்கின்றன தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், சூரப்பாவிடம் நேரடியாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment