அமெரிக்காவும் இந்தியாவும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 9, 2021

அமெரிக்காவும் இந்தியாவும்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றார். அதனை ஏற்காத டிரம்ப் ஆதரவாளர்கள் செய்த  நாடாளுமன்ற கலவர நிகழ்வு குறித்து அங்கு வாழும் இந்தியர்கள் தங்களின் உணர்வுகளை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

வாஷிங்டன் பல்கலைக்கழக முன்னாள் டீன் ஆர்.சி.சரவணபவன், ”மக்கள் மாக்களாக வெகுநேரம் ஆகாது என்பதற்கு அமெரிக்க கேப்பிட்டோலில்  நிகழ்ந்த தாக்குதல் காட்சிகளே சாட்சி. டிரம்ப் தனது அரசியல் ஆதாயத்திற்காக மக்களை உணர்ச்சிவயப்படுத்தி, பொய்களைப் புகுத்தி, மக்களாட்சியின் அடிப்படை நாகரி கத்தைப் படுகொலை செய்து விட்டார். குடியரசு கட்சியின் பெயரை முழுமையாக குலைத்துவிட்டார்,” என்கிறார்.

மக்களாட்சிக்கு எதிராகவும், பதவியேற்ற  அதிபர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராகவும் மக்களை டிரம்ப் தூண்டி விட்டதாகக் கூறுகிறார் சொர்ணம் சங்கரபாண்டி.

"இந்த பிரச்சினைகள் ஜனவரி 20 ஆம் தேதியோடு ஓய்ந்தாலும் அமெரிக்காவை இனவெறிப் பிளவு கொண்ட நாடாக டிரம்ப் மாற்றியுள்ளதால் தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்கள் நடக்கலாம், அவர் அதைத் தூண்டி விடுவார் என்று தமிழர்களாகிய நாங்கள் அஞ்சுகிறோம்,” என்று சொர்ணம் சங்கரபாண்டி கூறுகிறார். டிரம்ப் தனது சொந்த ஆதாயத்திற்காக பேசிவரும் தேசியவாதம் அமெரிக்கர்களுக்கு மட்டுமே என்றும், அமெரிக்கா ஒரே அமெரிக்கா அமெரிக் கர்களுக்கான அமெரிக்கா என்பதுபோன்ற தொடர் பிரிவினைவாதப் பேச்சுக்கள் மற்றும் நிறவெறியைத் தூண்டும் பேச்சுக்களால் மரணப் படுக்கையில் கிடந்த நிறவெறி மற்றும் பழைமைவாத அமைப்புகள் கடந்த 2 ஆண்டுகளில் மீண்டும் புத்துணர்வு பெற்றுள்ளன.

அமெரிக்க வரலாற்றில் யாரும் எதிர்பாராத விதமாக அமெரிக்கர்கள் அல்லாதவர்கள் என்று கூறி 40க்கும் மேற்பட்ட அயல்நாட்டினர் அங்கு தாக்கப்பட்டுள்ளனர். ஜோபைடன் அரசு பதவியேற்றபிறகு பிரிவினைவாதிகளும், அவர்களுக்கு ஆதரவாக வலதுசாரியினரும் களமிறங்கி உள்ளனர். மேலும் டிரம்ப் மற்றும் அவரைச் சார்ந்த சில தொழிலதிபர்கள் இவர்க ளுக்கு நிதி உதவியைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். இதனால் அங்கு வாழும் வெளி நாட்டினர் அச்ச உணர்வுடன் உள்ளனர். இதே கருத்தையே அமெரிக்க வாழ் இந்தியர்களும் பிரதிபலிக்கிறார்கள்.

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரால் நீண்ட காலமாக இங்கு குடியிருந்தவர்களை வெளியேற்றும் வேலை சட்ட ரீதியாக நடந்து வருகிறது.

மதத்தை மய்யப்படுத்தி இந்தியாவில் அண்மைக்காலமாகத் தூண்டப்பட்ட கலவ ரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்தியாவில் இத்தகைய அச்சுறுத்தல்கள், வெளி நாடுகளில் வாழும் இந்தியர்களுக்குப் பல வகையான நெருக்கடிகளைக் கொடுக்கும் என்பதைப் பொறுப்புணர்ச்சியோடு சிந்தித்து - இந்திய அரசு செயல்பட வேண்டும்.

வாக்கு வங்கிக்காக மத உணர்வுகளைத் தூண்டுவது பல வகைகளிலும் கேடான பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடக் கூடாது.

No comments:

Post a Comment