ஊடகங்களை சந்திக்கத் தயங்கும் "அதிசயப் பிறவிகள்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 11, 2021

ஊடகங்களை சந்திக்கத் தயங்கும் "அதிசயப் பிறவிகள்"

 தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடங்கள் பலவும் அரசு இயந்திரங்களாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில், அரசின் செயல்பாடுகளும், திட்டங்களும் சமூக ஊடகங் களில் அதிகப்படியான விமர்சனங்களை சந்தித்து வருகின்றன.

இதனைக் கட்டுப்படுத்தி அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அனைத்து நிலையிலும் கொண்டு வருவதற்காக 9 மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட குழு ஆலோசனை நடத்தி இருக்கிறது.

இந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ஸ்ம்ரிதி இரானி, பிரகாஷ் ஜவடேகர், ஜெய்சங்கர், முக்தர் அப்பாஸ் நக்வி, இணை அமைச்சர்கள் கிரண் ரிஜிஜி, ஹர்தீப் சிங் பூரி, அனுராக் தாக்கூர், பாபுல் சுப்ரியோ மற்றும் சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சிலர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

2020ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இவர்களுக்கு பிரதமர் மோடியும் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியதாக தெரிகிறது.

இருந்தபோதும், தவறான பிரச்சாரம் என்பதற்கான அளவுகோலை இந்த குழு வழங்கவில்லை.

எத்தகைய எதிர்மறைக் கருத்தாக இருந்தாலும் அதனைத் திறமையாக அரசுக்கு ஆதரவாக மாற்றி சுழலவிடக்கூடிய வல்லவர்களை அடையாளப்படுத்தி, அவர்களிடம் அந்த சவாலான பணியை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தக் குழு கூடி முடிவெடுத்திருக்கிறது.

இவர்கள் மேற்கொண்ட ஆலோசனையின் அடிப் படையில், இணையதள பிரச்சார யுக்தி குறித்த 97 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை தயாரித்துள்ளது.

சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021, இந்த ஆலோ சனைகளின் அடிப்படையில் அமைந்திருப்பதாக சொல் லப்படுகிறது.

இந்த ஆலோசனையில் பகிரப்பட்டதாக வெளியாகி யிருக்கும் சில முக்கிய தகவல்கள் :

"அரசுக்கு எதிரான கருத்துகளைப் பகிரும் இணையதள பிரபலங்கள் 50 பேரைத் தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்கு அவ்வப்போது தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.

அரசுக்கு ஆதரவாக செயல்படும் 50 முக்கிய இணையதள செல்வாக்கு மிக்கவர்களை அடையாளப் படுத்தி, அவர்களுக்குத் தேவையான கூடுதல் தகவலை வழங்க வேண்டும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களைத் தவறாமல் தொடர்ந்து தொடர்பு கொண்டு, அவர்கள் மூலம் வெளிநாடுகளில் நமது அரசு மீது பரப்பப்படும் எதிர்மறைக் கருத்துகளைத் தடுத்து நிறுத்துவதோடு, இந்தியாவின் பாரம்பரிய சுற்றுலா மற்றும் யோகா ஆகியவற்றை பரப்ப வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள வலதுசாரி சிந்தனையுள்ள கட்சிகளின் ஆதரவைப் பெறுவதன் மூலம் ஒருங் கிணைந்து செயல்பட முடியும்.

சாதாரண நேரங்களில் செய்யப்படும் பிரச்சாரங்கள் திட்டமிட்டதாக இருக்கலாம், ஆனால், போக்ரன் அணுகுண்டு வீச்சு போன்று ஒரு தாக்கம் இருக்க வேண்டும் எனும் போது அரசியல் ஆளுமைகளான நிதிஷ் குமார், நவீன் பட்நாயக் போன்றவர்களைப் பயன்படுத்த வேண்டும்".

அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யவும் கேள்விக் கேட்கவும் பயன்படும் இணையதள ஊடகங் களைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் விழி பிதுங்குவது போல் இருக்கிறார்கள் என்பது இந்த குழுவினால் வழங்கப்பட்டிருக்கும் ஆலோசனைகள் மூலம் புலப்படுகிறது.

பாசிஸ்டுகள் எப்பொழுதும் ஊடகங்களின் மீது தங்கள் கண்களைச் செலுத்திக்கொண்டே இருப்பார்கள். எதிர் கருத்துக்கள் - விமர்சனங்கள் என்பன பற்றி எதிர்கொள் வது ஜனநாயகத்தின் பால பாடமாகும். ஆனால் பா... ஆட்சி இதற்கு எதிர்மாறானது. செய்தியாளர்களை சந்திப்பதைத் தவிர்க்கும் அதிசய பிரதமர் - நநேரந்திர மோடி - ‘56' அங்குல மார்பளவு" இருந்தால் போதாது - பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்திக்கும் மனப் பான்மைதான் திறன் வாய்ந்த நிர்வாகிக்கு அழகு.

No comments:

Post a Comment