ஆசிரியருக்குக் கடிதம் >>> - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 14, 2021

ஆசிரியருக்குக் கடிதம் >>>

 ஜனநாயக கடமையாற்ற  மாநில போக்குவரத்து ஊழியர்களுக்குதேர்தல் ஆணையம் வழிவகுக்குமா?

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இம் முறை  அஞ்சல் வாக்கு முறையை ஆணையம் விரிவுபடுத்தி மத்திய அரசின் விமானம், கப்பல், ரயில்வே போன்ற போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு அஞ்சல் வாக்கு உரிமையை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது, ஆனால் மாநில அரசின் போக்குவரத்து ஊழியர் களுக்கு இவ்விதமான அஞ்சல் வாக்கு உரிமை வழங்கப்படவில்லை, இதனால் ஆயிரக் கணக்கான மாநில அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற முடிவதில்லை.

தேர்தல் தினத்தன்று (ஏப்.6) வாக்களிக்க முடியாமல் காலையிலிருந்து மாலை வரை பணியில் இருக்கும் போக்குவரத்து ஊழியர் களுக்கு வாக்குரிமை கேட்கிறார்கள், தேர்தல் நாளன்று தொலைதூர பேருந்தில் பணி புரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அஞ்சல் வாக்குரிமையை கேட்கிறார்கள். ஈரோட்டி லிருந்து சென்னை, தஞ்சாவூர், நாகர்கோயில் , காரைக்கால், பெங்களூரு போன்ற ஊர்களுக்கு அன்றைய தினம் பணிக்குச்  செல்லும் நடத்து நர்களும் ஓட்டுநர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியாத சூழ் நிலையில் உள்ளார்கள். அவர்களுக்கு மத்திய அரசின்  விமானம், ரயில்வே, கப்பல் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல தேர்தல் நாளன்று தொலை தூரத்திற்கு செல்லும் ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அஞ்சல் வாக்குரிமை கேட்கிறார்கள் மேலும் இவர் களைப் போலவே தேர்தல் நாளன்று தங்களின் பணிக்கு வரும்  மின்சாரத்துறை, பால்வளத் துறை, மருத்துவத்துறை சார்ந்த ஊழியர் களுக்கும் தொழிலாளர்களுக்கும் அஞ்சல் வாக்குரிமை அளித்தால் தேர்தலின் வாக்கு சதவீதம் இன்னும் சற்று கூடும். மேலும் அத்துறை சார்ந்தவர்களும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றிட வழிசெய்யும். எனவே உடனடியாக இதில் கவனம் கொண்டு ஆயிரக்கணக்கான ஊழியர்களின் ஜனநாயக வாக்கு உரிமையை தேர்தல் ஆணையம் காப்பாற்ற வேண்டும் என்பதே இத்துறை சார்ந்த ஊழியர்களின் கனிவான வேண்டு கோளாகும். அஞ்சல் வாக்கினை உரியவர்கள் தாங்களே பூர்த்தி செய்து வாக்களித்து உரிய முறையில் ஒட்டி நேரடியாக வாக்கு எண் ணிக்கை பெட்டியில் போட அனுமதிக்க வேண்டும். சென்ற முறை வாக்குச்சீட்டு கவர்களை  ஒட்டி தரக் கூடாது என மேலதி காரிகள் கூறி வாங்கியதால் பல குளறுபடிகள் நடந்ததாக அய்யம் உள்ளது. அவர்கள் யாருக்கு வாக்களித் தார்கள் என மேலதிகாரிகள் கண்டு கொள்வதற்கும் வழி உள்ளது. எனவே தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை யாரும் அறியாதபடி உரியவர்களே அந்தக் கவர்களை ஒட்டி வழங்க அனுமதிக்க வேண்டும். அஞ்சல் வாக்கு எண் ணிக்கையில் ஏற்பட்ட தவறினால் கடந்த முறை ராதாபுரம் தொகுதி அப்பாவு அவர்களின் வெற்றி பறிக்கப்பட்டதாக மக்கள் உணர்கிறார்கள். எனவே இம்முறை  அஞ்சல் வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்து வதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்பதே ஜனநாயக மீது நம்பிக்கை உள்ளோரின் வேண்டுகோளாகும்.

-  ஜெபராஜ் செல்லத்துரை

ஈரோடு

No comments:

Post a Comment