இரண்டு காந்திகள்!
கேள்வி: என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன் என்று ராஹுல் காந்தி தெரிவித்துள்ளாரே!
பதில்: தன் தந்தையைக் கொலை செய்தவர்களை மன்னிக்க ராஹுலுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், முன்னாள் பிரதமரின் கொலையாளிகளை மன்னிக்கும் உரிமை அவருக்குக் கிடையாது : - 'துக்ளக்', 10.3.2021.
ஆமாம், காந்தியாரின் கொலைக்கு மூளையாக இருந்த சாவார்க்காருக்கு நாடாளுமன்றத்தில் படம் திறக்கவும் - ஏன், பாரத ரத்னா கொடுக்கவேண்டும் என்று சிபாரிசு செய்யும் உரிமை மட்டும் இவாளுக்கு உண்டு - உண்டு!
ஓ, அது பெரிய இடத்து சம்பந்தம்!
கலப்புத் திருமணங்களால் ஜாதி ஒழியாது : - ‘துக்ளக்', 10.3.2021
ஆமாம். இது பூணூல்மீது சத்தியம்.
காந்தியாரோடு ராஜகோபாலாச்சாரியார் சம்பந்தியானது மட்டும் இனிக்குதோ! ஏனென்றால் அது பெரிய இடத்து சம்பந்தம் அல்லவா!
பட்டால்தான் புத்தி!
தமிழ்நாட்டில் இஸ்லாமியர் வாக்குகள் 12 விழுக்காடு, 40 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும்.
இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல் அ.தி.மு.க. எந்தத் தைரியத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி?
பட்டால்தான் புத்தி வரும்!
பட்டால்தான் தெரியும்!
தென்மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆபத்பாந்தவன் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திச் சென்றுவிட்டார் ராகுல் காந்தி : - ஜூனியர் விகடன், 9.3.2021.
சிறுபான்மையினர் என்று பா.ஜ.க. அலட்சியம் செய்தால், அது பெருவாரியான சரிவைச் சந்தித்துத்தான் தீரவேண்டும்.
ஒரு ‘லோடு' மக்கள்
தேர்தல் பிரச்சாரத்துக்காக மக்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி வந்தால் நடவடிக்கை.
ஒரு லாரி மண், ஒரு லாரி கருங்கல் ஜல்லி அடிப்பதுபோல ஒரு ‘லோடு' மக்கள் என்கிற அளவுக்கு மக்களைச் சரக்காக்கி கூட்டங்களுக்குக் கொண்டு வரும் கலாச்சாரம் வட நாட்டிலிருந்து இப்பொழுதெல்லாம் இங்கும் பரவி விட்டதே!
சூரப்பாவா - கொக்கா?
தமிழ்நாடு அரசு ஏற்காத நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை செயல்படுத்தியது ஏன்? : - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
சூரப்பவா - கொக்கா?
50 ஆண்டுகளாகக் கரடியாகக் கத்துகிறோமே!
மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது மனிதத் தன்மையற்றது : - உயர்நீதிமன்றம் சாடல்.
50 ஆண்டுகளுக்கு மேலாகத் திராவிடர் கழகம் மாநாடுகளில் தீர்மானம் போட்ட விஷயமாயிற்றே இது.
எச்சரிக்கை!
மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மேலும் 11 மாணவிகளுக்குக் கரோனா.
அலட்சியவாதிகளுக்கு ‘அர்ப்பணம்!'
கொட்டாவி விடவா நாடாளுமன்றம்?
15 ஆம் தேதிவரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைப்பு.
வேளாண் சட்டங்கள், டீசல், பெட்ரோல் விலை, சமையல் எரிவாயு உருளை விலையேற்றம் - இவற்றை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூடாதா?
நாடாளுமன்றம் எதற்கு விவாதிக்கத்தானே! கொட்டாவி விடுவதற்கு அல்லவே!
வேதமாவது - வெங்காயமாவது!
திருமலையில் வேத பாட சாலை மாணவர்கள் 50 பேருக்குக் கரோனா!
கரோனாவுக்கு வேதமாவது - வெங்காயமாவது - ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்ப் பார்ப்பனரே மரணம் அடையவில்லையா?
தோளில் பூணூல் இல்லை!
தோளில் சிறு காயம் - அதனால் தமிழக வீரர் நடராஜன் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் இடம்பெறவில்லை.
தோளில் காயமல்ல - தோளில் பூணூல் இல்லையே!
No comments:
Post a Comment