கேள்வி: தமிழ்நாட்டில் அவ்வப்போது பெரியார் சிலை அவமதிப்புக்கு உள்ளாக்கப்படுவது சங்கிகளின் கையாலாகாத் தனம் என்று கருதலாமா?
- வேல்விழி, வில்லிவாக்கம்.
பதில்: ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுக்கு, பெரியார் மண்ணான தமிழ்நாடு தங்கள் வயப்பட மறுப்பதோடு - தங்களைக் காலூன்ற முடியாதபடி தடுக்கிறதே என்ற ஆத்திரத்தால், என்ன செய்வது என்று தெரியாமல் பெரியார் சிலையை அவமதிப்பதில் இறங்கியுள்ளனர். ‘ஆத்திரம் அறிவுக்கு விரோதி’ என்பதை சுட்டிக்காட்டி, அதன் மூலம் தாங்கள் வேரூன்றுவதற்கு அடியோடு முடியாதபடி, கொள்ளிக் கட்டையால் இப்படித் தலையைச் சொறிந்து கொள்ளுகிறார்கள்!
‘பெரியார் ஒரு வாழும் தத்துவம்!’ என்பதை அவர்கள் இதன் மூலம் ஒப்புக்கொண்டு பயப்படுகிறார்கள். என்னே, வெளிச்சம் போட்டுக் காட்டும் வீணரின் கீழ் புத்தி!
இவ்வாறு செய்வது வரவேற்கத்தக்கதே! அப்போதுதான் ‘காற்றை விதைத்துப் புயலை அறுவடை செய்த கதை’ விளங்கும்!
கேள்வி: உத்தரப்பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்படும் பள்ளி ஒன்றில், அதில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் ராமர் கோயில் கட்ட நன்கொடை தராததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது அராஜகப் போக்கு அல்லவா?
- மணிகண்டன், மேல்மருவத்தூர்.
பதில்: பச்சையான அராஜகம். உ.பி.யில் காவிச் சாமியாரின் எதேச்சதிகாரம். மக்களின் பொறுமைக்கு விடப்பட்ட சவால். இதற்குக் கடும் விலை கொடுப்பார்கள். அங்குள்ள எதிர்க்கட்சிகள் - தமிழ்நாட்டில் திமுக போல் ஒருங்கிணைப்புக் களம் அமைக்கத் தவறியதின் விளைவே இவை. காலம் பதில் சொல்லும்!
கேள்வி: கடந்த அய்ந்து ஆண்டுகளில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வருகிறதே - எதனால்?
- ஆ.சே.அந்தோணி ராஜ், செங்கோட்டை
பதில்: அதுபற்றியெல்லாம் கவலைப்படாத அரசு மோடி அரசு - கார்ப்பரேட்டுகளின் கஜானாவை நிரப்புவதில்தான் அவர்களுக்கு அக்கறை. அதுதான் அவர்கள் கண்ணோட்டத்தில் “சப்கே சாத்; சப்கா விகாஸ்”
கேள்வி: தந்தை பெரியார் சிலையை மூடக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை நகராட்சிஆணையாளரிடம் காட்டும் போது, ஆணையர் திறந்துவிட்டார். மீண்டும் தேர்தல் ஆணையத்தினர் மூடுகிறார்களே! இவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?
- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி
பதில்: நமது தோழர்கள் உயர்நீதிமன்றத் தீர்ப்பு நகலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் காட்டி செயல்பட வேண்டும். பலவிடங்களில் பயன் கிடைத்துள்ளது.
கேள்வி: 2ஜி அலைக்கற்றை வழக்கில் நீதிமன்றம் ஆ.இராசா மற்றும் கனிமொழி குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்த பின்பும், தமிழகத்தில் உள்ள அமைச்சர்களும், பாரதீய ஜனதா தலைவர்களும் இன்னும் பழிசுமத்தி பேசுவது நீதிமன்ற அவமதிப்பில் வராதா?
- கோ.நாத்திகன், கரசங்கால்
பதில்: கோயபல்சின் குருநாதர்கள். பொய்ப் பிரச்சாரம் செய்து வீழ்த்த நினைக்கிறார்கள். அவர்களது தலைவர் மோடியே கோவையில் இப்படி ஒரு பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளாரே! விடுதலை ஆனது மட்டுமா? அத்தீர்ப்பில், ‘சாற்றப்பட்ட குற்றத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை; சி.பி.அய் எந்த ஆதாரத்தையும் அளிக்கவே இல்லை’ என்று தெளிவாய் கூறி விட்ட பிறகும், இப்படி புளுகுனிகள் விஷமம்! உண்மை வெளிச்சம் தருவது உறுதி!
கேள்வி: பணம் வைத்திருக்கும் வியாபாரிகளையும், பொது மக்களையும் துன்புறுத்தும் தேர்தல் ஆணையம் வாக்குக்கு ஆளும்கட்சியினர் கொடுக்கும் பணத்தை மட்டும் தடுப்பதாகத் தெரியவில்லையே - ஏன்?
- இளவரசன், சுத்தமல்லி
பதில்: அதிகார துஷ்பிரயோகம்; கண்டும் காணாப்போக்கு. முன்பு ஜெ. இருந்த போது ஆம்புலன்ஸ் வண்டியில் கைப்பற்றப்பட்ட பணம், கண்டெய்னர்களில் எடுத்து சென்றது - காவல்துறை வாகனங்களிலேயே பணம் கொண்டு போக ஆளுங்கட்சி பயன்படுத்தும் போக்கு போன்ற கடந்த கால நடைமுறைகள் - மீண்டும் தலை தூக்கக் கூடும். பணத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையுமே நம்பியுள்ளார்கள்.
எதிர்க்கட்சியினர் மக்களை நம்பி உள்ளார்கள். கூடுதல் கவனம் தேவை! தேவை!
கேள்வி: தொலைநோக்குத் திட்டங்களாக மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தது மத்திய அரசின் திட்டங்கள் என்று தமிழக பாஜக தலைவர் கூறியுள்ளாரே?
- அயன்ஸ்டின் விஜய், சோழங்குறிச்சி
பதில்: எப்படி சிரிப்பார்கள் மக்கள் என்பதே தெரியவில்லை; பரிதாபத்திற்குரிய தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் என்ற ஒரு “கீறல் கிராமஃபோன் தட்டு”!.
கேள்வி: பன்னாட்டு அளவில் ஆளுமைமிக்க 20 பெண்களில் ஒருவராக தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது தமிழர்களுக்குப் பெருமை தானே?
- கண்மணி, காஞ்சிபுரம்
பதில்: தமிழ்ப் பெண்ணுக்குக் கிடைத்த பெருமை,
தமிழ் மண்ணுக்குக் கிடைத்த பெருமை
- அவர் கொள்கை ஒரு புறமிருக்கட்டும்!
மனித நேயப் பார்வையோடு பாராட்டுவோம்!
கேள்வி: தொழிலாளர் நல நிதியத்தில் புதிதாக சேரும் உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டு வந்த வட்டி விகிதம் உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்படாது என்று பிஎஃப் நிறுவனம் அறிவித்துள்ளதே - இந்த அரசு யாருக்கானது.?
- திராவிட விஷ்ணு, வீராக்கன்
“கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா?” கூச்ச நாச்சமில்லாமல் தனியார் துறையை பெருக்க வேண்டுமே! ‘அரசே வியாபாரம் செய்வதா?’ என்று கொந்தளிக்கிறார் பிரதமர், அதன் பார தூர வெளிச்சங்களே - விளைவுகளே இவை!
கேள்வி: ஊரடங்கு நேரத்தில் எதையும் கண்டுகொள்ளாத அதிமுக அரசு தற்போது ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர் இலவசம் என்று அறிவித்துள்ளது எதைக் காட்டுகிறது?
- தாஸ், சிவகாசி
பதில்: ‘வித்தை காட்டும் சொத்தைகளை, சோணகிரிகளை’ மக்களுக்கு அடையாளம் காட்டப் போகிறது இந்த சட்டமன்றத் தேர்தல் - இதன் மூலம்!
ஆட்சியிலிருந்த போது ஏன் செய்யவில்லை? வாட் வரியை மாநில அரசு குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையுமே! அதனைச் செய்ய முன்வராது இப்படி ஒரு வித்தையா?
‘விலாநோகச் சிரிக்கின்றனர் வீட்டரசிகள்!’





No comments:
Post a Comment