வாய்ப் பேச்சு வீண்!
தெலங்கானாவில் ஹரிதாஸ்பூர் கிராமத்தில் பெண் குழந்தை பிறந்தால் பெரிதாகக் கொண்டாடுகிறார்கள்.
கருவில் பெண் குழந்தை என்று தெரிந்தாலே சிதைக்கும் மனப்பான்மையினருக்கு இது ஒரு பதிலடி. தாய்நாடு, தாய் மொழி, 'பாரத மாதா' என்று வார்த்தையளவில் பேசினால் மட்டும் போதுமா?
பிரதமராக முடியுமா மோடிஜி?
பகவத் கீதை உபதேசங்கள் அனைத்தும் நமது வாழ்க்கைக்கு அவசியம் : - பிரதமர் மோடி
கீதை கூறும் வருணாசிரமத்தின்படி சூத்திரரான நரேந்திர மோடி அரசாளும் பிரதமராக ஆக முடியுமா?
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரிப்பு - புதிதாக 685 பேருக்குத் தொற்று - முதியவர் உள்பட அய்வர் மரணம்.
அலட்சியம் - ஆபத்தில் போய் முடியும்!
வியாபாரப் பு(யு)த்தி!
நாட்டில் சமையல் காஸ் பயன்பாடு அதிகரித்துள்ளது: - இண்டியன் ஆயில் நிறுவனம் தகவல்
இதன்மூலம் என்ன கூற வருகிறது? சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு, உயர்வு என்று கூப்பாடு போடுவோரே, விலை உயர்வைப்பற்றி பொது மக்கள் கவலைப்படவில்லை, நீங்கள் ஏன் கூச்சல் போடுகிறீர்கள் என்று சொல்ல வருகிறார்களா?
அடித்த கொள்ளை போதாதா?
தமிழகக் கோவில்களைப் பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்; மீண்டும் வலுப்பெறும் பொதுமக்கள், ஆன்ம ஞானிகள் கோரிக்கை: -‘தமிழ் இந்து' 5 பத்தி தலைப்பு.
ஆகா, ‘தமிழ் இந்து'வின் அக்கறையோ அக்கறை! பக்தர்கள் கோவில்களை எப்படியெல்லாம் கொள்ளை அடித்தனர் என்று சர்.சி.பி.ராமசாமி அய்யர் கமிஷன் கொடுத்த அறிக்கை தெரியுமா இவர்களுக்கு?
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மன்னர் கிருஷ்ணதேவராயர் கொடுத்த வைர நகைகளைக் காணோம் என்ற குற்றச்சாட்டினை அறிவார்களா?
உ.பி.யிலும் ஒரு எடப்பாடி பழனிசாமி
உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு பா.ஜ.க. முதல்வர் யோகி ஆதித்யநாத் உரிமை கொண்டாடுகிறார் : - முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்
ஓ, அங்கொரு எடப்பாடி பழனிசாமியா?
அனுதாபம்!
தாக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி கூறுவது - அனுதாபம் பெற நாடகம் : - பா.ஜ.க. குற்றச்சாட்டு.
இவை எல்லாம் பா.ஜ.க.வுக்குத்தான் கைவந்த கலையாயிற்றே!
அப்படிப் போடுங்கள் அரிவாளை?
முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை - நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
‘மயிலே மயிலே!' என்றால் இறகு போடுமா?
No comments:
Post a Comment