உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி - அனுமதி தேவை! கழக வழக்குரைஞரணி கலந்துரையாடலில் தீர்மானங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 24, 2021

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி - அனுமதி தேவை! கழக வழக்குரைஞரணி கலந்துரையாடலில் தீர்மானங்கள்

 உயர்நீதிமன்றங்களின் உரிமையை உச்சநீதிமன்றம் பறிப்பதா?

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகளை அவமதிக்கப்படுவதன்மீது முறையான விசாரணையும் - தண்டனையும் அளிக்கப்படாதது ஏன்?

பெரியார் நினைவு சமத்துவபுரத்தில்சாமி' சிலைகளை அகற்றிடுக!

காலியாக உள்ள 220-க்கும் மேற்பட்ட உயர்நீதிமன்ற  நீதிபதி பதவிகளை சமூகநீதி அடிப்படையில் நிரப்பிடுக!

சென்னை, ஏப்.24 உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள 220-க்கும் மேற்பட்ட நீதிபதிகளின் பதவிகள் - சமூகநீதிக் கண்ணோட்டத்தில் நிரப்பப்பட வேண்டும் என்றும், உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக செயல்பட அனுமதிக்கப்படவேண்டும்; தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகள் தொடர்ந்து அவ மதிக்கப்படுவதன்மீது உரிய விசாரணை - தண்டனை மேற்கொள்ளப்படாததைக் கண்டித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந் துரையாடலில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

திராவிடர் கழக வழக்குரைஞர் அணி சார்பில் இன்று (24.4.2021) முற்பகல் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் இணைய வழியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

நீதிபதிகளின் காலி இடங்களை - சமூகநீதி கண்ணோட்டத்தோடு உடனடியாக நியமனம் செய்க!

இந்திய அளவில் 57 லட்சம் வழக்குகள் தேக்க நிலை யில் இருக்கின்றன என்ற தகவல் மிகவும் அதிர்ச்சிக் குரியது. வெகுமக்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் இதன் பொருளாகும்.

இதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டியது உச்சநீதி மன்றமா? மத்திய அரசா? என்கிற விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும் - இப்பொழுது உடனடியான தேவை  - காலியாக இருக்கும் 220-க்கும் மேற்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவிகளை மேலும் தாமதமின்றி நிரப்புவது மிகமிக அவசியம் என்பதை திராவிடர் கழக வழக்குரை ஞரணி வலியுறுத்துகிறது.

அப்படி நியமனம் செய்யப்படும்பொழுது - சமூகநீதிப் பார்வை அவசியம் என்பதையும் இக்கூட்டம் முக்கிய மாக சுட்டிக்காட்டுகிறது. இதில் பாலியல் நீதியும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2:

கரோனா: உயர்நீதிமன்றங்களின் உரிமையை உச்சநீதிமன்றம் பறிப்பதா?

கரோனா தொடர்பான எந்த வழக்குகளையும் உயர் நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், அத்தகைய வழக்குகளை உச்சநீதி மன்றமே நேரிடையாக விசாரிக்கும் என்ற உச்சநீதி மன்றத்தின் உத்தரவு - உயர்நீதிமன்றங்களுக்குரிய உரிமைகளைப் பறிக்கும் மிகை மிஞ்சிய செயல் என்று இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் உச்சநீதிமன் றத்தை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3:

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக செயல்பட அனுமதி தேவை!

ஹிந்தி பேசும் மாநிலங்களில் உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தாய்மொழியான ஹிந்தி அனு மதிக்கப்படுவதுபோல, தமிழ்நாட்டிலும் உயர்நீதிமன்றங் கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் வழக்காடு மொழியாக அதிகாரப்பூர்வமாக செயல்பட அனுமதி அளிக்கவேண்டும் என்ற நீண்ட கால கோரிக் கையை இக்கூட்டம் மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் நினைவூட்டி வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசும் இதற்கு முன்னுரிமை கொடுத்து, மத்திய அரசுமூலம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உரிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4():

தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் சிலைகள் அவமதிப்பும் - அடுத்த கட்ட நடவடிக்கையும்!

தமிழ்நாட்டில் தந்தை பெரியார், அண்ணல் அம் பேத்கர் சிலைகள் அவமதிக்கப்படுவதும், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

இவற்றின்மீது தமிழ்நாடு அரசும், காவல்துறையும் அக்கறையோடு எந்தவித நடவடிக்கையையும் எடுக் காதது மிகவும் கண்டிக்கத்தக்கது. குற்றமிழைத்தவர்கள் தண்டனைக்கும் உட்படுத்தப்படவும் இல்லை.

இந்த அவமதிப்புகள் திட்டமிட்ட வகையில் தொடர்ந்து நடைபெற்று வருவதையும் இக்கூட்டம் சுட்டிக்காட்டுவதுடன், இவற்றின்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை கழக வழக்குரைஞரணி மேற் கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4():

பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் மத வழிபாட்டுச் சின்னங்களை அகற்றுக!

தி.மு.. ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தனித்தன்மையான கருத்துருவாக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் பெரியார் நினைவு சமத்துவ புரங்கள்.

அந்த வளாகத்தில் எந்தவித மத வழிபாட்டுச் சின்னங்களுக்கும் இடமில்லை என்று ஆணையில் சொல்லப்பட்டு இருந்தும், அதில் குடியிருப்போர் ஒவ் வொருவரும் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டு இருந்தும், குமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் தொடங்கி செந்துறை வரை தொடர்ந்து சட்ட விரோதமாக அத்துமீறிசாமி' சிலைகள் வைத்து வழிபடும் போக்குத் தொடர்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்குப் புகார் தெரிவித்தும், ‘விடுதலை' வாயிலாக அறிக்கைகள் வெளியிட்டும், தமிழக அரசு கண்டும் காணாமல் அலட்சியமாக இருப்பதற்கு இக் கூட்டம் தன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

திராவிடர் கழக வழக்குரைஞர் அணி இது தொடர் பாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 5:

கரோனா காலத்தில் உதவிக்கரம் நீட்டுவோம்!

கரோனாவின் இரண்டாவது அலைவீச்சு உச்சக் கட்டமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் பாதிக்கப் பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற வகையில் உதவிக்கரம் நீட்டுவது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

No comments:

Post a Comment