சூழியல் பேரிடரை எதிர்கொள்வோம்! - 3 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 26, 2021

சூழியல் பேரிடரை எதிர்கொள்வோம்! - 3

உயரும் வெப்பத்தால் உருவாகும் பேரிடர்கள்


பேராசிரியர் அரசுசெல்லையா மேரிலாந்து

பல்கலைக்கழகம்பால்டிமோர், அமெரிக்கா

"அறிவற்றம் காக்கும் கருவி; செருவார்க்கும்

உள்ளழிக்கல்ஆகாஅரண்" - (குறள்: 421)

"அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்

அஃதறி கல்லாதவர் (குறள்: 427)

தொழில்புரட்சிக்கு பிறகு உருவான அத்தனை தொழில் சாலைகளும் எரிபொருளால் இயங்கியவை. ஒருபக்கம் பொருளாதார முன்னேற்றம், வளம் என  நவீன வாழ்விற்கு வழிகோலினாலும், மறுபக்கம் தொடர்ந்து கரியமிலவாயு (கார்பன்டைஆக்சைடு CO2) வெளியீட்டால் புவிசூடாகிக் கொண்டிருக்கிறது. தொழில் புரட்சிக்குமுன் 280 ppm (Parts per million) CO2 அளவு தற்போது 450 ஆக உயர்ந்திருக்கிறது. வெப்பம் கூட்டும் வாயுக்கள் (Greenhouse gases such as Carbon dioxide, Nitrous Oxide, Methane, H2O vapor, CFC, Ozone)  ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவில் புவி வெப்பத்தை கூட்டுகிறது.

புவியில் படும் சூரிய ஒளிக் கதிராற்றலில் 90% திரும்ப வானம் நோக்கியே எதிரொளிக்கப்படுகிறது. ஆனால் வெப்பம் கூட்டும் வாயுக்கள்வானத்தில் கூடுவதால், இந்த கதிராற்றல் மேலெழுந்து போவதை தடுத்து மீண்டும் புவிக்கே அனுப்பப்படுகிறது. வெப்ப வாயுக்கள் கூடக்கூட, புவியின் சராசரி வெப்ப அளவும் கூடிக் கொண்டே போகிறது. இதனால் வரும் பேரிடர்கள் பலப்பல. அவற்றுள் முக்கியமான பேரிடர்களையும், அவற்றை தடுத்தாட் கொள்ள, வெப்பம் குறைய, எடுக்கப்படும் முயற்சிகளையும் இங்கு காண்போம்.

2016ஆம் ஆண்டு 196 நாடுகளின் பிரதிநிதிகள் கையொப்ப மிட்ட பாரிஸ்ஒப்பந்தப்படி, புவிசராசரிவெப்பத்தின்உயர்வு தொழில் புரட்சிக்கால (1895ஆம் ஆண்டு) வெப்ப அளவைவிட 1.50 சி க்குள் மட்டுப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. தற்பொழுதே வெப்ப அளவு 1.00சி கூடியுள்ளது. ஓர் ஆண்டில் கார்பன்டை ஆக்ஸைடு வாயுவை மிகப் பெருமளவில் வெளியிடும் 5 நாடுகளை வரிசைப்படுத்தினால், சீனா முதலிடத்தையும் (1000கோடி டன்), அமெரிக்கா இரண்டாமிடத்தையும் (540 கோடிடன்), இந்தியா மூன்றாமிடத்தையும் (265 கோடிடன்), சோவியத் குடியரசு நான்காமிடத்தையும் (171 கோடிடன்), ஜப்பான் அய்ந்தாம் இடத்தையும் (116 கோடிடன்) பிடிக்கின்றன.

கூடிக் கொண்டிருக்கும் வெப்ப அளவை குறைக்கும் முயற்சிக்கு மிகப் பெரும் அளவில்உலகளாவியதிட்டமிடலும்செயல்பாடுகளும்முக்கியம். அதற்குமுன்னர், பெருமளவில் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நிலைமை என்னவென்று ஆழ்ந்து அறியவேண்டும். இது தொடர்பாக 2500 ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த சீன தத்துவ அறிஞர் கன்பூசியஸ் (சிஷீஸீயீuநீவீus) சொன்னது இங்குபொருந்தும்.

உங்கள் திட்டம் ஓர் ஆண்டுக்கென்றால், நெல்லை பயிரிடுங்கள்

உங்கள் திட்டம் பத்து ஆண்டுகளுக்கென்றால், மரங்களை நடுங்கள்

உங்கள் திட்டம் நூறு ஆண்டுகளுக்கென்றால்  குழந்தைகளுக்கு கல்விகொடுங்கள்

இன்று உலகளாவிய அளவில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் இளைஞர்கள்தான் சூழியல் பேரிடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் முன் நிற்கின்றனர். இப் புவியில் நீண்டகாலம் வாழப்போவது அவர்கள்தானே. சிறிய வயதிலேயே நடப்பதை புரிந்து கொண்டு, செயல்படவும் துவங்குவது, அவர்கள் எதிர்கால பணிகள் சிறக்க மிகவும் உதவும். சுவீடனைச் சார்ந்த 18 வயது மாணவி கிரடாதன்பர்க் (Greta Thunberg) உலகளாவிய அளவில் முன்னுதாரணமாக இருக்கிறார். அமெரிக்காவில் புரட்சிகரமானதாககருதப்படும்The Green New Dealஎன்ற திட்டத்தை முன்னெடுப்பவர்களில் முன்னிலையில்இருப்பது நியூயார்க்கைச் சேர்ந்த அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி, 31 வயதே நிரம்பிய அலெக்சாண்ட்ரிய ஒகாசியோ கோர்டெஸ் (Alexandria Ocasio-Cortezஷ்)

என்னதான் நடக்கும்?

அப்படி புவி வெப்பம் கூடிக்கொண்டே போனால்  என்னதான் நடந்து விடும்?

துருவப் பகுதியிலும் பிறபகுதிகளிலும் பனி  உருகும். அதனால் கடல்நீர் மட்டம் உயர்ந்து மக்கள் வாழும் பகுதி மூழ்கும். கோடிக்கணக்கில் மக்கள் நிரந்தரமாக இடம் பெயர வேண்டும்.

பெர்மாப்ராஸ்டு (Permafrost) உருகுவதால் அதில் மிகப் பெருமளவில் தேங்கியிருக்கும் மீத்தேன் வாயு வெளியேறும். புவி வெப்ப மாக்கலில் மீத்தேன் மிக முக்கியமான ஒன்று. மீத்தேன் கூடுதலால் பனி உருகுதல் இன்னும் கூடுதல் வேகத்தில் நடக்கும்.

உருகும் பனியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உறைந்திருந்த வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிரிகளும் வெளிவந்து காற்றில் கலக்கும். பெருந்தொற்று பேரிடர்களை விளைவிக்க வல்லவை இவைகளில் இருப்பதற்கு ஆதாரம் கிடைத்திருக்கிறது.

துருவம் மற்றும் இதரப்பனிபிரதேசங்கள் (Glaciers) உருகுவதால், புவிவெப்பம் இன்னும் 2.00சி அல்லது அதற்கும் மேல் உயர்ந்தால், மீள முடியாத விளைவுகள் ஏற்படும். உலக நாடுகளின் மெத்தனம் தொடர்ந்தால், புவிவெப்பம் 3.00சி, 4.00சி, 5.00சி, 6.00சி எனஉயரவும்வாய்ப்பிருப்பதாககருதப்படுகிறது. இன்னும் 20 ஆண்டுகளில்எல்லாம்வெட்டவெளிச்சமாகிவிடும்.

கடல் வெப்பம் கூடுதலும் புயல் மழையும்:

துருவப்பனி பிரதேசங்கள் உருகும்நிலை இன்னும் வரவில்லையாயினும், சராசரி வெப்பம்  1.00சி கூடியிருப்பதால், கடல்வெப்பம் கூடியிருக்கிறது. அதன் விளைவுகள் தொடங்கி விட்டன. கடல்நீரோட்டம்பிறழ்கிறது. பருவமழை தவறுகிறது. கடலோர காற்றழுத்த மண்டல வேறுபாடுகளால் பெரும் புயல் மழைசேதங்கள் உலகெங்கும் கடலோரப் பகுதிகளில் நடக்கிறது.

வறட்சியும், வேளாண்மை பாதிப்பும்:

புவி வெப்பமயமாதல் வறட்சியை கூட்டுகிறது, நீட்டிக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளாக நிகழ்ந்த வேளாண்மையின்அளவு குறைந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டு போவது வேளாண்மைக்கு மட்டுமல்லாமல், குடிநீருக்கே பஞ்சத்தை விளைவித்துக்கொண்டிருக்கிறது. வறட்சியால் வரும் வெப்ப மிகுதி, கலிபோர்னியா பகுதிகளில் காட்டுத்தீ பெருகு வதற்கும் காரணமாகிறது.

என்னதான் செய்வது?

மேலே சொன்ன சிக்கல் களெல்லாம் சாதாரணமானவை அல்ல. வள்ளுவர் சொன்ன

அஞ்சுவதஞ்சாமை பேதைமை; அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில் (குற்ற புகழ்)  என்ற குறளை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் Scientific American  என்ற இதழில் புகழ்மிக்க பேராசிரியர்கள், ஆய்வாளர்களின் கட்டு ரைகள் வெளிவரும். ”சூழியல் நெருக்கடி - 2020இல் மீள் பார்வைஎன்ற கட்டுரையில் அவர்கள் சொல்லும் தீர்வு 6 வகைப்படும்.

1) எரி பொருள் பயன்பாடு குறைப்பும், நீக்கலும்:

புவிவெப்பம் கூட்டும் வாயுக்களை வெளியிடும் எரி பொருள்களை (நிலக்கரி, பெட்ரோல்) படிப்படியாக குறைத்து 2050க்குள் முழுதுமாக நீக்கல் அவசியம். தேவையான மின்சாரத்தையும் ஆற்றலையும், சூரியஒளி வாங்கிகள் (Solar panels) மூலமாகவும், காற்றாலைகள் (Wind turbines) மூலமாகவும் பெற வேண்டும். அதற்கான தொழில்நுட்பம் உலகளாவிய அளவில் பலநாடுகளில் முன்னெடுக்கப்பட்டு, அவற்றிற்கான செலவுகளும் குறைந்து வருகிறது.

2) கார்பன் தொடர்பில்லா தொழில் வளர்ச்சி

காற்றாலைகள், சூரியஒளி மின்சாரம் போன்ற தொழில் நுட்பங்களுக்கு  அரசு ஆதரவு  கொடுத்தால்  வேலைவாய்ப்பு களும் பெருகும். காடுகளை அழிப்பதும், மரங்களை வெட்டுவதும், கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சும் ஆற்றல் பெற்ற ஒளிச் சேர்க்கையை குறைக்கிறாது. இது தொடர்பான அனைத்து தொழில்களையும் முடக்குவது முக்கியம். கார்பன் அடிப்படையை கொண்ட தொழில்களை முடக்கி, கார்பன் அடிப்படை இல்லா தொழில்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

3) மக்கள் தொகை குறைப்பு:

தற்போது 600 கோடியாக இருக்கும் மக்கள் தொகை மிக வேகமாககூடிக்கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்தா விட்டால், புவிவளங்கள்அழிவதும் சூழியல் சிக்கல்கள் கூடுவதும் இயல்பாக நடக்கும். கலைஞர் ஆட்சியின் போது எடுக்கப்பட்ட முயற்சிகள் தமிழ்நாட்டில் பயனளித்தது மிகவும் நம்பிக்கை தருகிறது. மக்கள்தொகை வேகமாக பெருகி வரும் மாநிலங் களிலும் நாடுகளிலும் இதுபோன்ற முயற்சிகள் அவசியம் அவசரம்.

4) மாசு வாயுக்கள் குறைப்பும், நீக்கமும்:

கார்பன்டை ஆக்சைடு வாயு மட்டுமின்றி பல பிற வாயுக் களும் புவி வெப்பமயமாக்கலுக்கு காரணிகளாகின்றன. கார்பன்டை ஆக்சைடை போல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்காவிட்டாலும், வெப்பம் கூட்டும் ஆற்றலை மிகவும் கூடுதலாக பெற்றவையே இந்த வாயுக்கள். மீத்தேன், ஓசோன், நைட்ரஸ் ஆக்ஸைடு, CFC போன்ற வாயுக்கள் பல்வேறு பயன்பாடுகளால் வெளிவிடப்படுகின்றன. இவையும் தடுக்கப்பட முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்

5) உயிர்ச் சூழல் மண்டலம் (Ecosystem) காப்பது:

பல்லாயிரக்கணக்கான வகை தாவரங்களும், பிராணிகளும், நுண்ணு யிரிகளும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழுகின்றன. பல்லாண்டு பல்லாண்டு இந்த சார்பு வாழ்க்கை நிலை பெற்றிருக்கும் போது,  அதனில்  மாற்றம் ஏற்பட்டால் விளைவுகளை கணிக்கமுடியாது. இப்போதெல்லாம் உலகெங்கும் வெட்டப்படும் மரங்களும், அழிக்கப்படும் காடுகளும், மூடப்படும் ஏரிகளும் சூழல் மண்டலங்கள் சிதைக்கப்படுவதை உரத்து பறைசாற்றுகின்றன. இவையெல்லாம் தடுத்து மீட்கப்பட வேண்டும். புதிய மரங்கள், புதியகாடுகள், புதிய ஏரிகள் உருவாக்கப்படவேண்டும். கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சவும் குறைக்கவும் தெரிந்த மகரந்தசேர்க்கை (Photosynthesis), மரம், செடி, கொடிகளில் கூடிக் கொண்டே போகவேண்டும்.

6) உணவு:

உலகெங்கும் தயாரிக்கப்படும் உணவில் மூன்றில் ஒருபங்கு வீணாகிறது. இந்த வீணாக்கல் தடுக்க, ஒவ்வொருவரும் முயல வேண்டும். உணவுக்காக வளர்க்கப்படும் பிராணிகளுக்கு செலவிடப்படும் சக்தி (Energy), தாவர உணவை உற்பத்தி செய்ய செலவிடப்படும் சக்தியைவிட பலமடங்கு கூடுதலாகும். சக்தி பயன்பாடு என்றாலே கார்பன்டை ஆக்ஸைடு வெளியீடும் கூடவே வருவதுதானே. எனவே பிராணிகளை உணவாக கொள்ளுதலை குறைத்து, தாவர உணவு வகைகளை கூட்டுதல் சூழியல்சிக்கல்களைதீர்க்கநிச்சயம்உதவும்.

மேலே சொன்ன சிக்கல்களும் தீர்வுக்கான வழிகளும் அறிஞர்கள்,  ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் என்ற மட்டத்திலிருந்து வெகுசன மக்களிடையே உள் வாங்கப்பட வேண்டும். அரசாங்கங்கள் சட்டங்கள் இயற்றினாலும் அவை நடைமுறைக்கு வர மக்களின் ஒத்துழைப்பு அவசியம் தானே.

புவி வெப்ப மாதலின் அளவு விரைவில் குறைந்து, ஒரு திடமான நிலைக்கு வருவது மிக முக்கியம். அதனை செயல்படுத்த முறையான திட்டங்கள் தீட்டப்படுவதும், அவைநடைமுறைக்கு வருவதும் அவசியம், அவசரம்.

"எதிரதா க்காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய் (குற்ற புகழ்) - என்ற குறளை உள்வாங்கி, புவி வெப்பமாதல் என்னும் அதிர வரும் பேரிடரை, முன்னரே எதிர் நோக்கி தீர்வு காண்போம்.

No comments:

Post a Comment