* முனைவர் பேராசிரியர்
ந.க.மங்களமுருகேசன்
செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
சமுதாய சீர்திருத்தத்தின் போர்வாள், எதிர்காலச் சந்ததியினரை நல்லறிவு பாதையில் இட்டுச்செல்லும் சுழல் விளக்குகள் தாம் நூலகங்கள். ஒரு சமூக சீர்திருத்தவாதியின் பணியைச் சமூக மாற்றத்தை ஒரு புத்தகம் - ஒரே ஒரு புத்தகம் கூடச் செய்து விடமுடியும்.
இந்த உண்மையைத் தெளிவாக உணர்ந்துதான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தம் ஆட்சிக்காலத்தில் அய்யன் திருவள்ளுவர் நூலகங்களை உருவாக்கினார். 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சென்னையில், அதுவும் ஆசியாவிலேயே பெரிய நூலகத்தை அமைத்தார்.
ஆனால், அந்த நூலகத்தை அண்ணா பெயரி லேயே கட்சி நடத்தும் அரசு, திருமண வரவேற்புக்கு இடமளித்துத் தக்கப் பராமரிப்பு இன்றிச் சீரழித்தது. 10 ஆண்டுக்கால சீரழிவிற்கு விடிவு தேட, வாராது வந்த மாமணி தளபதி மு.க.ஸ்டாலின் அரசு, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவி யேற்ற கையோடு பார்வையிட்டு விடிவு பிறக்கச் செய்தார்.
அத்தோடு, தென் தமிழ்நாட்டில் மதுரையில் தலைவர் கலைஞர் பெயரில் மாபெரும் நூலகம் ஓராண்டிற்குள் பல மாடிகளுடன் உருவாக்கிடவும் ஆணையிட்டார்.
பத்தாண்டுகள் கல்வியாளர்கள், மாணவச் செல் வங்கள், புத்தகம் படிக்கும் ஆர்வலர்கள் வாய்மூடி மவுனியாக அலங்கோல ஆட்சி கண்டு விடியல் வராதா, வெளிச்சம் பரவாதா? என ஏங்கிய வேளையில் தளபதி ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த கையோடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்ணா நூலகத்தை பார் வையிட்டு அதைச் சீர்திருத்தம் செய்ய நடவடிக்கை மேற் கொண்டபோது நம்பிக்கை ஒளி தோன்றியது.
அத்தோடு அமைச்சரின் பணி நிறைவுற்றது என எண்ணாமல் ஊழலில் ஊறித்திளைக்கும், நூலகத் துறையில் அமைச்சரின் கவனம் உடனடியாகத் திரும்ப வேண்டும், களை எடுக்கப்படவேண்டும் எனக் கண்களில் ஆர்வப் பெருக்கோடு காத்திருக்கும் அளவிற்கு நூலகத்துறை ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்குகிறது. வெளிப்படையாகவே லஞ்ச ஊழலில் மூழ்கி, முறையில்லா நிர்வாகத்தின் கீழ் சிக்கித் தவிக்கும் துறையாக விளங்குவதோடு பாரபட்சமின்றிச் செயல் புரியும் துறையாக விளங்கிடவில்லை. பொது நூலகத்துறை அரசின் துறையாக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்துற்ற பின்தான் தமிழ்நாட்டில் நூலகங்கள் பல்கிப் பெருகின.
தமிழ்நாட்டில் 32 மாவட்ட மய்ய நூலகங்கள், 1923 கிளை நூலகங்கள், 1919 ஊர்ப்புற நூலகங்கள், 751 பகுதி நேர நூலகங்கள், 14 நகரும் நூலகங்கள் உள்ளன. மொத்தத்தில் 4640 நூலகங்கள் பொது நூலக இயக் கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. சென்னையில் மட்டும் 153 நூலகங்கள் உள்ளன. பொதுநூலக இயக்கத்தின் கீழ் சுமார் 5600 பேர் பணியாற்றுகின்றனர்.
நூலகத்துறை அரசுத் துறையாக மாற்றம் பெறும் வரையில் நூலகப் பணியாளர்களின் ஊதியம்கூட அரசு நிதியிலிருந்து வழங்கிடாமல், நூலக வரியிலிருந்து தான் வழங்கப்பெற்றது.
நூல்கள் வாங்க நிதி
அரசு நூலகங்களில் பொதுமக்கள் படித்திடத் தினசரி, வார, மாத இதழ்கள், பொது அறிவு நூல்கள், இலக்கியம் உள்ளிட்டவை ஆண்டுதோறும் வாங்கு கின்றனர். இவற்றை வாங்கிட அரசாங்கம் நிதிஏதும் வழங்கிட வில்லை. பொதுமக்கள் சொத்து வரி செலுத்துவதில் பத்து விழுக்காடு நூலக வரியாக (Library Tax) வருகிறது. மேலும் கொல்கத்தாவில் உள்ள ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை ஆண்டு தோறும் 6 கோடி ரூபாய் மானியமாக வழங்குகிறது.
நூல்கள் வாங்குவதில் ஊழல்
ஆண்டுதோறும் நூல்கள் வாங்கிடும் முன், நூல்களைத் தேர்வு செய்ய குழு ஒன்று இருக்கும். இது அரசினால் நியமிக்கப் பெறும் குழு, இதில் நூல்களை படித்துத் தேர்வு செய்யக் கல்லூரிப் பேராசிரியர்கள் அரசுக்கு வேண்டிய எழுத்தாளர்கள் ஆகியோர் இருப்பர். இவர்கள் பரிந்துரைத்து நூலின் கடைசித் தாளில் கையொப்பமிட்டுக் கொடுப்பார்கள். அதில் பின்னர் காசு கொடுக்கும் பதிப்பாளர்களின் நூல்களின் பட்டியல் கொடுக்கப்படும்.
கடந்த 10 ஆண்டுக் கால ஆட்சியில் நூலகத் துறையைக் கவனிக்கும் பள்ளிக்கல்வி அமைச்சரிலி ருந்து நூலகத்துறை இயக்குநர், அலுவலர் வரை ஆண்டுதோறும் குறிப்பிட்ட விழுக்காடு லஞ்சமாக பெறப்பட்டு ஊழல் நடந்துள்ளது எனில் ஒன்றி ரண்டு புத்தகங்கள் வெளியிட்ட வர்களை தவிர்த்து நூல்கள் வழங் குவோர், பெறும் தொகையில் 20 விழுக்காடு, 25 விழுக்காடு என்று முன்னதாகவே கொடுத்தால்தான் நூல்கள் வாங்கப்படும். இதை ஆதாரத்துடன் மெய்ப் பிக்க முடியும்.இது ரகசியம் இல்லை, இது வெளிப் படையான உண்மை.
இதில் ஒரு வேடிக்கை - செலுத்தவேண்டிய லஞ்சப்பணத்திற்கு முதலில் தற்காலிக ஆணையும், முழுப்பணம் செலுத்தியபின் இறுதி ஆணையும் வழங்கப் பெற்ற நிகழ்வுகளும் உண்டு.
இலட்சக்கணக்கில் புத்தகம் வழங்கும் பதிப் பாளர்கள் 25 விழுக்காடு கொடுப்பதால் அவர்களுக்கு ஆயிரம் நூல்கள் ஒவ்வொரு தலைப்பிலும் வழங்கிட ஆணை கிடைக்கும்.
ஆண்டிற்கு ஒன்றிரண்டு நூல்கள் வெளியிடும் சாமானியர்களின் நூல்களில் ஆயிரம் படிகள் கூட வாங்குவது கிடையாது. 300 படிகள் மட்டுமே.
எல்லாப் புத்தகங்களும் ஒரே மாதிரியாக ஆயிரம் வாங்குவது இல்லை. 300, 600, 1000 என்று கொடுக்கும் காசுக்கு ஏற்ப நூல் எண்ணிக்கை இருக்கும். சில ஆண்டுகளில் அரசியல் செல்வாக்கு இருந்தால் 2000 படிகளுக்கு ஸ்பெஷல் ஆர்டர் வழங்குவதும் உண்டு.
அடுத்தக்கட்ட ஊழல்
அரசுக்கு, வேண்டிய பதிப்பாளர் எனில் அவர் வழங்கும் ஆயிரம் படிகளுக்கு ஒரே காசோலை என்று ராஜாராம் மோகன்ராய் நிதியி லிருந்து வழங்கப்படும்.
மற்றவர்கள் தங்கள் நூல்களை 32 மாவட்ட நூலகங்களுக்கும் தனித்தனியே அனுப்ப வேண்டும். மார்ச் - ஏப்ரலில் அனுப்பி வைத்தால் மாவட்ட நூலகங்களில் சரிபார்த்துக் காசோலை அனுப்பிட நவம்பர், டிசம்பர் ஆகும். சிலர் லைப்ரரி டூர் என்று போய் மாவட்ட நூலக அலுவலருக்குக் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்துக் காசோலை பெற வேண்டும்.
புத்தக வெளியீட்டாளர்கள் பெரும்பாலும் வட்டிக்கு வாங்கி லஞ்சம் கொடுத்து இருப்பதோடு கடனுக்குத் தாள் வாங்குதல், அச்சிடுதல் செய்திருப் பதால் நவம்பர், டிசம்பர் வரை காத்திருந்து வட்டி செலுத்துவதை விட நேரில் போய் கொடுக்க வேண்டி யதைக் கொடுத்து பெற வேண்டிய நிலை. இதில் 32 மாவட்டங்களில் இருந்தும் காசோலை வந்து விட்டதா என்று கணக்கு வைப்பதே சிரமமான நிலை. அவ்வாறு வந்ததும் இல்லை.
நூல்கள் வாங்குவதில் பாரபட்சம்
நடந்தது அதிமுக ஆட்சி என்பதால் திமுக, திக தலைவர்கள் பற்றிய நூல்கள், குறிப்பாக தந்தை பெரியார் குறித்த நூல்கள், ஆசிரியர் கி.வீரமணி எழு திய நூல்கள், அன்னை மணியம்மையார், தலைவர் கலைஞர் நூல்கள், எதுவும் பத்தாண்டுகளில் - வாங்கியதே இல்லை.
திராவிடர் கழகம் கடந்த பத்து ஆண்டுகள் மிகச்சிறப்பான நூல்கள், தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு, சிந்தனைகள் அய்யாவின் அடிச்சுவட்டில், வாழ்வியல் சிந்தனைகள் எனும் சிறப்பான இயக்கச் சார்பிலான நூல்கள்
என்று நூற்றுக்கணக்கான உயரிய தரம் வாய்ந்த பதிப்பாக வெளியிட்டபோதிலும் வாங்கியது கிடையாது என்பதால் தமிழக அரசு நூலக ஆணை என்பதையே மறந்து விட்டனர். இயக்கத்தவர்கள் வாங்குவதோடு சரி.
திராவிடர் கழகமா, திமுகவா - தீண்டாதே தண்டம் என்பது போல் பாரபட்ச நிலை நிலவியது. காவிகள் கூட்டு ஏற்பட்ட பிறகு இந்துமத நூல்கள் ஏராளமாக வாங்கினர் எனவும் தகவல். கோயில்கள், மத நூல்கள் எனில் ஓ.கே.
ஆங்கில நூல்களுக்குத் தனிக் கவனிப்பு
தமிழ் வெளியீடுகளுக்குப் புத்தகங்களில் என்ன விலை போட்டிருந்தாலும் கிரெவுன், டெம்மி என்று 16 பக்கங்களுக்கு ஒரு விலை என்று விலை மதிப்பீடு செய்வர்.
ஆனால் ஆங்கிலப் புத்தகங்கள் என்ன விலை வைத்திருந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்வர். ரூ. 200 மதிப்புள்ள புத்தகங்கள் அய்ந்து மடங்கு விலை, ஆறு மடங்கு வைத்திருந்தாலும் 25 விழுக்காடு கழிவுடன் அப்படியே ஏற்றுக் கொள்வர். டில்லியிலிருந்து வெளியீட்டாளர்கள் வந்து சென் னையில் தங்கி 1000, 2000 ரூபாய் என்று விலை வைத்துப் புத்தகங்களைத் தள்ளி விடுவர். ஆங்கில மொழி யிலான புத்தகங்கள் 90 அல்லது 200 படிகள் வாங்கப்படும். 200 ரூபாய் புத்தகம் 2000 ரூபாய்என்று விலை வைத்தால் கூட கேள்வி கிடையாது. 90 படிகளோ 200 படிகளோ ஒரு பெரிய தொகை ஆங்கில மொழி நூல்களுக்குச் சென்றுவிடுகிறது.
குறிப்பிட்ட சில பதிப்பகங்களின் வெளியீடுகள் மத்தியில் ஒன்றிய அரசின் பரிந்துரையில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு வாங்குகின்றனர். பத்து ஆண்டுகள் ஆய்வு செய்தாலே குறிப்பிட்ட பதிப்பகம் கோடிக்கணக்கான ரூபாய் களுக்கு விற்பனை செய்திருப்பது தெரியும். சிறிய பதிப்பகத்தினர் இவர்களைப் பிடித்துத் தங்கள் நூல்களைத் தள்ளி விடுவர்.
அரசாணை பெயரளவில்தான்
தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்ற நூல்கள் நூலகங்களுக்கு ஆயிரம் படிகள் வாங்க வேண்டும் என்பது கலைஞர் அரசு போட்ட ஆணை. அந்த அர சாணையை நூலகத்துறை மதிப்பதில்லை. அதிலும் தி.க. தலைவர்கள் வரலாற்று நூல் என்றால் நூல கங்களுக்கு ஒரு நூல் கூட வாங்குவதில்லை.
அன்னை மணியம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக எடுத்துரைக்கும் தென்றல் பதிப்பகம் வெளியிட்ட தமிழ்நாடு அரசின் ரூ. 30,000 பரிசு பெற்ற “தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈவெரா மணியம்மையார்” எனும் நூல் தேர்வுக்கு அனுப்பியும் வாங்கிடவில்லை.
சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? தமிழர் தலைவர் ஆசிரியர் திராவிடர் கழக இளைஞரணிக்கு ஆணை பிறப்பித்தார். தலைவர் ஆணையைத் தட்டாமல் செயலாக்கும் இளைஞர் அணியினர் அத்தனை நூல்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்து விட்டனர்.
ஏற்கெனவே வெளியிட்ட புத்தகத்தை அட்டையை மாற்றித் தலைப்பை மாற்றி அச்சிட்டுக் கொடுத்து ஆணை பெற்றவர்களும் உண்டு. விடிவு என்ன?
புத்தகங்களுக்கு உரிய தொகை
புத்தகங்களை வழங்கிய பதிப்பாளர் நூல்களை 32 நூலகங்களுக்குரிய மாவட்ட நூலகங்களுக்கு அனுப்பிவிட்டு ஒவ்வொரு நூலகத்தில் இருந்தும் காசோலைக்கு காத்திருப்பது, காசோலை வாங்க பணம் செலவழிப்பது ஆகிய தொல்லைகளுக்குப் பதில் நூல்களுக்கு ஆணை பிறப்பிக்கும் இயக்கு நரகமே ஒரே காசோலையாக வழங்கிட வேண்டும். மாவட்ட நூலகங்களிலிருந்து ஒப்புதல் சீட்டுப் பெற்று வழங்கிடலாம்.
மாவட்டங்கள் நூலக இயக்குநர் அலுவலகத்திற்கு அதற்குரிய தொகையை பணப்பரிமாற்றம் வாயிலாகச் செய்திடலாம். நூலக இயக்ககம் வரப்பெற்ற நூல் களுக்குரிய தொகை அனுப்பப் பெற்றதா? எனக் கண்காணிக்க வேண்டும்.

No comments:
Post a Comment