இயற்கைப் பற்களைவிட செயற்கைப் பற்களுக்கு ஆயுள் அதிகம். இருந்தாலும், ஈறுகளில் கோளாறு ஏற்பட்டால், சிகிச்சை தர, செயற்கைப் பற்களை அகற்றிவிட்டு, புதிய பற்களை பொருத்தவேண்டியிருக்கும். எனவே தான், அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய உத்தியை முன்வைத்துள்ளனர். முதல் முறை செயற்கைப் பற்களைப் பொருத்தும்போதே, அவற்றில் மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியையும் பொருத்தலாம் என அவர்கள் கருதுகின்றனர்.
இத்தகைய செயற்கைப் பல், வெளித் தோற்றத்திற்கு சாதாரண பல் போலவே இருக்கும். இதனுள் அழுத்தத்தால் மின் உற்பத்தி செய்யும் பீசோ எலக்ட்ரிக் சர்க்யூட், சிறு மின் கலன், அகச்சிவப்பு கதிரை உமிழும் நுண் எல்.இ.டி., விளக்குகள் போன்றவை இருக்கும். தாடைகள் அசைந்து பற்கள் அழுத்தப்படும்போது மின்சாரம் உற்பத்தியாகி கலனில் சேமிக்கப்படும். பிறகு அவ்வப்போது, அகச்சிவப்புக் கதிர்கள் பாய்ச்சப்பட்டு, கிருமிகள் கொல்லப்படும். அதையும் மீறி பற்களின் மேற்பரப்பில் கிருமிகள் தொற்றினால், கலனிலுள்ள மின்சாரம், கிருமிப் பூச்சு ஏற்படாமல் தடுத்துவிடும். இந்த செயற்கைப் பற்கள், மற்றவற்றைவிட அதிக ஆயுள் கொண்டவையாக இருக்கும் என இதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment