தாலேட்ஸ் ரசாயனம் குறித்த ஆய்வில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் உயிரிழப்பதாக தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

தாலேட்ஸ் ரசாயனம் குறித்த ஆய்வில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் உயிரிழப்பதாக தகவல்

வாசிங்டன், அக்.15 தாலேட்ஸ் என்ற ரசாயனத்தாலான பொருட்களை பயன்படுத்தியதால் அமெரிக்காவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக நியூயார்க் பல்கலை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நியூயார்க் பல்கலையின் கிராஸ்மேன் ஸ்கூல் ஆப் மெடிசின் நடத்திய தாலேட்ஸ் ரசாயனம் குறித்து ஆய்வு முடிவுகள், சுற்றுச்சூழல் மாசுபாடு என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வை முன்னின்று நடத்திய லியோனார்டோ ட்ரசாண்டே தெரிவித்துள்ளதாவது:

தாலேட்ஸ்  என்ற ரசாயனத்தை பயன்படுத்தி பிளாஸ்டிக், உணவைப் பதப்படுத்தும் பிளாஸ்டிக் கொள்கலன்கள், பொம்மை, ஆடை, ஷாம்பு உட்பட நுற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்பொருள்களின் மூலம் இந்த நச்சுப்பொருள் உடலில் சென்று உடல் பருமன், நீரிழிவு, இருதய நோய் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

மேலும் உடலில் உள்ள நாளமில்லா அமைப்பை பாதிக்கிறது. இதுவே ஹார்மோன் இடையூறு என்று அழைக்கப்படுகிறது. அதிகமாக தாலேட்சை பயன்படுத்துவதற்கும் முன்கூட்டியே மரணிப்பதற்கும் நிறைய தொடர்புகள் இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக இருதய நோய் காரணமாக அவர்கள் உயிரிழக்கின்றனர்.நாங்கள் நினைத்ததை விட இந்த ரசாயனம் சமூகத்தில் ஏற்படுத்தும் மரணங்கள் அதிகமாகவே இருக்கின்றன.

அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழக்கின்றனர். எனவே நச்சு நிறைந்த தாலேட்சின் பயன்பாட்டை கட்டுப்படுத்தினால் அமெரிக்கர்களின் உடல் நலத்தையும், பொருளாதார நிலையையும் காப்பாற்ற முடியும்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment