தாமிர உலோகத்திற்கு கிருமிகள், வைரஸ்களை விரட்டும் திறன் உண்டு. இதை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. எனவே ஆஸ்திரேலியாவிலுள்ள இரண்டு தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள் கிருமி நாசினி துணிகளை உற்பத்தி செய்ய முடிவெடுத்தனர். அவர்கள் உருவாக்கிய நிறுவனம் தான் 'சர்வைவான் லிமிடெட்!' இந் நிறுவனம் அண்மையில் முகக் கவசம், காற்று வடிகட்டி போன்ற பல பயன்களுக்கு உதவும் கிருமி நாசினி துணியை தயாரித்துள்ளது.
துய்மையான தாமிரத்தை துணி இழைகளின் மேல் படலம் போல படியவைக்கும் புதிய முறைப்படி உருவாக்கப்பட்ட இத் துணிக்கு மெடாலிக்ஸ் என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். மெடாலிக்ஸ் துணியில் தயாரித்த முகக் கவசத்தை அணிந்து கொண்டால் கரோனா வைரஸ் அண்டாது. துணி மீது வைரஸ் பட்டால், முதல் அய்ந்து நிமிடங்களில் 97 சதவீத வைரஸ்கள் செயல் இழந்து விடுகின்றன.
அடுத்த 15 நிமிடங்களுக்குள் 99 சதவீத வைரஸ்கள் செயல் இழக்கின்றன. அரை மணி நேரத்திற்கு பின் துணி மீது கரோனா இருந்த சுவடே தெரியாமல் மறைந்துவிடுகிறது.
மருத்துவர்களுக்கான கவச உடை, கையுறை, முகக் கவசம் என்று மெடாலிக்ஸ் துணியில் தயாரித்து, ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யும் வேலைகள் நடக்கின்றன. விரைவில் பிற நாடுகளுக்கும் மெடாலிக்ஸ் என்ற மருத்துவ கவசத் துணி விற்பனைக்கு வரும்.
No comments:
Post a Comment