இலங்கை கடற் கொள்ளையர்கள் மீண்டும் அட்டூழியம் நாகை மீனவர்களை அரிவாளால் தாக்கி ரூ.3 லட்சம் பொருட்கள் கொள்ளை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 27, 2022

இலங்கை கடற் கொள்ளையர்கள் மீண்டும் அட்டூழியம் நாகை மீனவர்களை அரிவாளால் தாக்கி ரூ.3 லட்சம் பொருட்கள் கொள்ளை

வேதாரண்யம், ஜன.27 நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை அரிவாளால் கொடூரமாக தாக்கி ரூ.3 லட்சம் பொருட்களை கொள்ளையடித்து இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

நாகை ஆரியநாட்டு தெருவை சேர்ந்தவர் சுப்புராஜ். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவருடைய மகன் வசந்தபாலன் (வயது25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த நிர்மல் (24), மணிகண்டன் (25), தில்லைநாதன் (26) ஆகிய 4 மீனவர்கள் நேற்று முன்தினம் மதியம் நாகையில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இரவு வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது இலங்கை பகுதியில் இருந்து 2 படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் திடீரென ரப்பர் குண்டுகளால் மீனவர்கள் மீது தாக்க தொடங்கினர். பின்னர் படகில் ஏறி தாங்கள் வைத்திருந்த அரிவாளால் கண்மூடித்தனமாக 4 மீனவர்களையும் வெட்டினர்.

பின்னர் படகில் இருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புடைய மீன்கள், 2 செல்பேசிகள், ஜி.பி.எஸ். கருவி, வலைகள், படகு என்ஜின் உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்புடைய பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

காவல்துறை விசாரணை

இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்களின் கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்த 4 மீனவர்களும் உடனடியாக ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் மேல்சிகிச்சைக்காக நிர்மல், வசந்தபாலன் ஆகிய 2 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மணிகண்டன், தில்லைநாதன் ஆகிய 2 பேரும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல்துறையினர்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் பகுதியை மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் பொருட்களை கொள்ளையடித்தனர். இந்த நிலையில் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொழில்முனைவோர் வர்த்தக வழிகாட்டுதல் திட்டம்

மதுரை, ஜன. 27- வாத்வானி அறக்கட்டளை மற்றும் தேசிய தொழில்முனைவோர் கூட்டமைப்பு இணைந்து வாத் வானி டேக்ஆஃப் திட்டத்தை அறிமுகப்படுத்து வதாக அறிவித்துள்ளன, இது குறிப்பிட்ட சில ஸ்டார்ட் அப்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு சிலிக்கான் பள்ளத்தாக் குக்கு இலவசமாக  பயணம் செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. வாத்வானி டேக்ஆஃப் திட்டமானது, தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு  வலைப்பின்னல் அமைப்பு, வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் வழிகாட்டுதல் மற்றும் முதலீட்டாளர்களுக்கு யோசனைகளை அளிப்பதன் மூலம் தொ ழில்முனைவோருக்கு சிறந்த வர்த்தக சுற்றுசூழல் அமைத்து தருகிறது.

இதுகுறித்து இந்த அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி சஞ்சய்ஷா கூறுகையில், “இந்திய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பு 2021 ஆம் ஆண்டில் 78 யூனிகார்ன்கள் மற்றும் 8 அய்பிஓக்களுடன் உயர்ந்து உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பாக மாறியது. 2025 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் அதன் லட் சிய இலக்கை நிறைவேற்ற, இந்தியாவுக்கான துடிப் பான மற்றும் உலகளாவிய  ஸ்டார்ட்அப் சுற்றுச் சூழல் அமைப்பு அவசியம் என்று கூறினார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு

கைரேகை பதிவில் கோளாறு ஏற்பட்டாலும்

உணவுப் பொருட்களை தடையின்றி வழங்க அறிவுறுத்தல்

சென்னை, ஜன.27 விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகையை பதிவு செய்வதில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டாலும், அத்தியாவசியப் பொருட்களை தடையின்றிபொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் 2.18 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டது. இவற்றை ஜன.31ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரங்களில், இணையதள சுணக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கைரேகை பதிவு மேற்கொண்டு பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பொருட்கள் கிடைக்காமல் திரும்பிச் செல்கின்றனர்.

இதை தவிர்க்கும் வகையில்,கைரேகை பதிவு அங்கீகரிக்கப்படாவிட்டாலும், விற்பனை முனைய இயந்திரத்தில் குடும்ப அட்டையின் எண்ணை பதிவு செய்து, பதிவேட்டில் ஒப்புதல் பெற்று குடும்பஅட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி உடனடியாக வழங்க அனைத்து நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது நியாயவிலைக் கடைகளில் 4ஆம் வாரத்திலும் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

No comments:

Post a Comment