பா.ஜ.க. தலைமையிலான - நரேந்திர மோடி தலைமையிலான - இந்திய ஒன்றிய அரசை கண்டித்து எது எதற்கு எல்லாம் போராடுவது? நினைத்தால் தலையைச் சுற்றுகிறது.
எந்த அரசமைப்புச் சட்டத்தின்மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவி ஏற்கிறார்களோ, அந்த அரசமைப்புச் சட்டத்தின் சரத்துகளைத் தலையைச் சுற்றித் தூக்கி எறிவதில் அசகாய சூரர்கள்.
எந்த அளவுக்குச் சென்றார்கள் என்றால், குடியரசு நாள் அரசு விளம்பரத்தில் - இந்திய அரசமைப்பு முகப்புரையில் வலியுறுத்தப்பட்டுள்ள 'செக்குலர்' என்ற சொல்லையே தூக்கி எறிந்து விட்டு விளம்பரம் செய்தனர் என்றால் இந்த அரசின் உள்ளார்ந்த உணர்வைப் புரிந்து கொள்ளலாம்.
ஏதோ தெரியாமல் விடுபட்டது என்று எண்ணி எவரும் நினைத்து ஏமாந்து போய்விட வேண்டாம்.
அவர்கள் விரும்புவது, ராமராஜ்ஜியம், இந்து ராஜ்ஜியம் என்று இருக்கும்போது அவர்கள் எப்படி செக்கு லரிசத்தை மதச்சார்பின்மையை ஏற்றுக் கொள்வார்கள்?
இந்தியா - அதாவது பாரத் என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு என்று அரசமைப்புச் சட்டம் அறுதியிட்டுக் கூறியுள்ள நிலையிலும் அந்தத் தன்மையோடு நடந்து கொள்கிறார்களா?
நடந்து கொள்ள மாட்டார்கள்; காரணம் அவர்கள் மாநிலங்களை ஏற்றுக் கொள்வதில்லை. இந்தியா ஒரே நாடு என்பது அவர்கள் அடிப்படைக் கொள்கை. அவர்களின் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கர் தனது 'ஞான கங்கை'யில் அதனைத்தான் வற்புறுத்துகிறார்.
1952இல் நடைபெற்ற ஜனசங்க தேர்தல் அறிக்கையில் மாநிலப் பிரிவினை கூடாது என்று திட்டவட்டமாகவே தெரிவித்துள்ளனர். இந்தியாவின் ஆட்சி மொழிக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதமே என்று திட்டவட்டமாக கோல்வால்கர் 'ஞானகங்கை'யில் கூறியுள்ளார்.
இவற்றின் காரணமாகவே தேசிய கல்விக் கொள்கை என்றும், இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் படிக்க வேண்டும் என்றும் திட்டமிடுகின்றனர். வற்புறுத்துகின்றனர்.
கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்து, நெருக்கடி காலத்தில் பொதுப் பட்டியலில் வைக்கப்பட்டது. இந்த இடத்தில் ஒன்றை முக்கியமாகக் குறிப்பிட்டாக வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கே திரும்பக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் நமது நோக்கம் - விருப்பம் என்றாலும், பொதுப் பட்டியல் என்பதன் (சிஷீஸீநீuக்ஷீக்ஷீமீஸீt) உண்மையான பொருள் ஒத்திசைவுப் பட்டியல் என்று ஆழ்ந்த நுண்ணறிவோடு கூறியவர் நமது தலைவர் ஆசிரியர் அவர்களே. இப்பொழுது தலைவர்கள் பலரும் இந்தப் பொருளில் கூறிவருவது வரவேற்கத்தக்கது.
இந்த நிலையில் கல்வி தொடர்பாக ஒன்றிய அரசு எந்த ஒரு முடிவை எடுத்தாலும் மாநில அரசின் கருத்தைக் கேட்க வேண்டியது கட்டாயமாகும்.
அத்தகைய நிலையை ஒன்றிய அரசு பின்பற்றுகிறதா?
கல்வித் திட்டமாக இருந்தாலும் சரி, இந்திய அளவில் இடஒதுக்கீட்டில் உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு பிரச்சினையாக இருந்தாலும் சரி, வேளாண் சட்டங்களாக இருந்தாலும் சரி - தானடித்த மூப்பாக ஒன்றிய அரசு நடந்து கொண்டு தானே இருக்கிறது.
இப்பொழுது மாநிலங்களில் பணியாற்றும் அய்.ஏ.எஸ். அதிகாரிகளை மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே ஒன்றிய அரசு மாற்றம் செய்யலாம் என்பது எல்லாம் எத்தகைய எதேச்சதிகாரப் போக்கு!
சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு பவள விழா என்பது - 130 கோடி மக்களுக்கானது தானே! அதில் ஒன்றியத்தில் உள்ள அத்தனை மாநிலங்களுக்கும் உரிய இடம் அளிக்கப்படுவதுதானே நியாயம்! இன்னும் சொல்லப் போனால் 'லெப்டினெட்டு கவர்னர்'களுக்கு அதிகாரம் உள்ள யூனியன் பிரதேசங்களுக்குக்கூட உரிய இடம் அளிக்கப் பட்டால்தான் முழுமை பெறும். ஆனால் என்ன நடக்கிறது. இங்கே - 22 முழு மாநிலங்களுக்கும்கூட இடம் இல்லை. வெறும் 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் மட்டுமே தலைநகர் அணி வகுப்பில் இடம் பெறுமாம்.
மாநில உரிமைக்காகக் குரல் கொடுத்தால், பிரிவினை வாதம் என்போர், மாநிலங்களைப் புறக்கணித் தால், அது என்ன வாதம் என்பதை விளக்குவார்களா?
எது எதற்குத்தான் போராடுவது?
No comments:
Post a Comment