வீடுகள் விற்பனை உயர்வு
கடந்த ஆண்டில் வீடுகள் விற்பனை, முக்கிய மான எட்டு நகரங்களில், 51 சதவீதம் அதிகரித்திருப்பதாக நைட் பிரங்க் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.அதேசமயம், அலுவலகங்களை குத்தகைக்கு விடுவது 3 சதவீதம் சரிந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வீடுகள் விற்பனை, கடந்த ஆண்டில் 38 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரிலையன்சின் புதிய முதலீடு
ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனம், அதன் மளிகைப் பொருட்கள் வினியோக வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக, டன்ஸோ நிறுவனத்தின் 25.8 சதவீத பங்குகளை வாங்கி உள்ளது.
இந்த பங்குகளை, ரிலையன்ஸ் நிறுவனம் 1,488 கோடி ரூபாய் முதலீட்டில் வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி திரட்டும் வொக்கார்ட்
மருந்து துறையைச் சேர்ந்த நிறுவனமான வொக்கார்ட் 1,000 கோடி ரூபாயை திரட்டிக் கொள்வதற்கு, அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு அனுமதி அளித்துவிட்டதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது.கடன்களை அடைப்பது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பொதுவான நிர்வாகச் செலவு ஆகியவற்றுக்காக இந்த தொகை உரிமை பங்குகள் வெளியீட்டின் வாயிலாக திரட்டப்பட உள்ளன.
ஸ்டார்பக்ஸ் - புதிய கிளைகள்
டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனம், இந்தியாவில் புதிதாக திருவனந்தபுரம் உள்ளிட்ட ஆறு நகரங்களில் தன் கிளையை துவங்கி உள்ளது. இதையடுத்து இதன் கிளைகளின் எண்ணிக்கை 26 நகரங்களில், 252 ஆக உயர்ந்துள்ளது. டாடா கன்ஸ்யூமர் மற்றும் ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனங்களின் 50:50 கூட்டு முயற்சியாக இந்த நிறுவனம் துவங்கப்பட்டது.
வட்டி விகிதம் உயரலாம்
ரிசர்வ் வங்கி, ஏப்ரலில் இருந்து வட்டிவிகித்தை உயர்த்தக் கூடும் என, ஜப்பானை சேர்ந்த நோமுரா ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது. கரோனா தொற்று பரவலால் வழங்கல் பாதிக்கப்பட்டு, நுகர்பொருட்கள் விலை அதிகரித்து, பணவீக்கம் அதிகரிக்க கூடும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment