தமிழ்நாடு அரசின் செயல்பாடுதான் இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய திராவிட மாடல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 13, 2022

தமிழ்நாடு அரசின் செயல்பாடுதான் இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய திராவிட மாடல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை, ஏப்.13- தமிழ்நாடு அரசின் செயல்பாடுதான் இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய திராவிட மாடல், என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

வன்கொடுமையைத் தடுக்க நாம் எத்தனையோ முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஆனாலும் ஆங் காங்கே சில நிகழ்வுகள் தலைதூக்கவே செய்கின்றன. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு, வழக்கப்பட்டு வந்த இழப்பீடு தற்போது உயர்த்தி வழங்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்குகளில் 60 நாள்களுக்குள் விசாரணையை முடிப்பதற்குத் தலைமைச் செயலாளர் தலைமையில் நடத்தப்படும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டங்களில், அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

விழிப்புணர்வுப் பயிற்சிகள்

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரைச் சமுதாயக் கண்ணோட்டத்துடன் அணுகி, அவர் களுக்கு ஏற்பட்ட காயத்தை ஆற்றும் முயற்சியாக முறையாக நிவாரணம், வளமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் ஆகியவற்றை வழங்குவதற்குத் தேவையான விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் நான் அறிவித்தேன். சமத்துவம் காண்போம் என்ற தலைப்பில் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் சொல்லி இருந்தேன். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளன.

ஜாதி வேறுபாடுகள் இல்லா சுடுகாடுகள்

தற்போது உள்ள சிறப்பு நீதிமன்றங்களுடன் சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை என வழக்குகள் அதிகம் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சில கிராமங்களில் ஜாதி வேறுபாடுகளற்ற சுடுகாடுகள் பயன்பாட்டில் உள்ளன. இத்தகைய சிற்றூர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணத்தின் மூலமாக அந்த ஊரின் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. 10 மாவட்டங்களில் தலா 3 ஊர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு மாவட்டத்திற்கு ரூ.30 லட்சம் என்ற வீதத்தில், ரூ.3 கோடி இத்திட்டத்தின்கீழ் விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் பள்ளிகளை மேம்படுத்த

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவ தற்காக நபார்டு வங்கியின் ஊரக கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின்கீழ் ரூ.123 கோடி இந்த நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் பகுக்கக்கூடிய கொள்முதல்களில் 5 சதவீதமானது, தமிழ்நாட்டைச் சார்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினத் தொழில் முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கென ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை, நந்தனத்தில் எம்.சி.ராஜா மாணவர் விடுதி வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் சுமார் 75 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதி ரூ.40 கோடி செலவில் கட்டப்படும்.

சமத்துவபுரங்கள்

முக்கிய நாள்களில் இதுவரை நடைபெற்று வந்த சமபந்தி போஜனம், இனி சமத்துவ விருந்து என்று பெயர் மாற்றம் செய்யப்படும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் இன்னல்களை களையவும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளை நமது அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும். ஒருபக்கம் சமத்துவபுரம், இன்னொருபக்கம் சமூகத்தில் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை, சட்டத்தின் வாயிலாகவும் விழிப்புணர்வு பரப்புரைகள் வாயிலாகவும் மேற்கெ £ள்ளும் நமது அரசின் செயல்பாடுதான், இன்றைக்கு இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய திராவிட மாடல் என்பதை நான் பெருமையுடன் பதிவு செய்கிறேன்.

இந்த மாடல் ஆனது அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களின் குரல். அவர்களது உரிமை களை பெற்றுத் தரும் குரல். தோளோடு தோள் நின்று அவர்களைப் பாதுகாக்கும் குரல். அவர்களின் வாழ்வியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு நமது அரசு எப்போதும் துணை நிற்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment