வன்புணர்ச்சியை (Rape) சமஸ்கிருத சுலோகங்கள் தடுக்குமாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 21, 2019

வன்புணர்ச்சியை (Rape) சமஸ்கிருத சுலோகங்கள் தடுக்குமாம்


நமது நாட்டில் மத்தியில் ஏற்பட்ட காவி ஆட்சியில் கவர்னர்களாக நியமிக் கப்பட்ட பலரும் "அதி மேதாவிகளான நவீன பிரகஸ்பதிகள்!"


என்ன அற்புதமான யோசனைகளை இலவசமாகவே அள்ளி விடுகின்றனர்!


நோபல் பரிசுக் குழுவினர் ஏனோ இன்னமும் இத்தகைய மஹா, மஹா "அறிவியல் அற்புதானந்தாக்களை"க் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்! வருத்தமாக இருக்கிறது!


நாட்டில் நடைபெறும் 'ரேப்' எனப்படும் வன்புணர்ச்சிகள் (Rape) - பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க மராத்திய கவர்னர் 'பக்தசிங் கோஷியாரி' என்ற உலக மகா அறிவாளி ஒரு அரிய யோசனையை தள்ளினார்.


சமஸ்கிருத சுலோகங்கள் 'ரேப்'பை, வன்புணர்ச்சியைத் தடுக்கும். எனவே மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், சமஸ்கிருத சுலோகங்களைச் சொல்லிக் கொடுத்தால் இவைகளை நடக்காமல் தடுத்து விடலாமாம்!


'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில நாளேட்டில் 20.12.2019 அன்று இப்படி ஒரு செய்தி!


எப்படி வாயால் சிரிப்பது என்று தெரியாமல் திணறுகிறீர்களா? பாவம்.


பா.ஜ.க. ஆட்சியில் எப்படிப்பட்ட "கான்சிஸ்டியூஷனல் எக்ஸ்பர்ட்டுகள்" கவர்னர்களாக நியமனம் ஆகி இருக் கிறார்கள் பார்த்தீர்களா?


அதிகாலை எழுந்து கட்சி மாறிய வர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து, 72 மணி நேரத்திற்குப் பின் ராஜினாமா வாங்கி, அடுத்தவருக்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்யத் தயாரான அரசியல்சட்டப் பாதுகாவலர் இவர்!


இவர் ஒரு நிகழ்ச்சியில், ஜம்னா லால் பஜாஜ் நிறுவன விழாவில் மேற் கண்டவாறு திருவாய் மலர்ந்துள்ளார்!


ஹிந்துத்துவாவில் மூழ்கித் திளைத்த ஒரு தகுதியாலேயே  - இவர்கள் கவர்னர்களாக நியமிக்கப்படுகிறார்கள்!


அதனால் இப்படி தங்களிடம் உள்ள 'சரக்கை' வெளியே அவிழ்த்துக்  கொட்டுகிறார்கள்!


"என்ன விநோதம் பாரு


எவ்வளவு ஜோக்குப் பாரு பாரு!"


என்று பாடுங்கள்!


இந்தயோசனையை முன்பே தந்திருந்தால் "பொள்ளாச்சி" நிகழ்வு களைத் தடுத்திருக்கலாமோ!


தேவபாஷை சமஸ்கிருதம் - தேவர் களுக்குத் தலைவர் புராணப்படி தேவேந்திரன் -


அந்த இந்திரன் அகலிகையை "கற்பழித்தானே" அப்போது சமஸ்கிருத சுலோகங்கள் ஏதும் கிடைக்காததால் தானோ? அட சாம்பிராணிகளா?


சிவபெருமான் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளிடம் நெருங்கியபோது சமஸ்கிருத சுலோகங்களை  அவர்கள் ஓதப்பட வாய்ப்பில்லாததால்தானோ அந்த அசம்பாவிதங்கள் நடந்தனவோ - நமக்குப் புரியவில்லை.


மராத்திய கவர்னர் பெருமான் தான் விளக்க வேண்டும்.


அவருக்குத் தெரிந்திருக்காத ஒரு தகவலை நாம் தெரிவித்து சந்தேகம் கேட்கத் தோன்றுகிறது?


காஞ்சிபுரத்தில் ஓர் அர்ச்சகன் சமஸ்கிருத சுலோகங்களைத்தான் தினமும் கடவுள் பிரார்த்தனையின்போது கூறி அர்ச்சனை செய்பவன், கர்ப்ப கிரகத்திற்குள்ளேயே எத்தனைக் குடும்பப் பெண்களிடம் முறையற்ற (வன்புணர்ச்சி) செய்கையில் ஈடுபட்ட கதை சிரிப்பாய் சிரிக்கிறது.


சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் அர்ச்சகன் பத்ரிநாத்தையும் இதில் இணைத்துக் கொள்ளலாம்.


சமஸ்கிருத சுலோகங்கள் ஏன் இவர்களை தடுக்கவில்லை?


இதுதான் யாருக்கும் புரியாத 'தேவரகசியம்' போலும்!


பல கோடி மக்களால் பேசப்படும்(?) எழுதப்படும்(?) நம் தேவபாஷைக்கு 'ஜே ஜே!' .


இவரையே அடுத்து துணை ஜனாதி பதி - ஜனாதிபதியாகவும் ஆக்கினாலும் ஆக்குவார்கள் - யார் கண்டது?


-''ஊசி மிளகாய்''


No comments:

Post a Comment