‘‘‘விடுதலை'யின் வீர வரலாறு''- காணொலியில் தமிழர் தலைவரின் வரலாற்றுக் குறிப்பு உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 16, 2020

‘‘‘விடுதலை'யின் வீர வரலாறு''- காணொலியில் தமிழர் தலைவரின் வரலாற்றுக் குறிப்பு உரை

பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்ததிலிருந்து எத்தனையோ சாதனைகளைச் செய்த பனகால் அரசர் மறைந்தவுடன் தந்தை பெரியார் அவர்கள் ‘‘நமது அருமைத் தலைவர்'' என்ற தலைப்பில் எழுதிய இரங்கல் இலக்கியம்!



சென்னை, ஜூன் 16 மருத்துவக் கல்லூரியில் சமஸ் கிருதம் படித்திருந்தால்தான் மனு போட முடியும் என்பதை ஒழித்ததிலிருந்து, பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்ததிலிருந்து, எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்கிறார் பனகால் அரசர். அவர் மறைந்ததும் தந்தை பெரியார் அவர்கள் ‘‘நமது அருமைத் தலைவர்'' என்ற தலைப்பில் இரங்கல் இலக்கியம் எழுதினார் என்று  வரலாற்றுக் குறிப்புகளை எடுத்துச் சொல்லி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.


‘விடுதலை'யின் வீர வரலாறு!


கடந்த 13.6.2020 அன்று மாலை  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘‘விடுதலை'யின் வீர வர லாறு'' எனும் தலைப்பில் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார்.


அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


மீண்டும் பெரியார் திடலில் ‘விடுதலை' அலு வலகம் வருவதற்கு அந்தத் தீர்ப்பு உதவி செய்தது. ஏனென்றால், அதற்குமேல் அங்கே அலுவலகம் தொடர முடியாது என்ற நிலை.


தவத்திரு அடிகளாரை வைத்து, ‘விடுதலை' அலுவலகத்தைத் தொடங்கினோம். திறப்பு விழாவின்போது அவர் உரையாற்றியதை நம்மு டைய கழகத் துணைத் தலைவர், மற்றவர்கள் அடிக்கடி எடுத்துச் சொல்வது வழக்கம்.


பாலகிருஷ்ண பிள்ளை தெருவில் எங்களுக்கு ஏ.சி. ரூமோ, பர்னிச்சர் போன்றவையோ கிடையாது. மிஷின் இயங்கினாலே, அந்தத் தெரு முழுவதும் சத்தம் கேட்கும். ஏலம் எடுக்கப்பட்ட மிஷின்கள், ரி-கண்டிசன் செய்யப்பட்ட டபுள் பீடர்கள் எல்லாம் இருக்கும்.


பி.இராமமூர்த்தியின் திருமணம் -


பாராட்டு - தேநீர் விருந்து!


வசதியெல்லாம் இருக்காது - அங்கேதான் அய்யா அமர்ந்துகொண்டு பல நேரங்களில் தலை யங்கம்  எழுதுவார்கள். அதில் எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. இன் னுங்கேட்டால், அந்த அலுவலகத்தில்தான், கம்யூனிஸ்ட் இயக்கத்தினுடைய மிகப்பெரிய தலைவர்களில் ஒருவரான தோழர் பி.இராம மூர்த்தியினுடைய திருமணம் - பாராட்டு - தேநீர் விருந்து தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது என்பது மிகமிக முக்கியமாகும்.


அந்த ‘விடுதலை' அலுவலகத்தில்தான் தந்தை பெரியார் அவர்களை, பல தலைவர்கள் சந்தித்திருக்கிறார்கள். இது ஒரு காலகட்டம்.


ஆனால், அய்யா அவர்கள், இப்படியெல்லாம் நெருக்கிப் பிடித்ததற்கு என்ன காரணம்? அவர் களைப் பொறுத்தவரையில், எத்தனையோ சங்க டங்களை அவர்கள் அனுபவித்து இருக்கிறார்கள்.


தந்தை பெரியார் நெருப்பாற்றலைத் தாண்டியிருக்கிறார் -


எவ்வளவு சங்கடங்களைத் தாங்கியிருக்கிறார்


ஏனென்றால், 1925 ஆம் ஆண்டு, ‘குடிஅரசு' பத்திரிகையை காங்கிரசில் இருக்கும்பொழுது தொடங்கி, காங்கிரசை விட்டு வெளியே வந்து, அந்தப் பத்திரிகையை மிகப்பெரிய அளவிற்கு வளர்த்து, பிறகு மற்ற பத்திரிகைகள், ஏடுகளையெல்லாம் வளர்த்துக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், நம்முடைய ஏடுகளால், எந்த மக்கள் பயனடை கிறார்களோ, அந்த மக்கள்  பயனடைவதைப்பற்றி கவலைப்படாமல், நன்றி காட்டுவதற்கு அவர்கள் தயாராக இல்லை என்பதை அய்யா அவர்கள் பல நேரங்களில் உணர்ந்து, மனக் கொதிப்படைந்து, அந்தக் கொதிப்பை எப்படி, எப்போது வாய்ப்புக் கிடைக்குமோ அப்படி வெளியிட்டு இருக்கிறார் என்று நினைக்கும்பொழுது, அவர் எத்தனை நெருப்பாற்றைத் தாண்டியிருக்கிறார் - எவ்வளவு சங்கடங்களைத் தாங்கியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.


இன்றைக்கு ‘விடுதலை' பத்திரிகை இன்றைக்கு நிலைத்திருக்கிறது என்று சொன்னால், அய்யா செய்த ஏற்பாட்டினால் தான். உங்களுடைய ஒத்துழைப் பினால்தான் அது. உங்களுடைய அன்பால் தாங்கிப் பிடிக்கக்கூடிய மிகப்பெரிய நட்புறவு பாலம். இவையெல்லாம் அதற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கிறது என்று சொன்னாலும்கூட, எப்படி இருந்தது என்பதற்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும்.


ஓர் இரங்கல் இலக்கியம்.


சாதனைகளைச் செய்தவர்


பனகால் அரசர்!


நீதிக்கட்சியினுடைய முதலமைச்சராக இருந்த கடலூர் சுப்பராய ரெட்டியார் இறந்தவுடன், பனகல் அரசர் முதலமைச்சராக வருகிறார்.


நீண்ட காலம் சாதனைகளைச் செய்த ஒருவர் திராவிடர் இயக்கத்தில் என்றால், பனகல் அரசர்தான் ஆவார்.


அந்தப் பனகால் அரசர் அவர்கள் மறைந்த வுடன், தந்தை பெரியார் அவர்கள் அருமையான, ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய ஒரு கட்டுரையை எழுதுகிறார். அதைப் படித்தால் மிகவும் வியப்பாக இருக்கும்.


அது வெறும் இரங்கல் செய்தி மட்டுமல்ல - இரங்கல் இலக்கியமாகும். நாகம்மையார் அவர்கள் மறைவின்போது, தந்தை பெரியார் அவர்கள் எழுதியது இரங்கல் இலக்கியம் என்று நாம் எல்லோருமே வியந்து பாராட்டக் கூடிய அளவிற்கு, பெண்ணுரிமை, வாழ்வியல் தத்துவம் இவை அத்தனையும் உள்ளடக்கியது அது.


நிறைய தோழர்களுக்கு இந்தத் தகவல் தெரியாது. அதனால், அந்தச் செய்தியெல்லாம் வெளியில் வரவேண்டும்.


‘விடுதலை'யினுடைய வரலாறு எப்படிப்பட்ட தடங்களைத் தாண்டியிருக்கிறது - எப்படிப்பட்ட அஸ்திவாரங்களை அது ஆழமாகக் கொண் டிருக்கிறது - இந்த ஏடுகள் இன்றைக்கு நிலைத்திருப்பதற்கு எது முக்கிய காரணியாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான், நான் இந்தக் காணொலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யச் சொன்னேன்.


உங்களோடு இந்தக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதில் நான் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைகிறேன்.


‘‘நமது அருமைத் தலைவர்''


உதாரணமாக, பனகால் அரசல் இறந்தவுடன், ‘‘நமது அருமைத் தலைவர்'' என்ற தலைப்பில் தந்தை பெரியார் அவர்கள் இரங்கல் செய்தியை ஏழு பக்கத்திற்கும் மேலே எழுதுகிறார்.


இரங்கல் செய்தியே ஒரு கட்டுரையாக இருக் கிறது. அந்தக் கட்டுரையே ஒரு ஆராய்ச்சிக்குரிய கட்டுரையாக இருக்கிறது.


அதிலே, அன்றைய அரசியல், அன்றைக்கு இருந்த சூழல், அன்றைக்கு இருந்த நம்முடைய எதிர்ப்பு, திராவிட இயக்கத்தினுடைய சாதனை - அதைச் செய்வதற்கு உறுதி மிக்க ஒரு தலைமைத்துவம் - அதற்கு ஏற்பட்ட கருவிகள் எப்படிப்பட்ட கருவிகள் என்று சொல்லும் நேரத் தில் ஒன்றைச் சொல்லுகிறார்.


அதுமட்டுமல்ல, தலைவர்கள் தொடர்ந்து மறைந்திருக்கிறார்கள். டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்கள் மறைந்திருக்கிறார்கள். தியாக ராயர் போன்றவர்கள் மறைந்த சூழ்நிலையில், தத்தளித்துக் கொண்டிருக்கின்றது இயக்கம் என்று சொல்லுகிறபொழுது,


‘‘நமது அருமைத் தலைவர்'' என்ற தலைப் பில் தந்தை பெரியார் அவர்கள் அருமையாக எழுதியிருக்கிறார். வாய்ப்புக் கிடைக்கும்பொழுது, நம்முடைய தோழர்கள், குறிப்பாக எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கருத்தாளர்கள் அனைவரும் அந்த முழுச் செய்தியை மீண்டும் மீண்டும் படித்து, அந்தக் காலகட்டத்தில் எப்படிப்பட்ட உணர்வுகள் இருந்தன; ஆரியத்தினுடைய தொல்லையை எப்படியெல்லாம் அரசியல் வானிலே, மற்ற இடங்களிலே எல்லாம் சமாளித்தார்கள் என்று சொல்லுகின்றார் தந்தை பெரியார் அவர்கள்.


இன்றைக்கு நாம் பல சாதனைகளைச் செய்தது நீதிக்கட்சிப் என்று சொல்லுகின்றோமே, அத்தனை சாதனைகளுக்கும் மிகப்பெரிய மூலகர்த்தாவாக, காரண கர்த்தாவாக, செயல்வீரராக இருந்தவர் பனகல் அரசர் அவர்கள்.


பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தவர்


மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதம் படித்தி ருந்தால்தான் மனு போட முடியும் என்பதை ஒழித்ததிலிருந்து, பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்ததிலிருந்து, எத்தனையோ சாதனை களைச் செய்திருக்கிறார்கள்.


இன்றைக்குக்கூட வெளிவந்த ‘ஞாயிறுமலரில்' ‘நடப்பதற்குரிய உரிமை' என்று எழுதியிருப்பதை, பிரின்சு அவர்கள் அந்தக் கட்டுரையைப் படியுங் கள் என்று உங்களுக்குச் சொன்னார்.


ஆகவே, இதில் நிறைய செய்திகள் இருக் கின்றன. அதை வரிசையாகச் சொல்லிக் கொண்டு போனால், அந்த ஒரு கட்டுரையே இந்த முழு பேச்சுக்கு உரியதாக ஆகிவிடும்.


ஆகவேதான், நான் அந்த செய்திகளை விட்டுவிட்டு நேரே இந்த செய்திக்கு வருகிறேன். ‘‘கதறுகிறோம், நாம் சொல்லுகிறோம்'' அப்போது அய்யா அவர்கள் ஒரு கருத்தைச் சொல்லுகிறார்.


அந்தக் கருத்து எவ்வளவு ஆழமாக, அழகாக - இழக்கக்கூடாத ஒரு தலைமையை இழந்த காலகட்டத்தில்கூட, தொண்டர்கள் எப்படி ஆறுதல் அடைவது? பல விஷயங்களுக்கு இந்த இரங்கல் கட்டுரை என்பது செய்தியாக மட்டுமல்ல, பாடமாக இருக்கிறது.


அந்தக் கட்டுரையில் ஒரு பகுதி,


‘‘தந்தையை (பனகால் அரசர்) இழந்த மக்கள் தங்களது வாழ்க்கையை இனி தந்தை இல்லாமல் எந்தவிதமாய் நடத்துவது என்கின்ற யோசனை கொண்டு, மார்க்கம் கண்டு நடக்க முயற்சிப்பார்களே ஒழிய, வேறு தந்தை யார் என்று நினைத்துக் கொண்டு தேடித் திரிய மாட்டார்கள். அதுபோலவே நாமும் இனி தலைவரைத் தேடிக் கொண்டு திரிவதைப் போன்ற பைத்தியக்காரத்தனம் வேறில்லை என்று நினைக்க வேண்டும்.''


இன்னுங்கேட்டால், காங்கிரசிலே தந்தை பெரியார் அவர்கள் இருந்தபொழுது, அறநிலையப் பாதுகாப்புத் துறை சட்டத்தைப் பனகால் அரசர் கொண்டுவந்து நிறைவேற்றியபொழுது, காங் கிரசில் இருந்துகொண்டு - எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு - ஆளுங் கட்சியாக இருக்கிற நீதிக்கட்சி முதலமைச்சரைப் பாராட்டுகிறார். அதற்காகத்தான் சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் எதிர்ப்புக் காட்டுகிறார்கள், அந்தக் காலகட்டத்திலே!


பிறகு காங்கிரசிலிருந்து வெளியேறிய கால கட்டத்திலும்கூட தந்தை பெரியார் அவர்கள் பற்றி, ஒரு வியப்பான செய்தி, 1938 ஆம் ஆண்டில்தான் நீதிக்கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒப்புக்கொள்ளப்பட்டு, பிறகு நீதிக்கட்சிக்குத் தலை வரானார் என்ற செய்தி தெரிந்த செய்தி. ஆனால், தெரியாத செய்தி ஒன்று உண்டு.


அது என்னவென்று சொன்னால், 1927 இல், தியாகராயருக்குப் பிறகு, பனகால் அரசர் தலைவராக வந்தபோது, தந்தை பெரியார் சுயமரியாதைக் இயக்கத்தவராக இருக்கிறார்.


தந்தை பெரியாரைப் பார்த்து, பனகால் அரசர் ஒன்றைச் சொல்லுகிறார். ‘‘எங்கள் செயற்குழு, இயக் கக் குழு உங்களை நீதிக்கட்சியின் காப்பாளர் என்ற பொறுப்பேற்றுக்கொண்டு, எங்களுக்கு வழிகாட்டவேண்டும்'' என்று கேட்ட நேரத்தில்,


தந்தை பெரியார் அவர்கள் உடனே ஒப்புக் கொள்ளவில்லை; யோசிக்கலாம், நான் பிறகு பார்த்துச் சொல்லுகிறேன்'' என்று அதிலிருந்து நழுவிவிட்டார்.


அந்த அளவிற்குப் பெரியார்மீது பற்றும், நம்பிக் கையும் உள்ளவர் நம்முடைய பனகல் அரசர் அவர்கள்.


அதேபோன்று, பனகால் அரசர் அவர்களின் தொண்டு, அவருடைய சாதனைகளைப் பாராட்டி யவர் தந்தை பெரியார் அவர்கள்.


(தொடரும்)


No comments:

Post a Comment