“பெருந்தொற்றுக் காலத்தில் விநாயகர் சிலை ஊர்வலங்களை எப்படி அனுமதிப்பது?”
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி
மதுரை, ஆக.18 கரோனா பெருந்தொற்று காரணமாக விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்தவும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்தவும், நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத் துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை இன்று (18.8.2020) விசாரித்த நீதிபதி ஆர்.பொங்கியப்பன், “கரோனா தொற்று பெருமளவில் பரவிக் கொண்டிருக்கும் சூழலில், நாளொன்றுக்கு 6,000 பேர் வரையில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு எப்படி அனுமதி அளிக்க முடியும்?” என்று கேள்வியெழுப்பினார்.
மனுதாரர் ஏற்கெனவே மூன்று முறை மாவட்ட நிர்வாகத்துக்கு விண்ணப்பித்திருந்தும், கரோனா தொற்று காரணமாக மாவட்ட நிர்வாகம் விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. மீண்டும் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த நீதிபதி, “கரோனா தொற்று இல்லாவிட்டால், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது தொடர்பாக உயர்நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியமில்லை” என்றும், “வழக்கை மனுதாரர் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும், இல்லையெனில் அவருக்கு அபராதம் விதிக்க வேண்டியதிருக்கும்” என்றும் தெரிவித்து வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார்.
No comments:
Post a Comment