தமிழ்நாடு சட்டமன்றத்தில் குட்காவை காட்டியது உரிமை மீறல் என்பதற்காக 21 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்மீதான சபாநாயகரின் நடவடிக்கை மிரட்டல், தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள (இன்று, 25.8.2020) தீர்ப்பின்மூலம் ஒன்றுமில்லாததாகி விட்டது.
‘‘பூச்சாண்டி'' மதிப்பிழந்துவிட்டது!
இதுபோன்ற குற்றம் சாட்டும் நிகழ்வுகள் சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களால் பலமுறை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறப்பட்டதுண்டு.
புதுச்சேரி சட்டமன்றத்தில் ஒருமுறை எதிர்க்கட்சித் தலைவர் எம்.ஓ.பாரூக் மரைக்காயர் ‘பட்ஜெட்' நகலைக்கூட தாக்கல் செய்து- இது எப்படி வெளி யாகியிருக்கிறது என்பதாகக் கேட்ட வரலாறு எல்லாம்கூட உண்டு.
இன்று தி.மு.க.வுக்குக் கிடைத்த வெற்றி ஜனநாயக உரிமைக்குக் கிடைத்த மகத்தான வெற்றி!
சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் பேசினால், அவருக்கு சட்டமன்றத்தில் உள்ள பாதுகாப்பு (Immunity) என்பதால், நடவடிக்கை எடுக்க முடியாது என்பதன் தத்துவ நீட்சிதான் - இந்தத் தடை செய்யப்பட்ட குட்கா, நாட்டில் எங்கும் எளிதாகக் கிடைக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் காட்டியது. அவர் ஆற்றியது ஜனநாயகக் கடமை. குட்காவை பரவலாக்கியவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே ஒழிய, சுட்டிக்காட்டும் எம்.எல்.ஏ.,க்கள்மீதா என்பதே சட்டம் அறிந்தவர் களின் பொது அறிவுடன் கூடிய கேள்வி.
தி.மு.க.வின் இந்த வெற்றி அச்சார வெற்றி. இது ஒரு நல்ல முன்னோட்டம்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
25.8.2020
No comments:
Post a Comment