மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5சதவீதம் உள் ஒதுக்கீடு; - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 16, 2020

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5சதவீதம் உள் ஒதுக்கீடு;

சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றம்



சென்னை,செப்.16, தமிழக சட்டமன்றத்தில் நேற்று (15.9.2020) மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்தார்.


தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான இட ஒதுக்கீடு சட்ட முன்வடிவை அறிமுகம் செய்து, உறுப்பினர்களின் விவாதத் திற்குப் பின்னர் ஆற்றிய பதிலுரை:


"தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி களில் சேருவதற்கான இட ஒதுக் கீட்டு முறையினைக் கொண்டு வருதல் குறித்த சட்டம் நிறை வேற்றப்படும் என நான் அறிவித் ததற்கிணங்க தற்போது இச்சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு, அதன்மீது உறுப்பினர்கள் தங் களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக என்னுடைய கருத்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.


தமிழக அரசு, நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட் டத்தினை தொடர்ந்து நடத்தும் என்பதைப் பேரவையில் உறுதி படத் தெரிவித்துக் கொள்கிறேன்.


நான் 21.3.2020 அன்று சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது என்ற நோக்கத்தில்தான் அவர் களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தேன். இது சம்பந்தப் பட்ட அனைத்துப் புள்ளி விவரங் களையும் தொகுத்து உரிய பரிந் துரையையும் தமிழ்நாடு அரசுக்கு வழங்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசனின் தலை மையின் கீழ் 21.3.2020 அன்றே ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.


அவ்வாணையம் கடந்த 8.6.2020 அன்று தனது பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்குச் சமர்ப்பித்தது.


இந்த அறிக்கையின்படி, தமிழ் நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், சமூக, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதும், அவர்களைப் பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டு தேர்வில் வகைப்படுத் துவது சமநீதிக்கு முரணானது என்றும், அதனால் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதே சம நீதியை நிலைநாட்ட வகை செய்யும் என்றும் ஆணையம் பரிந்துரை செய்தது. மேலும், அரசுப் பள்ளி களில் பயின்று, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு, அனைத்து இள நிலை மருத்துவப் பிரிவுகளி லும் உள் இட ஒதுக்கீடு வழங்கிட ஏது வாக ஒரு சிறப்புச் சட்டம் இயற்றிட அவ்வாணையம் பரிந்துரைத்தது.


கடந்த 15.6.2020 மற்றும் 14.7.2020 அன்று தமிழ்நாடு அமைச் சரவைக் கூட்டத்தில், ஆணையத் தின் பரிந்துரை விவாதிக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


அதன் அடிப்படையில், இந்த ஆண்டு முதல், மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க தமிழக அரசு முடிவு செய்து, அதையே சட்டமாக்க இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட முன்வடிவினை அறிமுகம் செய்து, ஆய்வு நிலையில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.


தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,550 மொத்த மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர் களில் 0.15 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் கிடைக்கின்றன.


தற்போதுள்ள மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களில், இந்த 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதால், சுமார் 300-க்கு மேல் இடங்கள் ஏழை, எளிய மாண வர்களுக்கு இதன் மூலம் சம நீதி வழங்க இது வழிவகுக்கும்.


தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணாக்கர்கள், அதாவது ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உட்பட / நகராட்சி / மாநகராட்சி /தாழ்த்தப்பட்டவர் நலன் / பழங்குடியினர் நலன் / பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, கள்ளர் சீர்மர பினர் / மாற்றுத்திறனாளிகள் நலன் / வனம் / சமூக பாதுகாப்பு (சிறார் சீர்திருத்தப் பள்ளிகள்) ஆகிய துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் மற்றும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-இன் கீழ் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று, பின்னர்


12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கு,


மருத்துவம், பல் மருத்துவ மற்றும் இந்திய மருத்துவ பட்டப் படிப்பு சேர்க்கையின் போது மாநில ஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கவும்,


மேற்படி இடஒதுக்கீட்டு முறையினை நீட் தகுதியின் அடிப் படை யில் உள்ள அனைத்துப் பிரிவுக ளுக்கும் விரிவாக்கம் செய்யவும்,


மேலும், மேற்படி இட ஒதுக் கீட்டு முறையினை, அனைத்து மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி உள்ளடக்கிய அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கும் அரசால் ஒதுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு இடங்களுக்கும் பின்பற்றும் வகையிலான முறையில் இச்சட்ட முன்வடிவு வைக்கப்பட்டுள்ளது.


இந்தச் சட்ட முன்வடிவை அனைத்து சட்டப்பேரவை உறுப் பினர்களும் ஒருமனதாக நிறை வேற்றித் தர வேண்டும்".


இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார். இதையடுத்து இந்தச் சட்ட முன்வடிவு அனைத்து உறுப் பினர்களின் ஆதரவுடன் நிறைவேற் றப்பட்டது.


No comments:

Post a Comment