பெரியார்
தேவைப்படுகிறார்
நெறிகெட்ட உங்களை
உயர்த்திக் கொள்ளவும்
தோழா
தறிகெட்டோடும் உங்களை
திருத்திக் கொள்ளவும்
பெரியார் தேவைப்படுகிறார்!
கடந்த காலம்
அறியாமல் வளர்ந்தவனே
பாராமையும் தீண்டாமையும்
நிலவிய குமுகத்தில் நீ
தீட்டாய் தெரிந்தாய்
தெளிவாய் பதரே!
அய்யாவின்
சிலை மீது
காவிச்சாயம் வீசினாயோ?
அந்தோ பாவம்!
ஆரிய அடிமையே கைக்கூலியே!
உன் கருநிறம்
சிவப்பாய் மாறிட
சிறப்பு சேருமே..
காவி படிந்திட
அறிவு மங்கி
வாழ்வும் மங்கி
இழிவு இலகுவாய்
வந்துசேருமே!
செருப்பு மாலை
அணிவித்தாயே
அய்யா மீது
அவ்வளவு வெறுப்பா?
தோழா..
உன்னை தூண்டிய
பார்ப்பனர் கால்களுக்கு
நீ செருப்பே!
அறிவாயோ?
அன்று
உயிரோடு வாழ்ந்த போதும்
உங்கள் இழுக்கினை
தன் தோளிலும் மார்பிலும் சுமந்தாரே!
இன்று
சிலையாய் நின்ற போதும் உங்களை
செருப்பாய்ச் சுமக்கின்றாரே!
தாழ்வு அவர்க்கில்லை
சூத்திரப்பட்டம் சுமக்கும் உமக்கே
ஆனால்
இன்னும் எத்தனை காலம் தான்
நீங்கள்
இழிவின் சின்னமாய் வாழ்வீரோ?
நீங்கள் பூமாலையாய்
அவர் மார்பு தழுவும்
காலம் வரை
அந்த
வீரனின் மார்பு
ஆயிரமாயிரம்
அம்புகள் ஈட்டிகள் மட்டுமல்ல
இடியே தாக்கினாலும்
தகர்ந்திடாது!
பெரியார் !
வெறும் சிலையல்ல !
மனிதம் போற்றிடும்
உயர்த் தத்துவம் !
- சே. குணவேந்தன்
பெங்களூரு
No comments:
Post a Comment