ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 10, 2020

ஆசிரியர் விடையளிக்கிறார்


கேள்வி: ‘‘ஈ.வெ.இராமசாமி ஆகிய நான், திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத் தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமூகமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு தொண் டாற்றி வருகிறேன்”... எனத் தொடரும் தந்தை பெரியா ரின் நீண்ட விளக்கத்தை, தி.மு.க.இளைஞரணியில் உள்ள உறுப்பினர்கள் கட்சியின் கொள்கை பிரகடன மாக எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரும் அச்சிட்டு சட்டைப் பையில் வைத்துக் கொள்ள வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் மானமிகு துரைமுருகன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளாரே?


- மன்னை சித்து, மன்னார்குடி-1


பதில்: நல்ல பயனுறு கொள்கைப் பூர்வ அறிவுரை. தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், திராவிடர் இயக்கம், தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் முன்னெடுத்த லட்சியக் கொள்கை முழக்கங்களை தி.மு.க. இளைஞரணிக்குள் புகுத்த எடுக்கும் முயற்சிகளும்கூட பாராட்டத்தக்கவை.


கேள்வி: சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டுக் குள் முடித்தே ஆக வேண்டிய மிகப்பெரிய பணியாக எதைக் கருதுகிறீர்கள்?


- மாவீரன், சோழங்குறிச்சி


பதில்: ஜாதி - தீண்டாமை ஒழிப்பு - பெண்ணடிமை ஒழிப்பு - சமூகநீதிப் பாதுகாப்பு - பகுத்தறிவு ப்   பணிகள் பல நூற்றாண்டு பாக்கிகள் இவை!


கேள்வி: எதிர்க் கருத்துடையவர் என்பதைவிட, தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்கியவரான இந்து முன்னணி இராமகோபாலன் மறைவுக்குத் தங்களைப் போன்ற தலைவர்கள் இரங்கல் தெரிவிக்கலாமா என்று பல இளைஞர்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்புகிறார்களே?   


- தென்றல், ஆவடி


பதில்: இரங்கல் தெரிவிப்பது மனிதநேயம். அவர் களது கொள்கைப்பற்றியதல்ல. அந்த இளைஞர்கள் கொள்கைக்கும், மனிதநேயத்திற்கும் உள்ள வேறுபாடு களை - அறிவுகொண்டு சிந்திக்கவேண்டும்; உணர்ச் சிக்கு இடம்தராமல்!   அவர்களது கொள்கை உணர்வைப்  பாராட்டுகிறேன்.


கேள்வி: வெள்ளையர் ஆட்சியில், பதவி சுகம் பெற்ற பார்ப்பனர், இன்று பாஜக ஆட்சியில் ‘தேசப் பிதா’வாக மாறிவிடுகிறார்களே அது எப்படி?


- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்


பதில்: ‘பாம்பு தின்னும் ஊரில் நடுக்கண்டம் நம் முடையதே’ என்பதே பார்ப்பனர் வழமை. வரலாற் றையே திரித்தும் எழுதும் வன்கணநாதர்களுக்கு - இது கை வந்த கலை!


கேள்வி: தங்கள் வளர்ச்சியில் தங்கள் உடன் பிறந்த அண்ணன்களின் பங்களிப்பு என்ன?


- மு.ராணி, வேலூர்


பதில்: மூத்த அண்ணன் கி.கோவிந்தராசன் என்னை இயக்கக் கொள்கைகளால் வளர்த்தார். இளைய  அண்ணன் கி.தண்டபாணி எல்லா வகையிலும் வாழ் வாதாரம், கல்வி வரை அனைத்திலுமே வளர்த்தார்.


இருவருமே பாச ஊற்றுக்கள். எனது நிரந்தர நன்றிக்குரியவர்கள்.


கேள்வி: நமது உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டு, மனித அடக்குமுறையை நோக்கி நாடு சென்று கொண் டிருக்கும் நிலையில், இதனை எதிர்த்துப் போராட வேண்டிய இளைய தலைமுறை (IPL) மட்டை பந்து விளையாட்டில் மூழ்கிக் கிடப்பது ஆரோக்கியமான சமுதாயமாகுமா?


வெங்கட. இராசா, ம.பொடையூர்


பதில்: அதுதான் வேதனையிலும் வேதனை. என்ன செய்வது? இதனை பல கட்சித் தலைவர்களேகூட உணராமல், ஏதோ கிரிக்கெட் ‘பேட்டுடனேயே பிறந்தது போல தேவையற்ற முக்கியத்துவத்தை தருகிறார்கள். மிகப்பெரிய சூதாட்டம், ஆளை விற்றுக்கொள்ளும் அவலம் - யாருக்குமே வெட்கமில்லையே!


‘‘கிரிக்கெட் ஒன்றுதான் விளையாட்டா? வேறு விளையாட்டே இல்லையா?’’ என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் புகழேந்தி ஆகியோர்  கேள்வியெழுப்பியுள்ளனரே!


அந்த அளவுக்கு அதன் ஆதிக்கம் இருப்பதை இது வெளிப்படுத்தவில்லையா?


நீதிபதியின் கருத்து வரவேற்கத்தக்கதாகும்.


கேள்வி: “நீடாமங்கலம் மொட்டையடித்தல்” தொடர்பாக ‘விடுதலை’ ஏட்டின் மீது வழக்கு தொட ரப்பட்டதாக படித்தேன்.  இறுதியாக தீர்ப்பு    தொடர்பாக எந்த நூலிலும் இல்லையே?


- தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை


பதில்: பேராசிரியர் நீலகண்டன் அவர்களது நூலைப் படியுங்கள். ‘குடிஅரசு’ செய்தியிலும் உள்ளதே!


கேள்வி: மேனாள் நீதிபதி  மார்க்கண்டேய  கட்ஜூ, தந்தை பெரியார் குறித்து மிக மோசமாக, அவதூறாக எழுதியுள்ளாரே! இப்படி தமிழர்களை இழித்தும், வம்பிழுத்தும் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள் ளாரே! இதை எப்படித் தடுப்பது?


- முகிலா, குரோம்பேட்டை


பதில்: பச்சைப் பார்ப்பனப்  புத்திக்குப் பதிலடி- அவரது எழுத்துக்குப் பதிலடி தரவேண்டும். உரிய நடவடிக்கை எடுப்போம். 


கேள்வி : திராவிடர், திராவிடம் என்ற பெயர் முதல் முதலில் எப்படி வந்தது, அதன் நோக்கம் என்ன?


- இரா.தமிழ்மாறன், திருவொற்றியூர்


பதில் :  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மிக அழகாக விளக்கியுள்ளாரே! (“வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?” நூலில் பக்கம் 35) (பாடல் பக்கம் 6இல்காண்க)


சிறப்புக் கேள்வி:



கல்வியாளர் பிரின்ஸ்  கஜேந்திர பாபு


சென்னை


கேள்வி: Caste is a discriminatory social order. ஜாதி சமூகத்தில் பாகுபாட்டை கட்டமைக்கிறது. ஜாதி ஒழியாமல் தீண்டாமை ஒழியாது. அதனால்தான் குலக் கல்வி எதிர்ப்பு போராட்டத்தின் போதும் “ஜாதி இழிவை ஒழிக்கும் வரையில் நம் லட்சியப் பயணம் நிற்காது” என்று தந்தை பெரியார் அறிவித்தார். ஜாதியை ஒழிக்க சமூக உரையாடல் தேவை. கிராமத் திண்ணைகளிலும், நகர்புற நடைபாதைகளிலும், ஊழியர், தொழிலாளர் கூடும் இடங்களிலும் ஜாதி ஒழிப்பிற்கான சமூக உரையாடலை நிகழ்த்த செயல் திட்டத்தை நாம் உருவாக்க வேண்டாமா?


பதில்: நன்றி, திரு.பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களே!


ஜாதிதான் வேர்; தீண்டாமை கிளை. வேர் வெட்டப்படல் வேண்டும். ஜாதியின் மூல வேரையே அழிக்கத் தீவிரப் பிரச்சாரம் (தங்கள் திட்டமும் பயனுடையதே) ஒருபுறம்; மறுபுறம் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் ‘தீண்டாமை’க்குப் பதில் ஜாதி - 17 ஆவது பிரிவில் இடம்பெற வலுவான ஆதரவை நாடு தழுவிய அளவில் திரட்டவேண்டும். தந்தை பெரியார் தந்த திட்டம் இது - அவர் நடத்திய மாநாட்டிலும் வலியுறுத்தினார். அவர் காட்டிய பாதையில் அனைவரும் இணைந்து செல்வோமாக!


No comments:

Post a Comment