செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 29, 2020

செய்தியும், சிந்தனையும்....!

அசல் ஓ.எம்.ஆர். ஷீட்டை...


'நீட்' தேர்வில் பூஜ்ஜியம் பெற்ற மாணவி ஒரு கேள்விகளுக்குக்கூட பதில் அளிக்கவில்லை; பொய் வழக்குப் போட்ட மாணவிக்கு ரூ.25,000 அபராதம்: - நீதிமன்றம் தீர்ப்பு.


சரிதான்...


அரியலூரைச் சேர்ந்தமஞ்சு (வயது 19) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு ஒராண்டு தனியார் பயிற்சி மய்யத்தில் பெரும் செலவு செய்து 'நீட்' பயிற்சி எடுத்தார். அதன் முடிவுகள் இவருக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.. இது குறித்து அவர் கூறும் போது “நான் ‘நீட்’ தேர்வு எழுதியபோது 3 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்கவில்லை. மற்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதியிருந்தேன். இதனால் எனக்கு 680 மதிப்பெண்கள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். இந்நிலையில் வெறும் 37 மதிப்பெண்கள் மட்டுமே எனக்கு கிடைத்துள்ளது. இதனால் 'நீட்' தேர்வு ஆணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


3 கேள்விகளுக்கு மட்டுமே நான் பதிலளிக்காத நிலையில், 7 கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஓ.எம்.ஆர். ஷீட்டை மாற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு அசல் ஓ.எம்.ஆர். ஷீட்டை காண்பிக்க வேண்டும் என்றாரே!


எல்லாம் நீடிப்புதான்!


நவம்பர் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீடிப்பு: - மத்திய அரசு அறிவிப்பு.


நீடித்துக் கொண்டே இருந்தால் மக்கள் பிரச்சினைகளுக்கு வீதியில் வந்து மக்கள் போராட முடியாது அல்லவா!


கரோனா நீடிக்கும்; ஊரடங்கும் நீடிக்கும் - அப்படித்தானே!


ரொம்ப சுமூக உறவுதான்!


இராமேசுவரம் மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்.


இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையால் அண்டை நாடுகள் இந்தியாவுடன் மிக அதிகமான அளவுக்குச் சுமூக உறவு - நம்புங்கள்.


‘குடுகுடுகுடு - ஜக்கம்மா!'


அடுத்த நிதியாண்டில் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும்! - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணிப்பு


ஆரூடமா?


குடுகுடுப்பைக்காரரின் டமாரமா?


‘எல்லாம் கடவுள் கையில்தான்!' என்று கையை விரிக்கும் யுக்தியும் அவர்களிடம்தான் இருக்கவே இருக்கே!


No comments:

Post a Comment