நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையில் திராவிட மகளிர் பாசறை புகார்
சென்னை, அக்.28 அய்ரோப்பிய பெரியாரிய அம்பேத்கரிய தோழர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த செப்டம்பர் 26, 27 ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற காணொலி மாநாட்டில் மனுஸ்மிருதியில் இருக்கும் பெண்ணடிமைக் கருத்துகளை எடுத்துவைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார். அதைத் திரித்து இந்துத்துவவாதிகள் பேசத் தொடங்கியதோடு மட்டுமல்லா மல், சமூக ஊடகங்களில் அவதூறுச் செய்திகளையும் பரப்பத் தொடங்கினர்.
இந்நிலையில், சுரேஷ்குமார் என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், விசிக, திராவிடர் கழகம், இடதுசாரிகள் உள்ளிட்ட அமைப்பு களைச் சேர்ந்த பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் மகளிர் பலரின் புகைப்படங்களை வெளியிட்டு அவதூறாகப் பதிவு செய்திருந்தார். இது குறித்து உரிய ஆதாரங்களோடு, திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (27.10.2020) காலை 11 மணியளவில் புகார் அளித்தார். புகாரை கூடுதல் காவல் ஆணையர் அருண் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
உடன் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, வடசென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தி.செ.கணேசன், தென் சென்னை மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்ச்செல்வன், கா.அமுதரசன், வழக்குரைஞர் தசரதன் ஆகியோர் சென்றிருந்தனர்.
No comments:
Post a Comment