அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு தேவை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 13, 2020

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு தேவை!

ஏழு பேர் விடுதலைக்கு முட்டுக்கட்டை - மத்திய அரசுதான் பின்னணி!

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் 

சென்னை, டிச. 13- அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு தேவை; ஏழு பேர் விடுதலைக்கு முட்டுக்கட்டையே மத்திய அரசுதான் பின்னணி என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

நேற்று (12.12.2020) சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் முடிந்தவுடன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:

மனிதநேயம் உள்ள ஓர் இயக்கத்தின் பொறுப்பாளன் என்ற முறையில்...

அனைவருக்கும் வணக்கம். கரோனா தொற்றுக் காலத்தில்கூட, நம்முடைய பத்திரிகையாளர் நண்பர் கள், ஊடக நண்பர்கள் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல், புயலானாலும் அல்லது வேறு பல இயற்கை சீற்றங்களானாலும், தங்களுடைய கடமைகளை, சிறப்பாக செய்து வருகின்ற உங்களுக்கு சக பத்திரிகையாளன் என்ற முறையில், மனிதநேயம் உள்ள ஓர் இயக்கத்தின் பொறுப்பாளன் என்ற முறை யிலும், உங்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்து களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அருமை நண்பர்களே, திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு இன்றைக்கு நடைபெற்றது. அக்கூட்டத்தில், இரங்கல் தீர்மானங்கள் உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

அதனுடைய நகலை உங்களுக்குக் கொடுத்தி ருக்கின்றோம். இந்தத் தீர்மானங்களின்படி, இந்த இயக்கம் ஏற்கெனவே பல அறிக்கைகள் மூலமாகவும், போராட்டங்களின் மூலமாகவும்,  வலியுறுத்திய கருத்தை மீண்டும் மத்திய - மாநில அரசுகளின் கவ னத்திற்கும், பொது மக்களுடைய அக்கறைக்கும் இதில் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன.

மருத்துவக் கல்லூரிகளில், அகில இந்திய இட ஒதுக்கீடு நீக்கப்படவேண்டும். ஒரு காலத்தில் கொடுக்கப்பட்டபொழுது, அதற்குத் தேவை இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் சட்டப்படியே அது தேவையில்லை.

இதை அடிப்படையாகக் கொண்டு மருத்துவ சேர்க்கையை நடத்தினார்கள் என்றால், நாம் நீதி மன்றத்திற்குச் சென்றாலும்கூட, வெற்றி பெறக்கூடிய அளவிற்கு, அரசமைப்புச் சட்டத்திலேயே தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது.

அதுபற்றியும், நீட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வை நிரந்தரமாக நீக்கவேண்டும் என்றும் தீர்மானம் நிறை வேற்றியிருக்கிறோம்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர்களின்

கல்விக் கண்களைக் குத்தியிருக்கிறார்கள்

இப்பொழுது, மிகப்பெரிய கொடுமை என்னவென் றால், கல்வியில், பா..., ஆர்.ஸ்.எஸ். அஜெண்டாபடி, அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், ஒடுக்கப்பட்ட சமுத்தாயத்தவர்களின் கல்விக் கண்களைக் குத்தியி ருக்கிறார்கள்.

புதிய  தேசிய கல்விக் கொள்கை போன்றவை உள்பட எல்லாமே அப்படி வந்திருக்கிறது.

நாள்தோறும் ஒவ்வொரு செய்தி வந்து, அதிர்ச்சி யூட்டக் கூடிய செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன.

60 லட்சம் எஸ்.டி., எஸ்.சி. மாணவர்களுக்கு வழங் கிய கல்வி உதவித் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது - இது என்ன கொடுமை!

ஒருபக்கத்தில் நாடாளுமன்றத்திற்குப் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா - இன்னொரு பக்கத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் செல்வதற்காக சொகுசு விமானம் வாங்குவதற்காக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாட்டில், காலங்காலமாக கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக் கப்பட்ட சமுதாயமாக இருக்கின்ற எஸ்.சி., எஸ்.டி., 60 லட்சம் மாணவர்களுக்கு உதவித் தொகைக் கொடுக்க வில்லை என்றால், 60 லட்சம் குடும்பங்களின் வாழ் வில் மண்ணைப் போடுகிறார்கள், கல்விக் கண்களைக் குத்துகிறார்கள் என்றுதானே அர்த்தம்.

உடனடியாக அந்த 60 லட்சம் மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்கவேண்டும்.

இங்கே இருக்கின்ற மாநில அரசு, மத்திய அரசு எதைச் சொன்னாலும் தலையாட்டுகின்ற அரசாக இருப்பதினால், இதற்கு எதிர்ப்பை தெரிவிக்காமல், ஏதோ கடிதம் எழுதினோம் என்ற நிலையிலேயே இருக்கிறது.

நீதித்துறையில் பாலியல் சமூகநீதி தேவை!

குறிப்பாக சொல்லவேண்டுமானால், நீதித்துறை யைப் பொறுத்தவரையில், சமூகநீதி தேவை. பாலியல் நீதி தேவை.

பெண்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட வேண்டும் என்பது முக்கியம். அதிலும் உயர்ஜாதிப் பெண்களாகத்தான் இருக்கவேண்டும் என்பது அவசிய மில்லை.

உச்சநீதிமன்றத்தில் பெண் தலைமை நீதிபதியாக வரமுடியவில்லை என்பதை தலைமை வழக்குரைஞர் சொல்கிறார்.

அதற்கு என்ன காரணம் என்றால், குறிப்பிட்ட வயது இருந்தால்தான், நாங்கள் பரிந்துரை செய்வோம் என்று சொல்கிறார்கள்.

அறிவு, ஆற்றல், திறமை என்று சொல்லுகிற பொழுது, இதற்கு முன்பு 33 வயதிற்குள் அட்வகேட் ஜெனரலாகி, நீதிபதியாக, தலைமை நீதிபதியான வரலாறு உண்டு, ஆண்களுக்கு.

ஆண்கள் தலைமை நீதிபதியாக வருகின்ற பொழுது, ஏன் பெண்கள் தலைமை நீதிபதியாக வரக்கூடாது?

அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும்

7.5 சதவிகித உள்ஒதுக்கீடு தேவை!

தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை - அரசு உதவி பெறும் பள்ளிகளில், 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடாக வருவதற்கான மசோதா, நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது ஆளுநர் அலுவலகத்தில். அனைத்துக் கட்சியினரும் அதனை எதிர்த்து குரல் கொடுத்தவுடன்தான், அந்த மசோதா வில் கையொப்பமிட்டார்.

அரசு பள்ளிக்கும், அரசு உதவி பெறும் பள்ளிக்கும் வித்தியாசம் கிடையாது. ஒரே பாடத் திட்டம்தான். அரசாங்கத்தினுடைய விதிமுறைகள் அத்தனையும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும்.

ஆகவேதான், அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு கொடுத்தால், இன்னும் அதிகமான மாணவர்கள் டாக்டர்களாக வருவதற்கு வாய்ப்பாக இருக்கும்.

அரசு உதவி பெறக்கூடிய பள்ளிகள் என்றால், தமிழ் நாட்டுப் பள்ளிகளாகும். இல்லையென்றால், சி.பி.எஸ்.. போன்ற பள்ளிகளுக்குத்தான் அந்த ஒதுக்கீடு செல்வதற்கு வாய்ப்பாகிவிடும்.

ஒரு பக்கம் இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு. பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழி யில் செய்தி ஒளிபரப்பு இவையெல்லாவற்றையும் எதிர்த்துப் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

வித்தைகளில் கைதேர்ந்தவர் பிரதமர் மோடி!

நம்முடைய பிரதமர், வித்தைகளில் கைதேர்ந்த பிரதமர். திடீரென்று அவருக்கு பாரதியார்மேல் காதல் வரும். எழுதிக் கொடுத்தை வைத்துக்கொண்டு, பாரதி யாரைப்பற்றி இரண்டு  வரி சொல்வார். திடீரென்று திருக்குறளைப்பற்றி இரண்டு வரி சொல்வார். அக நானூறு, புறநானூறுபற்றி அவர் இரண்டு வரி சொன் னவுடன், ஆகா, தமிழைப்பற்றி இப்படி அருமையாகப் பேசுகிறாரே என்று சிலர் நினைக்கலாம்.

ஏன் அவர் இப்படி பேசுகிறார் என்றால், தமிழ்மீது இருக்கின்ற பற்றாலா? கிடையாது. தமிழ்நாட்டை எப்படியாவது பிடித்தாகவேண்டும் என்பதால்தான்.

செம்மொழி தமிழை ஒன்றுமில்லாமல் ஆக்கி வைத்துள்ளது இன்றைய மத்திய அரசு.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அரும் பாடுபட்டு, முயற்சி எடுத்து, தனி அமைப்பை உருவாக்கி, மைசூரில் செயல்பட்டுக் கொண்டிருந்த அமைப்பை, தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தார். அப்படிப்பட்ட செம்மொழி நிறுவனத்தை ஒழிக்கும் முயற்சிக்கு தமிழ்நாட்டில் உள்ள .தி.மு.. அரசும் துணை போவதைக் கண்டித்து இச்செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.

ஏழு பேர் விடுதலைக்கு முட்டுக்கட்டையே

மத்திய அரசின் ஏஜெண்டான தமிழக ஆளுநர்தான்!

அதேபோல், ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்குப் பரிந்துரை செய்து எவ்வளவு நாட்கள் ஆகின்றன? எட்டு மாதங்களுக்கு மேல் ஆகின்றன.

அரசமைப்புச் சட்டத்தில் மிகத் தெளிவாக நான்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒன்று, அந்த மசோதாவை, அரசுக்கே திருப்பி அனுப்பலாம்

இரண்டு, அந்த மசோதாவில் திருத்தம் சொல்லலாம்

மூன்றாவது, இந்த மசோதாவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுக்கலாம்.

நான்காவது, இந்தத் தீர்மானத்தின்மீது அரசு மறுபரிசீலனை செய்யக் கூறலாம்.

மேற்கண்ட காரணங்கள் எதையும் தமிழக ஆளுநர் சொல்லவில்லை.

சரி, அந்த ஏழு பேர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் தடையாக இருக்குமா என்றால், அதுவும் கிடையாது. அல்லது சி.பி.அய்.  ஏதாவது முட்டுக்கட்டை போடுமா? என்றால், அதுவும் கிடையாது.

எந்தத் தடையும் கிடையாது. ஒரே தடை மத்திய அரசுதான். அந்த மத்திய அரசினுடைய ஏஜெண்ட் தான் ஆளுநர்.

அதனைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

தமிழ்நாட்டில், தி.மு..வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்று இன எதிரிகள் நினைக் கிறார்கள். அதற்குக் காரணம் என்ன?

தி.மு.., இன உணர்வோடு, மொழி உணர்வோடு சமூகநீதியை நிலைநாட்டப் பாடுபடுகிறது. பண் பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்துவதில், தி.மு.. முன்னணியில் இருக்கின்ற கொள்கை ரீதி யான ஓர் அமைப்பாகும்.

ஆகவே, அதனை எப்படியாவது ஆட்சிக்கு வருவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று பா..., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்டவை முயற்சிகள் எடுக்கின்றன.

அதனை எதிர்த்து  தீவிரமான பிரச்சாரத்தை செய் வதுதான் அடுத்து எங்களுடைய பணி.

அதற்குரிய திட்டங்களை மிகத் தெளிவாக தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறோம்.

மார்ச் 16, 2021:

‘‘திராவிடம் வெல்லும்'' பிரச்சாரத் திட்டம்

அதற்குரிய பிரச்சார அமைப்பை உருவாக்குவோம்.

‘‘திராவிடம் வெல்லும்'' என்ற தலைப்பில் அன்னை மணியம்மையார் அவர்களுடைய நினைவு நாளான மார்ச் 16 ஆம் தேதியிலிருந்து என்னுடைய தலைமையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கு வோம். அந்தப் பிரச்சாரத்தை தீவிரமான பிரச்சாரமாக செய்து, ஏன் இந்தத் தேர்தலில் தி.மு..வை தேர்ந் தெடுக்கவேண்டும்? தி.மு..விற்காக அல்ல - தமிழ் நாட்டின் நலனுக்காக - மாநில உரிமைகளுக்காக - சமூகநீதியைப் பாதுகாப்பதற்காக போன்ற பல காரணங்களை எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்வோம்.

நன்றி, வணக்கம்

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறினார்.

No comments:

Post a Comment