உலக அளவில் கரோனா பாதிப்புஎண்ணிக்கை 11.81 கோடியை கடந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 11, 2021

உலக அளவில் கரோனா பாதிப்புஎண்ணிக்கை 11.81 கோடியை கடந்தது

ஜெனீவா, மார்ச் 11  சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்த பாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.81 கோடியைக் கடந்துள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9.38 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

 மகளிர் தின பேரணியில் வன்முறை  80 பெண்கள் படுகாயம்

  மெக்சிகோ சிட்டி, மார்ச் 11 உலகம் முழுவதும் 8.3.2021 அன்று பன்னாட்டு மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி மெக்சிகோவில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலைநகர் மெக்சிகோ சிட்டியில் ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மெக்சிகோ சிட்டியின் மய்யப்பகுதியில் திரண்ட பெண்கள் அதிபர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர்.

இதற்கிடையில் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்திடாத வண்ணம் அதிபர் மாளிகையின் முன்பு காவல்துறையினர் இரும்பு சுவரை அமைத்தனர். மேலும் அதிபர் மாளிகையை சுற்றிலும் பெண் காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டனர். இந்த நிலையில் அதிபர் மாளிகையை நெருங்கிய போராட்டக்காரர்கள் சுத்தியல், மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றால் இரும்பு சுவரை தகர்த்து கீழே தள்ள முயற்சித்தனர்.

பெண் காவல்துறையினர் அவர்களை தடுக்க முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சற்று நேரத்தில் இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது. போராட்டக் காரர்களை விரட்டியடிக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி எறிந்தனர்.

அதேபோல் போராட்டக்காரர்கள் கையில் கிடைத்த பொருட்களை காவல்துறையினர் மீது வீசி எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த மோதலில் பெண் காவல்துறை அதிகாரிகள் 62 பேரும், போராட்டக்காரர்கள் தரப்பில் 19 பெண்களும் படுகாய மடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

No comments:

Post a Comment