வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி, - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 27, 2021

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி,

 புகழ் வேட்டையும் - பொது வாழ்க்கையும்!

ஆதிமனிதன் வேட்டையாடி பிறகு தனக்கு வேண்டிய உணவு மற்றும் பொருள்களைச் சேகரித்து வாழ்ந்தான். அதனால் தான் மனித சமூக வளர்ச்சியின் பல பருவங்களைப் பிரித்தெழுதும் சமூகவியலாளர்கள் முதற் கட்டத்தை, வேட்டையாடி சேகரிக்கும் பருவம்  (Hunter - gatherer stage)  என்பதிலிருந்து துவக்குகிறார்கள். அடுத்து வேளாண்மைப் பருவம்; பிறகு தொழிற்புரட்சி, பிறகு மின்னணுப் புரட்சி வரை நீண்டு வருகிறது.

காடுகளில் மிருகங்களை வேட்டையாடிய மனிதன், தனது சக்திப் பெருக்கத்தால் - அறிவு, ஆற்றல், வீரம் காரணமாக போர்களுக்குத் தயாராகி, நாடுகளை 'வேட்டையாடத் துவங்கி', 'சாம்ராஜ்ய சக்ரவர்த்தி' பெருமை என்ற போதைக்கு ஆளானான்!

அதன் பிறகு - தொடர்ந்த பதவி வேட்டை,  பண வேட்டை, பெண் வேட்டை எல்லாவற்றை யும் தாண்டி, புகழ் வேட்டையின் உச்சத்திற்குச் சென்றான்!

மது குடிப்பவர்கள் போதை ஏறஏற மேலும் மேலும் குடிப்பதைப் போல, புகழுரை கேட்பதை வாடிக்கையாகக் கொண்டவர்களுக்கு இந்த புகழ் வேட்டையே மேலும் மேலும் வெள்ளத்தி னிடையே சுழலில் சிக்கிக் கொள்வதைப் போல, சிக்கிக் கொண்டே இறுதியில் அதுவே அவர்களது உயிர்க்கும், உணர்வுக்கும்கூட இறுதியாகி விடுகிறது!

'ஒல்காப் புகழ்' என்றும் 'ஓங்கு புகழாகவே' அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கை தத்துவத்திற்கும் நியதிக்கும் விரோதமானது என்பதை அவர்களில் பலர் அறிவதில்லை! விஞ்ஞானிகளும், தத்துவ ஞானிகளும் உண்மையான பகுத்தறிவுவாதிகளும் புகழ் போதைக்கு ஆளாகாமல் தங்களை தடுத்துக் கொள்வார்கள்.

அவர்கள் தம்பணியில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வதால் - எவர் தம்மைப் புகழுகிறார், எவர் தூற்றுகிறார் என்று பேதப்படுத்திப் பார்க்காமல் இரண்டையும் சமப் பார்வையோடு பார்த்து இரண்டில் எதற்கும் முக்கியத்துவம் தராமல் தமது லட்சியப் பயணத்திலேயே குறியாக இருப்பார்கள்!

இத்தகைய அறிவியலாளர்களும் தத்துவ ஞானிகளும் மிகவும் அபூர்வத்திலும் அபூர்வமே!

சராசரி மனிதர்கள் புகழ் வேட்டையில் புது இன்பம் கண்டே, துரத்திக் கொண்டே வாழ்வின் இறுதிவரை ஓடுகிறார்கள்; ஓடுகிறார்கள்; ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்!

எது எல்லை என்றே அவர்கட்கே தெரியாது ஓடிக் கொண்டே, கற்றதையும், பெற்றதையும்கூட பயன்படுத்திக் கொண்டு அனுபவித்து மகிழ்ச்சி யடையக் கூட கால அவகாசம் இன்றி இலக்கு தெரியாத பயணிகளாகிறார்கள்!

தந்தை பெரியார் ஒரு தத்துவ ஞானி அந்த விஷயத்தில் என்பது பலருக்குத் தெரியாது!

ஏனென்றால் அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பார்க்கும் பார்வை பழுதுபட்ட ஒரு பக்கப் பார்வை! அதனால் அந்த ஆழ்கடலின் முத்துக்களை அவர்களால் மூச்சடக்கிக் கொண்டு வந்து  முடியில் சூட்டிட முடிவதில்லை!

ஒரு சிறு எடுத்துக்காட்டு, "நான் உண்மையை பேசுபவன்; நேசிப்பவன் அதன்படி 'பொய்யாது வாழ்பவன்!" என்னை பிறர் பாராட்டும்போது நான் மகிழ்ச்சி அடைந்து உச்சி குளிருவதில்லை! காரணம் என்ன தெரியுமா?

என்னை கொள்கைக்காக 'வாழ்க' என்று சொல்பவர்களை விட, வசவுகளைப் பொழிகிறவர்களே மிக அதிகம் பேர். அவர்களது 'ஒழிக' கூப்பாடு கண்டு நான் எவ்வளவு துக்கப்பட்டு, மனமுடைந்து, மேலும் பணி தொடராது அல்லவா ஆக்கப்பட்டிருப்பேன்.

எனவேதான் 'வாழ்க' பற்றி மகிழாமல், 'ஒழிக' பற்றி விசனிக்காமல், மக்களைத் திருத்தி, அறிவு கொளுத்திடும் இந்தப் பணி - மலையேறும் பெரும் பணி என்பதால் நான் இரண்டையும் சம நிலையில் - புகழ்வதையும், இகழ்வதையும் - இரண்டையுமே அலட்சியப்படுத்தி எனது பயணத்தை நடத்திக் கொண்டே செல்லுகிறேன்" என்றார்.

இதுதான் லட்சியவாதிகளுக்கென்ற வாழ்க்கை நெறி - புகழ் வேட்டை அல்ல! அந்தச் சூ(சு)ழலிலிருந்து தம்மைக் காப்பவனே முழுப் பகுத்தறிவுவாதி என்பதன் அடையாளம் ஆகும்.

No comments:

Post a Comment