மனம் குளிரப் பாராட்டி மகிழ்கின்றேன்
'விடுதலை'யில் 22, 23 ஏப்ரல் 2021 நாளிட்ட 'வாழ்வியல் சிந்தனைகள்' கட்டுரையின் வாயிலாக பல நகைச்சுவை மிகுந்த அரியத் தகவல்களை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதி மகிழ்வூட்டியுள்ளார்கள். நாகை ராயல் சோடா பேக்டரி, மன்னார்குடி உள்ளிக்கோட்டை சு.ப. சோடா பேக்டரி வரை மேடைப் பேச்சாளர்களுக்குக் குரல் அடைப்பை நீக்கவும், கூட்டத்தில் கலவரம் செய்ய போர் ஆயுதமாக குண்டு சோடா பயன்பட்டதையும், சேலம் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களே சோடா தமக்குக் கொடுத்ததைப் பேறாகவும் சொல்லி மகிழ்கின்றார்.
10 வயது சிறுவனாக மேஜையின் மேல் ஏறி பல்லாயிரம் பிரச்சார மேடைகளில் அறிவு மணம் கமழப் பேசி வரும் அய்யா 88 அகவையில் ஆயிரம் பிறை விழாவினைத் தாண்டி 90 அகவை ஆண்டு விழாவை விரைவில் காண உள்ளார்கள். இரு பெரும் கரோனாப் பேரிடர் காலத்திலும் காணொலி வழியே முழக்கமிடும் அய்யாவை மனம் குளிரப் பாராட்டி மகிழ்கின்றேன்.
- இரா. முல்லைக்கோ
பெங்களூரு
No comments:
Post a Comment