மோடி ஆட்சியில் ஒன்றிய அரசின் கடன்சுமை ரூ.116 லட்சம் கோடியாக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 30, 2021

மோடி ஆட்சியில் ஒன்றிய அரசின் கடன்சுமை ரூ.116 லட்சம் கோடியாக உயர்வு

கடந்த 3 மாதத்தில் ரூ.7 லட்சம் கோடி அதிகரிப்பு

புதுடில்லி, ஜூன் 30- இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ரூ. 116 லட்சத்து 21 ஆயிரம் கோடியாக ஒன்றிய அரசின் கடன் சுமை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டு இறுதியில் அரசாங்கத்தின் மொத்த கடன்கள் (‘பொதுக் கணக்கின்கீழ் உள்ள கடன்கள் உட்பட) ரூ. 109.26 லட்சம் கோடியாக இருந்தன.

தற்போது அது, 2021 ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்றே மாதங்களில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் (6.36 சதவிகிதம்) அதிகரித்துள்ளது.  மேலும், மன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியை விட்டு இறங்கிய பொழுது, கடந்த 2014 ஜூனில், இந்தியாவின் மொத்தக் கடன் தொகைரூ.54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடியாக இருந்தது.

மோடி ஆட்சிக்கு வந்தபின்னர், கடந்த 7 ஆண்டுகளில், அது ரூ.116 லட்சத்து 21 ஆயிரம்கோடியாக உயர்ந்துள்ளது.சுமார் 67 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்தக் கடன் ரூ. 54 லட்சம் கோடி என்றால், மோடியின் 7 ஆண்டுகளில் மட்டும் 62 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது.2021 மார்ச் இறுதியில் காணப்பட்ட மொத்த கடன் சுமையில் பொதுக் கடனின் பங்களிப்பு 88.10 சதவிகிதம் அளவுக்கு இருப்பதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது. 2021 மார்ச் காலாண்டில் அரசாங்க பத்திரங்களை ஒரே நேரத்தில் வாங்குவது மற்றும் விற் பனை செய்வது சம்பந்தப்பட்ட 9 சிறப்பு மற்றும் சாதாரண திறந்த சந்தை (OMOs)நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது.

இதன்மூலம் 2020-2021 நிதியாண் டின் ஜனவரி - மார்ச் காலாண்டில், ஒன்றிய அரசு வெளியிட்ட கடன் பத்திரங்களின் மதிப்பு ரூ. 3 லட்சத்து20 ஆயிரத்து 349 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2019-2020 நிதியாண்டில் ரூ. 76 ஆயிரம் கோடி என்ற அளவிலேயே இருந்தது. இதேகாலத்தில் திருப்பிச் செலுத்துதல் ரூ. 29 ஆயிரத்து145 கோடியாக இருந்துள்ளது.கடன் பத்திரங்கள் உரிமையாளர்களில், வணிக வங்கிகளின் பங்கு 37.77 சதவிகிதம். 2020 டிசம்பர் இறுதியோடு (37.8 சதவிகிதம்) ஒப்பிடுகையில் சற்றே குறைவாகும். காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு 25.3 சதவிகிதமாகவும், வருங்கால வைப்பு நிதிகளின் பங்கு 4.44 சதவிகிதமாகவும் உள்ளது. பரஸ்பர நிதிகளின் பங்கு2020 டிசம்பர் இறுதியில் 2.6 சதவிகிதமாக இருந்தது, 2021 மார்ச் இறுதியில் 2.94 சதவிகிதமாக அதிகரித்துள் ளது. ரிசர்வ் வங்கியின் பங்கு 2020 டிசம்பர் இறுதியில் 15.7 சதவிகிதத்திலிருந்து 16.2 சத விகிதமாக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment