தாராபுரம் வீட்டு வசதி வாரிய வளாகத்தில் கோவில் அமைப்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 25, 2021

தாராபுரம் வீட்டு வசதி வாரிய வளாகத்தில் கோவில் அமைப்பதா?

கழகத்தின் சார்பில் வட்டாட்சியரிடம் புகார்

தாராபுரம்,ஜூன் 25- அரசுக்கு சொந்தமான தாரா புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் கோவில் அமைத்து மத பிரச்சினைகளை ஏற் படுத்த முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அரசு வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கோவிலை அகற்ற வலியுறுத் தியும்  கழகத்தின் சார்பில் 23.6.2021 அன்று தாராபுரம் வட்டாட்சியரிடத்திலும், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் தாராபுரம் மாவட்ட செயலாளர் .சண்முகம் தெரிவித் திருப்பதாவது ;

அரசுக்குச் சொந்தமான இடத்தில் எவ்வித மதவழிபாட்டு தலங்களும் அமைக்கக்கூடாது என்ற அரசு ஆணைகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் ஆகியவற்றிற்கு முரணாக திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் நகர்ப்பகுதி,உடுமலை சாலையிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி  வாரியத்திற்கு சொந்தமான அரசு ஊழி யர்கள் வாடகை குடியிருப்பு வளாகத்தில் உள்ள வேப்பமரத்திற்கு பாவாடை கட்டி, மஞ்சள் பூசி,மாலை அணிவித்து, விளக்கேற்றி, கோவில் வடிவமாக வழிபாடு நடைபெற்று வருகிறது.கடந்த வாரம் அங்கு பொங்கல் வைத்து விழா கொண்டாடப்பட்டுள்ளது. மேலும் அங்கு கோவில் கட்டும் வேலையும்  விரைவில் துவக்கம் பெறவுள்ளதை சித்தரிக்கும் வண்ணம் கட்டுமானப் பொருட்கள் அங்கு சேகரமாகி வருகிறது.

சட்டத்திற்கு முரணான இந்த பணிகளை மத அமைப்பினரின் தூண்டுதல்கள் பேரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ஒரு சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசுக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் இதுபோன்ற அத்துமீறல்கள் இந்திய அரசியல் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள  "மதச்சார்பின்மை" என்ற மாபெரும் ஒற்றுமை கோட்பாட்டினை சிதைத்து, மதக்கலவரங்களை நாட்டில் ஆங்காங்கே தோற்றுவித்து அமைதியான சூழலை கலவரச் சூழலாக மாற்ற மதவாதிகள் மேற்கொள்ளும் யுக்தியாகும்.

ஆகவே உடனடியாக அரசுக்கு சொந்தமான தாராபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்திலுள்ள மதவழிபாட்டுத்தல ஆக்கிரமிப்பு அடையாளங்களை உடனடியாக அகற்று மாறும், இதுபோன்ற பிரச்சினைகளை உருவாக்கி சமூகத்தில் நிலவி வரும் இயல்பு நிலையை சீர்குலைத்து மதரீதி

யிலான பிரச்சினைகளை கட்டவிழ்த்து விட முயன்றவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும் இந்த மனுவின் வாயிலாக திராவிடர் கழகம் சார்பில்  தங்களை கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.என்று தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வில் தாராபுரம் ஒன்றிய தலைவர் நாத்திக சிதம்பரம், செயலாளர் முருகன், கழக தோழர் வழக்குரைஞர் ராமபட்டினம் முருகேஸ்,ஆதித்தமிழர் பேரவை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றிய வண்ணம் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment