தாயும் 'பேயும்' - என்னே கொடுமை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 21, 2021

தாயும் 'பேயும்' - என்னே கொடுமை!

நாட்டில்  நாளும்  ஊடகங்களில் குறிப்பாக தொலைக்காட்சிகளில் வரும் சில செய்திகள் மனிதநேயம் உள்ள அனைவரையும் மிகுந்த வேதனைக்கும், வெட்கத்திற்கும் ஆளாக்குகின்றன!

பாசத்திற்கும், கைம்மாறு கருதாத அன் பிற்கும், கடமைக்கும் ஒப்புவமையற்ற ஒன்று தாய்ப்பாசம் தானே!

அதனால்தான் பாடிய புலவர்கள்கூட 'தாயினும் சாலப் பரிந்து' என்ற சொற்றொடரைக் கையாண்டார்கள். இன்றும், என்றும் அது நிலைத்த உண்மையாக இருப்பினும்கூட மனித மனங்களில் இந்த மூடநம்பிக்கை நோய் புகுந்து மூளையை செயலற்ற தாக்கி விட்டு, மிருகத்தனத்திற்கே  அவர்களைக் கொண்டு செல்லும் கீழிறக்கத்திற்குத் தள்ளி விடுகிறது ! - சிற்சில மனிதர்களிடம்.

தாயா? பேயா? என்ற தலைப்பு கண்டதும் தற்போது அரசியல் உலகில் நடக்கும் கட்சி குடுமிச் சண்டை, பதவிக் காய்ச்சல், தலைமை வியாதிபற்றி நடப்பதைத்தான் எழுதுகிறாரோ என்று அவசரப்பட்டு விடாதீர்!

அவை வெறும் சந்தர்ப்பவாத சதிராட்டங்கள் தான். அதுபற்றி நாமும் பொருட்படுத்தி நம் காலத்தை வீணடிக்க வேண்டாம்.

பிறகென்ன? - என்கிறீர்களா? ஆரணி அருகே கே.வி. குப்பம் என்ற ஒரு கிராமத்தில் தனது 7 வயது குழந்தையை ஒரு தாய், அக்குழந் தையைப் பேய் பிடித்து ஆட்டுகிறது என்று மூடத்தனமாக நம்பி, அடியோ அடி என்று அடித்துத் துவைத்திருக்கிறார்; அவருடன் இதர குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் என இரு தரப்பினரும் சேர்ந்து மேலும் குழந்தையை பலமாகத் தாக்கியதில் 7 வயதுச் சிறுவன் இறந்து விட்டான்.

"அறியாமைதான் மிகப் பெரிய நோய், நோய் களில் முதன்மையானது" என்றார் இங்கர்சால்.

2021இல் அறிவியல் முன்னேறி மனிதர்களை 'செவ்வாய்தோஷம்' கடந்து, செவ்வாய் கிரகத்திற்கே குடிபெயரத் திட்டமிடும் மண் வெளி தாண்டிய, விண்வெளிப் பயண ஆய்வுக் காலத்தில், இப்படி ஒரு கெட்ட செய்தி - அதுவும் இந்த சுயமரியாதை - பகுத்தறிவு பூமியில் நடக்கிறது என்றால் அதைவிட அனைவருக்கும் கேவலம் வேறு என்ன?

அறிவியலைப் பாடமாகப் படிக்கிறார்கள்; 'செல்'பேசியைப் பயன்படுத்தாத மக்களே இல்லை. கிராமத்துப் பெண்கள் - படிப்பறி யாதவர்கள்கூட பயிற்சி பெற்று அதையே தமதுவாழ்வின் துணையாகக் கூட அல்ல, மூச்சுக் கருவிபோல பயன்படுத்துகிறார்கள். தொலைக்காட்சித் தொடரில் நேரத்தைச் செல விடுகிறார்கள். ஆனால் பக்தி, மூடநம் பிக்கையை எதிர்த்த பிரச்சார ஒளி இன்னமும் பல கோடி அறியாமையாளர்களுக்கு அறி வொளியாகப் பாய்ச்சப்படவில்லையே!

தி.மு.. அரசு  இதற்கென ஒரு பிரச்சாரக் குழுவை - பகுத்தறிவாளர்களைக் கொண்டு அமைத்து, கிராமங்களில் துவங்கி, நடத்திட ஏற்பாடு செய்வது அவசியம். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்  51A(h) பிரிவு, அறிவியல் மனப்பான்மையைப் பரப்புதலையும், ஏன்? எதற்கு? என்று ஆராய்ந்து கேள்வி கேட்பதையும், சீர்திருத்தத்தையும், மனித நேயத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும், குடி மகளுக்கும் பரப்புதலையும் அடிப்படைக் கடமையாக வற்புறுத்துகிறது. இதனை செய்வதின் மூலம் திமுக இந்தியாவிற்கே வழிகாட்டியது போலாகும். மது விலக்கையும், இணைத்துக் கொள்ளலாம் - தமிழ்நாடு முதலமைச்சர்,  தமிழ்நாடு அரசு சிந்திக்குமா?

கி.வீரமணி 

தலைவர்

திராவிடர் கழகம் 

 சென்னை    

 21.6.2021            

No comments:

Post a Comment