இணையதளம் இணையிலா கேடுகளின் இருட்டறையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 21, 2021

இணையதளம் இணையிலா கேடுகளின் இருட்டறையா?

 அறிவியல் கண்டுபிடித்த சாதனங்கள் - அழிவு வேலைக்கா பயன்பட வேண்டும் - பச்சிளம் குழந்தைகளின் ஒழுக்கக் குரல்வளையையா நெரிக்க வேண்டும் - எதிர்கால வாழ்வை இருட்டுக் குகைக்குள்ளே தங்களுக்குத் தாங்களே பூட்டிக் கொண்டு தற்கொலையா செய்து கொள்ள வேண்டும்?

கடந்த ஒரு வார காலமாக ஒரு தகவல் ஊடகங்களில் முதல் இடத்தில் உலா வருகிறது. நாட்டில் எத்தனை எத்தனையோ இன்றியமையாத பிரச்சினைகள் இருந்தாலும் - பெற்றோர்களைத் திடுக்கிட வைக்கும் - நாட்டு நலனில் அக்கறை கொண்ட நற் சிந்தனையாளர்களின் ஈரல் குலையை நடுங்க வைக்கும் விபரீதமானது அந்தச் செய்தி!

இணையதளத்தில் 'பப்ஜி' என்ற விளையாட்டு - (உயிர்களைக் கூடப் பலி வாங்கியுள்ளதாம்) இளம் வயதில் உள்ளவர்களை இழுத்துப் போட்டு - அந்த வலையில் விழச் செய்த நிலையில், அது தடை செய்யப்பட்டது.

சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து தப்பிக்க வழியா தெரியாது - வழிகளைச் சொல்லிக் கொடுக்கும் கெடு மதியாளர்களுக்கு நாட்டில் பஞ்சமா என்ன?

எவரோ மதனாம், பப்ஜிக்குத் தடை என்ற நிலையில் இன்னொரு பெயரில் (ஃப்ரி ஃபயர்) அந்தத் 'திரு' விளையாட்டை நடத்தி வந்திருக்கிறார்.

இவன் நடத்தும் இந்த அமைப்பில் எட்டு லட்சம் பேர் சந்தாதாரர்களாம்.

சரி, அப்படி அவர் என்னதான் செய்கிறார் - பேசுகிறார்? 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட இருபால் இளைஞர்களுடன் (பள்ளிகளில் படிக்கும் மாணவப் பருவத்தினரும் உண்டு) விளையாடும்போது மிகவும் இழிவான, ஆபாசமான, பாலியல் உணர்வுகளைத் தூண்டக் கூடிய வார்த்தைகளை சரமாரியாக அள்ளிக் கொட்டுவாராம்.

ஹார்மோன் மாற்றங்களுக்கு ஆளாகும் வயதுப் பிள்ளைகள் இந்த மதனின் மதன காமராஜக் கணைகளின் போதைக்குத் தங்களை இழந்து விடுவார்கள்.

இந்த நிலையில் இளம் குருத்துகள் இவரின் இரசிகர்களாகவே ஆகிவிட்டனர்.

இளம் பெண்களிடம் "உன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் - ஆனால் சந்தோஷமாக வைத்துக் கொள்வேன்" என்கிற அளவுக்கு அத்துமீறியிருக்கிறார்.

பள்ளிகளில் கரும் பலகையில் 'மதன்op (Over Powered)  என்று எழுதி அதனை 'செல்பி' எடுத்து மதனுக்கு அனுப்பும் அளவுக்கு மாணவர்களின் புத்தி கெட்டு நாசமாகப் போயிருக்கிறது.

இன்னொரு வகையில் பண வேட்டையும் நடக்கும். அந்த ஆசாமி பேசிக் கொண்டிருக்கும்போதே திரையில் (ஸ்கிரீனில்) 'கூகுள்  பே' வங்கி விவரங்கள் ஓடிக் கொண்டு இருக்கும்.

இவரின் ஆபாசப் போதையில் சிக்கிய மாணவர்கள் வீட்டில் பணத்தைத் திருடி  அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

பிரச்சினை முற்றிப் பெரும் அளவுக்கு வெடித்துச் சிதறிய நிலையில் நூற்றுக்கணக்கில்  ஆதாரக் குவியல்களுடன் காவல்துறைக்குப் புகார்கள் குவிந்தன. நேரிலும் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் தான் காவல்துறை செயல்பட்டு அவரைக் கைது செய்துள்ளது.

நமக்குள்ள கேள்வி, காவல்துறையில் 'சைபர் கிரைம்' என்ற ஒரு தனிப்பிரிவே இருக்கிற நிலையில் - பொது மக்கள் புகார்கள் கொடுத்ததற்குப் பிறகுதான் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டுமா? முளையிலேயே கிள்ளியிருந்தால், இந்த விபரீதம் உச்சக் கட்டத்திற்குச் சென்று, 8 லட்சம் இளம் குருத்துகள் மன அளவில் பாதிக்கப்பட்டு சீரழிவுக் குழியில் விழும் அளவுக்குச் சென்று இருக்குமா?

டாக்டர் சிவபாலன் இளங்கோ என்ற மனநல மருத்துவர் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றபோது சொன்ன கருத்து மிகவும் முக்கியமானது. இதில் பெற்றோர்களின் பொறுப்பற்ற தன்மை முக்கியமானது. நீண்ட நேரம் தம் பிள்ளைகள் தொலைப்பேசியிலேயே காலத்தைக் கழிக்கிறார்களே அதுகுறித்துக் கவனம் செலுத்தியதுண்டா? படிக்காதவர்களை விட்டுத் தள்ளுங்கள் - படித்த பெற்றோர்கள் ஏன் இதில் அசட்டையாக இருக்கிறார்கள்?

இதில் உயர் மட்ட நிலையிலே உள்ள சமூகத்தார்கள் - அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தப்பித்துக் கொள்ளும். கெட்டுக் குட்டிச் சுவராவது படித்து, இப்பொழுது தான் தட்டுத் தடுமாறித் தலை எடுக்கும் குடும்பங்கள்  - அவற்றைச் சேர்ந்த இளங் குருத்துகள் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கிவிடும் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

No comments:

Post a Comment