இரண்டிலொன்று வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

இரண்டிலொன்று வேண்டும்

- சித்திரபுத்திரன்

25.10.1931- குடிஅரசிலிருந்து...

ஏதாவது ஒரு காரிய சித்திக்கு இரண்டிலொரு சக்தி வேண்டும் அவை யாவன.

1. கைபலம் (பலாத்காரம்)

2. புத்தி பலம் (சூழ்ச்சி அல்லது தந்திரம்)

மொகலாயர் கை பலத்தில் ஆண்டார்கள்.

வெள்ளையர் புத்தி பலத்தில் ஆண்டார்கள்.

இந்திய பொது மக்களுக்கு இரண்டும் இல்லை, எப்போதும் இருந்ததில்லை, ஆதியில் ஆங்காங் குள்ள கொள்ளைக்கூட்டத்தலைவர்கள் அவ்வப்போது சில்லரை சில்லரை யாய் ஆண்டிருப்பார்கள்.

ஆனால், ஆரியர்களுடைய (பார்ப்பன) சூழ்ச்சியானது மக்களைப் பிரித்துவைத்து புத்தியும், பலமும் இல்லாமல் செய்து தாங்கள் மாத்திரம் எந்தக் காலத்திலும், எப்போதும் ஆதிக்கம் செலுத்தி தாங்கள் மாத்திரம் மேன்மையாய் வாழும்படி செய்து கொண்டார் களே ஒழிய இந்தியாவுக்கோ, அல்லது இந்தியப் பொதுமக்களுக்கோ எவ்வித பயனும் ஏற்படவில்லை

திரு. காந்திக்குப் பலமும் இல்லை, புத்தியும் இல்லை, ஆனால், ஆரியரின் கையாளாய் இருப்பதால், ஆரியர்கள் தங்களது சூழ்ச்சியைத் திரு.காந்தி மூலமாய் வெளியாக்குவதன் மூலமும், அவற்றிற்கு விளம்பரம் கொடுப்பதன் மூலமும் ஏதாவது வெற்றிகிடைத்தால் அது ஆரியருக்கு மாத்திரம் பயனளிக்ககூடியதாகும். மற்றும் ஆரியருக்குச் சிறிது செல்வவான் உதவி வேண்டியிருப்பதற்காக செல்வவான்களையும் தங்களுடன் சேர்த்துக் கொள்ளுவார்கள்.

ஆகவே, இந்தியப் பொதுமக்களுக்கு வெற்றி, அதாவது விடுதலை வேண்டுமானால் பலம் வேண்டும்.

பலம் வேண்டுமானால் ஒற்றுமை வேண்டும், ஒற்றுமை வேண்டுமானால் ஜாதி வகுப்புப்பிரிவு ஒழிய வேண்டும், ஜாதி வகுப்பு பிரிவு ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டுமானால் பகுத்தறிவு

வேண்டும்.

பலம் இல்லாமல் சூழ்ச்சியாவது வேண்டுமானால் கல்வி அறிவு வேண்டும், கல்வி அறிவு வேண்டுமானால் அதற்கு தடையான காந்தீயம்  என்னும், பார்ப்பன ஆதிக்கம் ஒழிய வேண்டும்.

இரண்டும் இல்லாமல், காரியசித்தி வேண்டுமானால் ஒற்றுமையும், பலமும் உள்ள சமுகத்தோடு சேர்ந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment