நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் சிறிய கால்வாயின் மீது ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம்தான் உலகின் முதல் முப்பரிமாண அச்சியந்திரத்தில் அச்சிட்டு எடுக்கப்பட்ட பாலம். முழுவதும் எஃகினால் வார்க்கப்பட்ட இப்பாலமெங்கும் பல உணரிகள் பொருத்தப்பட்டுள்ளன.
பாதசாரிகள் பயன்படுத்துகையில், பாலத்தின் கட்டமைப்பில் ஏற்படும் தேய்மானம் மற்றும் சுமையின் தாக்கங்களை துல்லியமாக உணரிகள் தெரியப்படுத்திவிடும். ஜோரிஸ் லார்மான் லேப் என்ற நிறுவனத்தின் பொறியாளர்கள் வடிவமைத்துள்ள, இந்த உலோகப் பாலம் 40 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்டது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள எஃகின் எடை மட்டும் 6 ஆயிரம் கிலோ.
எம்.எக்ஸ்.3டி என்ற நிறுவனத்தின் நான்கு ரோபோக்கள் சேர்ந்து உயர் வெப்பத்தால் உருகிய உலோகத்தைக் கொண்டு இந்தப் பாலம் 6 மாதங்களில் வடிவமைக்கப்பட்டது. பரிசோதனை முறையில் தயாரான இந்தப் பாலத்தின் மூலம் கற்றுக்கொண்டவற்றை வைத்து, அடுத்து முப்பரிமாண அச்சில் பாலங்களை விரைவில், அதிக தரத்துடன் தயாரிக்க முடியும் என எம்.எக்ஸ்.3டியின் பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment