தமிழர்களுக்கு புதுவாழ்வு தந்தவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

தமிழர்களுக்கு புதுவாழ்வு தந்தவர்

* தந்தை பெரியார்

கலைஞர் அவர்கள் நமக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு என்று சொல்ல வேண்டும். இதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சிக்காரர்களைவிட பகுத்தறிவாளராவர்.

அவருக்குப் பிறந்த நாள் மலர் வெளியிடுவது அவரது கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகும்.

மனிதர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதாவது நம்பிக்கையாளர்கள், பகுத்தறிவாளர்கள் என்பதாகும்.

முன்னோர்கள் சொன்னது பழைய காலம் முதல் இருந்து வருவது என்பதற்காக எதையும் சிந்திக்காமல் கடவுள் - மதம் - ஜாதி - சாஸ்திரம் என்கிற பெயரால் பல மடைமைகளைச் சிந்திக் காமல் ஏற்றுக் கொள்பவர்கள் நம்பிக்கை யாளர்கள் ஆவார்கள்.

அறிவைக் கொண்டு ஆராய்ந்து அறி விற்கும் ஏற்றதை ஏற்றுக் கொண்டு மற்றதை தள்ளிவிடக் கூடியவர்கள் பகுத்தறிவாளர்கள் ஆவார்கள். இதில் நம் நாட்டில் நம்பிக்கையாளர்கள்தான் அதிகம். பகுத்தறிவாளர்கள் இருப்பது மிகமிகக் குறைவேயாகும்.

நமது கலைஞர் அவர்கள் தலைசிறந்த பகுத்தறிவுவாதி ஆவார்.

இத்தகைய பகுத்தறிவாளராகவும் ஆட்சிக்கலையில் அரிய ராஜ தந்திரியாகவும், முன்யோசனையுடனும் அவர் நடந்து வருவதின் மூலம் தமிழர்கட்கு புதுவாழ்வு தருபவர் ஆகிறார் நமது கலைஞர். அவர் பல்லாண்டு வாழ்ந்து அவர் பணி வெற்றியடைய வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

- தலைவர் கலைஞர் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் - 2016

"பெரியாரைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது!"

* கலைஞர்

பெரியாருடைய பள்ளியிலே சட்டாம் பிள்ளையாக இருந்து நம்மை வழி நடத்தியவர் பேரறிஞர் அண்ணா. அந்தக் கல்லூரியிலே படித்த மூத்த மாணவர்களிலே ஒருவன் நான். நான்தான் இன்றைக்கு உங்களை யெல்லாம் சந்திக்கிறேன் - என்றால் எப்படி? எனக்குப் பகுத்தறிவு பாடம் போதித்த பெரியாரை மறவாமல், என்னுடைய உள்ளத்திலே சுயமரியாதை உணர்வை விதைத்த அய்யாவை மறவாமல், அந்த பெரியார் தந்த அருமையான கொள்கைகளையெல்லாம் நாட்டிலே பரப்ப வேண்டும் என்ற அந்த உணர்வோடு உங்களையெல்லாம் சந்திக்கிறேன்.

இன்று உங்களுக்குக்கூட ஒரு வியப்பாக இருக்கும். என்ன கருணாநிதியை அழைத்து கூட்டம் போட்டால். அவர் தேர்தலைப் பற்றி பேசுவார். உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்பார் என்று எண்ணினால், பெரியாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாரே! அண்ணாவைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாரே! என்று நீங்கள் கருதுவீர்களேயானால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கருணாநிதியாரைப் பற்றிப் பேசினாலும், யாரைப்பற்றி புகழ்ந்துரைத்தாலும், யாரைப்பற்றி கவிதைப் பாடினாலும் அதற்கெல்லாம் மூலவித்தாக இருப்பது சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம், - தந்தை பெரியாருடைய போதனைகள், அறிஞர் அண்ணாவினுடைய அறிவுரைகள் இவைகள் இல்லாமல் கருணாநிதியால் பேச முடியாது.

(6.4.2014 அன்று ஈரோடு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலைஞர் - முரசொலி 7.4.2014)

 

No comments:

Post a Comment