மற்றவர்கள் எல்லாம் பெண்கள் விடுதலையைப்பற்றி பாடினார்கள், பேசினார்கள், எழுதினார்கள் பெரியார் சொன்னதோடு- எழுதியதோடு தன் பணி முடிந்தது என்று கருதவில்லை; அவற்றை செயல்படுத்தினார் - சமத்துவத்தைக் காட்டினார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 8, 2021

மற்றவர்கள் எல்லாம் பெண்கள் விடுதலையைப்பற்றி பாடினார்கள், பேசினார்கள், எழுதினார்கள் பெரியார் சொன்னதோடு- எழுதியதோடு தன் பணி முடிந்தது என்று கருதவில்லை; அவற்றை செயல்படுத்தினார் - சமத்துவத்தைக் காட்டினார்!

மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழாவில் தமிழர் தலைவர் உரை

சென்னை, ஆக.8  மற்றவர்கள் எல்லாம் பெண்கள் விடுதலையைப்பற்றி பாடினார்கள், பேசினார்கள், எழுதினார்கள்; காலத்தைக் காட்டி, அவர்களை முன்னோடிகள் என்றார்கள்; பெரியார் சொன்னதோடு நிற்கவில்லை; எழுதியதோடு தன் பணி முடிந்தது என்று கருதவில்லை. செயல்படுத்தினார். சமத்துவத்தைக் காட்டினார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .

மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு

கடந்த 31.7.2021 அன்று, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், திராவிடர் கழகத்தின் மகளிரணி, திராவிட மகளிர் பாசறையும் இணைந்து நடத்திய மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு - 1, வகுப்பு - 2 ஆகிய இரண்டு வகுப்புகளின் நிறைவு விழாவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

அவரது  நிறைவுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

தாய்மையினுடைய சிறப்பு, கற்பினுடைய பெருமை என்று நம் நாட்டில் பேசாதவர்களே கிடையாது.

ஆனால், நடைமுறையில் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியம்.

அய்யா மிக எளிமையாக இரண்டு விஷயங்களைக் கேட்கிறார்.

பெண் விடுதலையைப்பற்றி நாம் இவ்வளவு பெரிய புத்தகம் வெளியிட்டு இருக்கிறோம். இதைப்பற்றி பலப் பல இடங்களில் சொல்லியிருக்கிறோம்.

அய்யா அவர்கள், பெண்ணிய சிந்தனை, சமத் துவத்தைப்பற்றி சொல்லும்பொழுது,

செங்கற்பட்டு மாநாட்டுத் தீர்மானம்!

செங்கற்பட்டு சுயமரியாதை மாகாண மாநாட்டில், ஆண் - பெண் பேதமில்லாத ஒரு வாழ்க்கை - பெண் ணுக்கு சம உரிமை வேண்டும்.

சொத்துரிமை - கல்வி உரிமை - உத்தியோக உரிமை - அது காவல்துறையாக இருந்தாலும், இராணுவத் துறையாக இருந்தாலும் என்று தீர்மானம் நிறைவேற்றி னார் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்பாக.

நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, தன்னுடைய வாழ்க் கையில் அதனை செயல்படுத்தியிருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள்.

நீங்கள் எல்லாம்பெரியார்' திரைப்படம் பார்த்திருப் பீர்கள். அதில் ஒரு காட்சி வரும்.

‘‘பெண் ஏன் அடிமையானாள்?''

தன்னுடைய தங்கை மகள் அம்மாயிக்கு பால்ய விவாகம் செய்து வைக்கிறார்கள்; அந்த மணமகன் கால்ரா நோயினால் இறந்து போக, அந்த சிறு பெண் ணுக்கு விதவைக் கோலம் பூண முயற்சிக்கிறார்கள். அப்பொழுது அந்தப் பெண் தன்னுடைய தாய்மாமனான பெரியாரின் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுகிறார். அந்தக் குழந்தையைத் தூக்கி நிறுத்தும்பொழுதே -  ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்ற நூலில் சொல்லியிருப்பார் - ‘‘நான் தூக்கி நிறுத்தும்பொழுதே,  அதற்குப் புது வாழ்வு கொடுக்கவேண்டும் என்று தூக்கி நிறுத்தி னேன்'' என்று அழுத்தம் திருத்தமாக எழுதியிருப்பார்.

அதை வாழ்க்கையில் செய்து காட்டினார். எப்பொழுது?

110 ஆண்டுகளுக்கு முன்பு.

இன்றைக்குக்கூட சீர்திருத்தம் பேசுகிறவர்கள்கூட - ஆணாதிக்க சிந்தனை ஒரு பக்கம் உண்டு. விதவைத் திருமணம் என்றால் யோசிக்கிறார்கள்; மணவிலக்குப் பெற்றவர்கள் என்றால், அதைவிட யோசிக்கிறார்கள். ஏன்? இன்னும் அவர்கள் பக்குவப்படவில்லை.

ஆணினுடைய சுயநலம் இதில் அதிகமாக இருக் கிறது. இதையும் தாண்டி ஒருவர் சிந்தித்தார் என்றால், அதுதான் தந்தை பெரியார்.

அவர் சென்ற எல்லைக்கு யாரும் போகவில்லை.

பெண்களாக இருந்து அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்!

1938 இல் அய்யா சொல்கிறார்,

‘‘பெண்கள் சுதந்திர விஷயமோ மோசமாக இருக்கின்றது; பெண்கள் விலை பொருள்களாகவே மதிக்கப்படுகின்றனர். குழந்தைப் பருவம், இளமைப் பருவம், கல்யாணப் பருவம், வாழ்க்கைப் பருவம், முதுமை ஆகிய எல்லா பருவங்களிலும், பெண்கள் அடிமைப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.

இவற்றைப் பற்றியெல்லாம் நான் சொல்வது, பழைமை விரும்பிகளுக்குக் கஷ்டமாகத் தோன்ற லாம்; அப்படிப்பட்டவர்கள் பெண்களாக இருந்து அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்'' என்றார்.

இந்த ஒரு வரியை நீங்கள் கொஞ்சம் விளக்கிப் பாருங்கள்.

சமுதாயத்தில் சரி பகுதியாக உள்ள பெண்கள் அடிமையாக இருந்தால், அந்த சமுதாயம் எப்படி முன்னேற்றம் அடைய முடியும்?

எனவே, பெண்கள் விடுதலை, பெண்கள் உரிமை, பெண்களின் சமத்துவம் என்பது, பெண்களுக்காக மட்டுமல்ல, மனித குலத்தினுடைய விடுதலைக்கே அது முக்கியமானது.

விரிந்த பார்வை - விசாலமான பார்வைவிஞ்ஞான பார்வை!

பெரியாருடைய பார்வை - விரிந்த பார்வை - விசாலமான பார்வை - விஞ்ஞான பார்வை.

ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டுEmpathy என்று. நான் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். கல்லூரி தோழர்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள். இதுவரையில், பெரும்பாலான பயன் நடைமுறையில் Sympathy  என்றுதான் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால், Empathy என்ற வார்த்தை புழக்கத்திலேயே வரவில்லை. ஏன் படித்தவர்களுக்குக்கூட Empathy என்ற வார்த்தை தெரியாது. Sympathy என்ற வார்த்தை நிறைய பேருக்குத் தெரியும்.

எம்பதி என்றால் என்ன?

I Express my Sympathy ஆனால், Empathy என்றால் என்ன?

இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

இதைப் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். இந்தக் காணொலி கூட்டத்திலும் சொல்கிறேன்.

ஒருவருக்கு ஒரு இழப்பு ஏற்படும்பொழுது நாம் அனுதாபப்படுவோம்.

அய்யோ அவருடைய கணவர், கரோனா தொற்றி னால் இறந்துவிட்டாரா? அனுதாபத்தைத் தெரிவிக் கிறோம் என்று சொல்வது இரங்கல் - சிம்பதி.

ஆனால், மிக நெருக்கமாக இருக்கக் கூடியவர்கள், பழகக் கூடியவர்கள் என்று சொல்லும்பொழுது, அவர் களுடைய துன்பத்தை அப்படியே உணர்ந்து, உணர்ந்து இருக்கக்கூடியது என்பது சாதாரணம், முதற்கட்டம்.

ஆனால், உண்மையில், எம்பதி என்றால் என்ன வென்றால், முழுக்க முழுக்க அவர்களாகவே மாறிவிடுவது. அவர்கள் அணிந்த காலணியை, ஒரு காலை விட்டு நடந்து செல்வது - அவர்களுடைய உணர்வு களாகவே மாறிவிடுவது.

நோயாளிகள் துன்பப்படுவதைப் பார்த்து இரங்குவது என்பது வேறு; நோயாளி இடத்தில் தன்னை வைத்துப் பார்ப்பது என்பது வேறு.

பெரியார் அவர்கள், மனித குலத்தைப் பார்த்து, அதிலும் அடிமைகளாக இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட வர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்களை எப்படிப் பார்த்தார்களோ, அதைவிட கொடுமைகளை அனுபவிக்கக் கூடிய பெண்ணினத்திற்கு விடுதலை வேண்டும் என்று பாடுபட்டார்கள்.

எம்பதி என்பதற்குத் தமிழ்ச் சொல் என்னவென்றால், ஒத்தறிவு என்று நாம்தான் உருவாக்கினோம்.

திருக்குறளில்கூட அந்த வார்த்தை இருக்கிறது.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்.

பட்டறிவு, பகுத்தறிவு போன்று, நாமே உருவாக்கிய சொல் ஒத்தறிவு.

துன்பப்படுபவரைப்போலவே மாறிவிடுவது.

வள்ளுவருடைய மனிதாபிமானம் உயர்ந்தது

ஒத்தது அறிவான் என்பதிலிருந்துதான் அந்தச் சொல்லை எடுத்தோம்.

ஒத்தறிவு - ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் -

அப்படி இல்லாதவன் யார் என்றால், வள்ளுவருடைய மனிதாபிமானம் உயர்ந்தது.

மற்றோர் செத்தாருள் வைக்கப்படுவர்

உயிரோடு இருந்தால்கூட, அவர்கள் செத்துப்போன வர்களின் கணக்கில்தான் வருவார்கள். அவர்களை மனிதன் என்று சொல்வது இல்லை.

மனிதன் என்று சொன்னால், மற்றவர்களுடைய துன்பத்திற்கு இரங்கினால் மட்டும் போதாது; துன்பத்தைக் களைவதில், மற்றவர்களாக ஆகிவிடுவதுதான். அந்த இடத்திலே தன்னை நிறுத்திக் கொண்டார் பெரியார் அவர்கள்.

பெண்களைப் பாருங்கள், அவர்களை அடக்கி வைத்திருக்கிறீர்களே என்றார்.

தன்னுடைய சகோதரி மகள் என்று மட்டும் அவர் அன்றைக்குச் சொல்லவில்லை.

அந்த சிந்தனை, துணிச்சல் இன்றைக்கு எவ்வளவு வந்திருக்கிறது; எத்தனை தலைமுறை வந்திருக்கிறது?

பெரியார் சொன்னதோடு முடிந்தது என்று கருதவில்லை -

அவற்றை செயல்படுத்தினார்!

மற்றவர்கள் எல்லாம் பெண்கள் விடு தலையைப்பற்றி பாடினார்கள், பேசினார்கள், எழுதினார்கள்; காலத்தைக் காட்டி, அவர்களை முன்னோடிகள் என்றார்கள்; பெரியார் சொன்ன தோடு நிற்கவில்லை; எழுதியதோடு தன் பணி முடிந்தது என்று கருதவில்லை. செயல்படுத்தினார். சமத்துவத்தைக் காட்டினார்; அந்தப் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்தார். குடும்பத்தினரின் எதிர்ப்பைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. குடும்பத்திலே அவர் எதிர்நீச்சல் அடித்துத்தான், பொதுவாழ்க்கைக்கு வந்து, சமூகத்திலும் எதிர் நீச்சல் அடித்து வந்தார்.

இப்படிப்பட்ட ஒரு தலைவரைப் பார்க்க முடியுமா?

இப்படிப்பட்ட கொள்கை எவ்வளவு பெரிய மானுடத்தினுடைய உச்சம்.

மானிடத்தினுடைய மிகப்பெரிய ஒரு மலர்ச்சி. அதையெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா?

மனிதனை மனிதனாக்குவது என்பதுதான்!

ஆகவேதான், பெண்ணுரிமை என்பது, அது ஏதோ உரிமை, அதைப்பற்றி பேசுகிறார்கள்; அது என்னங்க, என்று அலட்சியமாகப் பேசுவது என்பது இருக்கிறதே - மனிதாபிமானம் - மானுடப்பற்று.

ஏனென்றால், ஒரு மனிதனுக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம்; ஆனால், அவனை மனிதனாக்குவது என்பது அவ்வளவு சுலபமல்ல.

நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டும். திருமண மானவர்கள் நம்மில் நிறைய பேர் இருக்கிறோம். நம்முடைய வாழ்விணையரிடம் இதை நூற்றுக்கு நூறு கடைபிடிக்கின்றோமோ? இந்தக் கேள்விக்குத் தெளிவான பதில் உண்டா? சிக்கல்தான்.

ஏனென்றால், நான் சுயநலக்காரன் - என்னுடைய வாழ்விணையர் நல்ல வேலைக்காரியாக இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும். என்னை அறியாமல், அந்த ஆதிக்கத்தனம் - நான் இதுவரை சமையல் அறைக்குள் செல்லவில்லையே! இதுதான் வாழ்க்கை முறை.

இதை தந்தை பெரியார் விருப்பு, வெறுப்பில்லாமல் பார்த்தார்.

ஆகவேதான், ஒரே வார்த்தையில் சொன்னார், பெண்களாக இருந்து அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்; அவர்களுடைய கஷ்டத்தை அனுபவியுங்கள் என்றார்.

அதுமட்டுமல்ல, பிறப்பதற்குக்கூட சுதந்திரம் இல்லை என்பது மட்டுமல்ல, குழந்தை பருவம், இளமைப் பருவம், கல்யாணப் பருவம், வாழ்க்கைப் பருவம், முதுமைப் பருவம் எல்லா பருவத்திலும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள்.

அதை மாற்றிக் காட்டினார் பெரியார் அவர்கள்.

பெண்களுக்குப் படிப்பைக் கொடு; சுதந்திரத்தைக் கொடு.

சரி, பெண்களுக்கு படிப்பையும், சுதந்திரத்தையும் கொடுத்தால் மட்டும் போதுமா?

அவர்களுக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும்.

சமத்துவம் - சொத்துரிமை கொடுக்கவேண்டும் அவர்களுக்கு.

இவ்வளவு இருந்தாலும், இன்னமும் ஆண் எஜமானன்தான்; அடிப்படையில் இது ஆணாதிக்க சமுதாயம்தான்.

ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் பெரியார் நுழைந்தால்தான்இன்ப வாழ்வு வாழலாம்!

முழுக்க பெரியாரியம் உள்ளே நுழைந்தால்தான், அது வேலை செய்தால்தான், அதனுடைய கருத்து வீச்சு உலகளாவிய அளவில் பரவினால்தான், ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் பெரியார் நுழைந்தால்தான், இன்ப வாழ்வு வாழலாம்.

இன்ப வாழ்வு - இப்பொழுது இருப்பது துன்ப வாழ்வுதான். பல நேரங்களில் துன்ப வாழ்விற்கு என்ன அடிப்படை?

அந்த எஜமானத்தனம்தானே!

பெண்கள் அடிமையாக இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்புதானே!

படித்த பிறகு, பக்குவம் பெற்ற பிறகு, பகுத்தறிவு சிந்தனைக்கு ஆளான பிறகு, பெண்கள் அவ்வளவு சுலபமாக அடிமைகளாக இருப்பார்களா?

அப்பொழுது அவர்கள் எதிர்த்து நிற்கிறபொழுது, கொஞ்சம் மாறுபடுகிறபொழுது,

, என்னையா எதிர்க்கிறாய்? என்று நினைக்கக் கூடிய அளவிற்கு இருப்பார்கள் ஆண்கள்.

பெரியார்தான் கேட்டார்,

பெண்கள் அடிமையானது மட்டுமல்ல, உடல்மீது அவர்களுக்கு உரிமை இருக்கிறதா?

பெண்ணடிமையைப் போக்குவதைப்பற்றி மட்டும் பேசிவிட்டு செல்லவில்லை. இதோ சுயமரியாதைத் திருமணம் - இரண்டு பேரும் நண்பர்கள். ஒருவர் எஜமானன் - இன்னொருவர் அடிமையல்ல.

இரண்டு பேரும் நண்பர்கள்.

வைதீகத் திருமணத்தில் இப்படியா?

கன்னிகாதானம் என்று சொல்லி தானம் கொடுப்பது; பொருள்களைத்தான் தானம் கொடுப்பார்கள்; மனிதனை தானம் கொடுப்பார்களா?

மனிதம் இல்லை அந்த இடத்தில்.

தத்துவத்தில், சமத்துவத்தில், சம வாய்ப்பில் அவர்கள் மனிதர்களாக இல்லை!

ஆகவேதான், பெரியாருடைய தத்துவம், பெண் ணுரிமை என்பது மட்டுமல்ல - மனிதர்களை மனிதர் களாக்குவது; மனிதர்கள் மனிதர்களாக்கப்பட வேண்டும். உருவில் மனிதன்; தத்துவத்தில், சமத்துவத்தில், சம வாய்ப்பில் அவர்கள் மனிதர்களாக இல்லை.

அதைக் கண்டு பெரியார் நொந்து போனார்; அதைக் கண்டு ஆத்திரப்பட்டார். மேலும், அதைக் கண்டு கொதித்துப் போனார். அநியாயமாக இருக்கிறதே, இது என்ன கொடுமை? அதை ஏற்கலாமா? என்று கேட்டார்.

அதுமட்டுமல்ல, ஏற்க முடியாதவர்களுக்கு, எளிமையாக ஏற்றுக்கொள்வது எப்படி என்பதற்கு, அழகாக ஒரு கருத்தை சொல்கிறார் பாருங்கள்.

பெரியாருடைய புரட்சிகரமான சிந்தனை - எவ்வளவு மென்மையான வழிமுறையின்மூலம் அதைப் புகுத்துவதற்குத் தயாராக இருந்தார்.

கடுமையான கருத்துகளும் இருக்கின்றன; ஆனால், மென்மையாக சொல்லக்கூடிய கருத்தை சொன்னார்.

பெண்களுக்கு உரிமை கொடுக்கும்பொழுது ஆண்களே உங்கள் மகளை நினைத்துக் கொள்ளுங்கள்!

ஆண்களே, பெண்களுக்கு உரிமை கொடுக்கும் பொழுது, உங்களுடைய மனைவியை நினைக்காதீர்கள்; ஏனென்றால், நீங்கள் எஜமானன்; அனுபவித்துக் கொண்டே இருக்கிறீர்கள். தயவு செய்து உங்களுடைய மகளை நினைத்துக்கொண்டு இந்தப் பிரச்சினையைப் பாருங்கள்.

எல்லோரும் தன்னுடைய மகள் நன்றாக இருக்க வேண்டும்; சுதந்திரமாக இருக்கவேண்டும் என்றுதானே நினைப்பார்கள்.

உங்கள் தாயை நினைத்துக்கொண்டு பாருங்கள்; என்னுடைய தாய் இப்படி குடிகார அப்பனிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறாரே என்று நினைத்துப் பாருங்கள்; இதுபோன்ற ஊதாரித்தனமான  பேர்வழியை, கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று நினைக்கிறார்களே!

பெரியார் சொல்கிறார்,

உங்கள் தாயை நினைத்துக்கொண்டு பாருங்கள், உங்களுடைய தங்கையை நினைத்துக் கொண்டு பாருங்கள் என்றார்.

அய்யோ, என் தங்கையை நான் ஒருவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தேன். அவன் திருட்டுப் பயலாக இருக்கிறானே - மிகவும் மோசமானவனாக இருக்கிறானே - என்ன சொன்னாலும் திருந்தாதவனாக இருக்கிறானோ என்று நினைக்கிறார்கள்.

அதே சமயம், மனைவி என்று வரும்பொழுது, இவன் நூற்றுக்கு நூறு அனுபவிக்கிறானே - நான் அடிக்கடி மணவிழாக்களில் சொல்கிற உதாரணத்தை இங்கேயும் சொல்கிறேன்.

மகன், மகளுக்குத் திருமணம் செய்து விட்டீர்கள். உங்களுக்கு இனி நிம்மதிதான் என்று கேட்டுவிட்டு, சரி, மகள் எப்படி இருக்கிறாள்? என்று கேட்டால்,

நல்ல மருமகன் அவர். என்னுடைய மகள்  என்ன சொல்கிறாளே, அவள் கிழித்த கோட்டை தாண்டாமல், அமைதியாக இருக்கிறார் என்று சொல்கிறார்.

சரி, உங்களுடைய மருமகள் எப்படி இருக்கிறாள்? என்று கேட்டவுடன்,

ஆமாம், அதை ஏன் கேட்கிறீங்க; எனக்கு என்று வந்து வாய்த்தாளே என்று சலிப்புடன் சொல்கிறார்.

ஒரே சிந்தனை - ஒரே நோக்கு -

அதுமட்டுமல்ல, பெண் குழந்தை பிறப்பதற்கே மிகப்பெரிய கொடுமை!

ஆகவேதான், பெண்ணுக்குப் பிறக்க உரிமையில்லை - வாழ உரிமையில்லை - படிக்க உரிமையில்லை - சொத்துரிமை இல்லை.

இன்றைக்கு சட்டங்கள் வந்திருக்கின்றன என்று நீங்கள் சொல்லலாம்.

சட்டங்கள் வந்திருக்கின்றன - சட்டங்கள் எங்கே இருக்கின்றன? புத்தகத்தில் இருக்கின்றன. அது நடைமுறைக்கு வந்ததா? என்றால், இல்லை.

நாம் போகவேண்டிய தூரங்கள் நிறைய இருக்கின்றன!

எனவேதான், நாம் போகவேண்டிய தூரங்கள் நிறைய இருக்கின்றன.

திருமணம் முடிந்தவுடன், எத்தனை குழந்தை என்ற கேள்வியைத்தான் எல்லோரும் கேட்பார்கள். அந்த உரிமை யாருக்கு?

அடுத்தாக பெரியார் ஒரு கேள்வி கேட்டார்,

திருமண அழைப்பிதழில் என்ன அச்சடிக்கிறார்கள் என்றால், ‘‘பெரியோர்களால் நிச்சயித்தபடி'' என்று.

ஏண்டா, பெரியோர்களால் நிச்சயித்தபடி என்றால்,  இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் அவர்களுக்குத்தான் உரிமையே தவிர, பெரியோர்களுக்கு என்ன வேலை?

‘‘எங்களால் நிச்சயித்தபடி, நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டபடி என்று போடுங்கள்'' என்றார்.

அதுதான் வாழ்க்கை - அதுதான் சமத்துவம் - அதுதான் வாய்ப்பு என்று மிகத் தெளிவாக சொன்னார்.

ஆகவே நண்பர்களே, இது ஒரு பகுதி -

இன்றும் தேவைப்படுவார் - நாளைக்கும் தேவைப்படுவார் -என்றைக்கும் தேவைப்படுவார்!

எனவே, சம உரிமைகளைப்பற்றி பேசக்கூடிய உணர்வுகளை உருவாக்கி, அதிகாரத்திற்குரிய சட்டங் களுக்காகப் போராடி வெற்றி பெற்று செயல்படுகின்ற கட்டத்தில், எப்படி வந்திருக்கிறார் என்று சொல்லும் பொழுது, இனிமேல்தான் பெரியார் இன்னமும் தேவைப் படுகிறார். இன்றும் தேவைப்படுவார் - நாளைக்கும் தேவைப்படுவார் -என்றைக்கும் தேவைப்படுவார்.

எனவேதான், அருமை மாணவச் செல்வங்களே, நீங்கள் வயது இடைவெளி இல்லாமல் வந்திருக்கிறீர்கள். பெரியார்தான் மிகப்பெரிய ஓர் ஆயுதம் - ஒரு பாதுகாப்பு அரண்.

சமத்துவத்தை நிறுவியவர் அவர்தான்.

பெரியார் அவர்கள் புல்டோசர் மாதிரி - சமுதாயத்தை சமமாக்குவதற்குக் கஷ்டப்பட்டு இருக்கிறார்!

புல்டோசர் எப்படி எல்லாவற்றையும் இடித்து, சமமாக நிரவுகிறதோ, அதுபோன்று பெரியார் அவர்கள் புல்டோசர் மாதிரி. சமுதாயத்தை சமமாக்குவதற்குக் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

யாருக்காக?

மனிதநேயத்திற்காக என்பதை மறந்துவிடாதீர்கள்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.


No comments:

Post a Comment