தன்னை வெல்வான் தரணியை வெல்வான் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

தன்னை வெல்வான் தரணியை வெல்வான்

அறிஞர் அண்ணா

(அறிஞர் அண்ணா அவர்கள், பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் தலைவர் கலைஞர் அவர்கள் அடைபட்டிருந்த காட்சி கண்டு வெளிப் படுத்திய துயரம்.)

காலை மணி பத்து இருக்கும்; நான் அங்குச் சென்றபோது; உடன் வந் திருந்த நெல்லை நகராட்சி மன்றத் தலைவர் மஜீத், வழக்கறிஞர் இரத்தின வேலு பாண்டியன் மற்றும் பலரையும் தனியே இருக்கச் செய்து விட்டு, என்னை மட்டும், சிறை அதிகாரிகள் மூவர், கருணாநிதி இருந்த சிறைக்கூடம் அழைத்துச் சென்றனர். சந்தித்துப் பேசு வதற்காக ஒரு அறை தயாரிக்கப்பட்டி ருந்தது; இரு அதிகாரிகள் உடன் இருந்தனர். கருணாநிதி அழைத்து வரப்பட்டபோது, முன்பு பலமுறை ஒருவரை ஒருவர் சிறையினில் சந்தித்த துண்டு என்றபோதிலும், இம்முறை தனியானதோர் தவிப்புணர்ச்சி எழுந்து வாட்டியது. அதனை அடக்கிக் கொள்வது கடினம் என்றபோதிலும், கலக்கம் காட்டுவது நமது உள்ளத்தின் உறுதிபற்றி மற்றவர்களுக்கு அய்யப் பாடு ஏற்படுத்திவிடுமே என்ற அச்சம் வாட்டியது: தவிப்புணர்ச்சியைத் தள்ளி வைத்துவிட்டு, அரைமணி நேரத்திற்கு மேல் பேசிக் கொண்டிருந்தோம். முன் னாள் நள்ளிரவிலேயே நான் நெல்லை போய்ச் சேர்ந்து விட்டேன் : விடிந்ததும் என் காதில் விழுந்த முதல் செய்தி, மாறனைப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்து விட்டிருக்கிறார்கள் என்பது. நெல்லைக்குக் கிளம்புவதற்கு முன்பு காஞ்சிபுரத்திலிருந்து தொலை பேசி மூலம் மாறனிடம் பேசினேன் - கைது செய்யப்படக்கூடும் என்ற அறிகுறிகள் தென்பட்டிருந்தால்கூட என்னிடம் சொல்லி இருந்திருப்பார். ஆகவே, நெல்லையில் நான் கேள்விப் பட்ட செய்தி என்னைத் தூக்கிவாரிப் போட்டது.

கொடுமைகள் இழைக்கப்படும் போது, அநீதி தலைவிரித்தாடும்போது. அக்கிரமம் தம் அகன்ற வாயினைத் திறந்து அகோரக் கூச்சலிடும்போது, எல்லாம் இறுதியில் நன்மைக்கே என்ற தத்துவத்தைத் துணைக்கழைத்துச் சமாதானம் தேடிக்கொள்ள முடிய வில்லை. காரணம், நாம் ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் என்ற முறையிலே மட்டும் இருந்து வருபவர்கள் அல்லர்; பாசத்தால் பிணைக்கப்பட்ட ஒரு குடும்பமாகி விட்டிருக்கிறோம். அதனால் நம்மில் சிலருக்கு இழைக்கப் படும் கொடுமை. நம் எல்லோருடைய உள்ளத்தையும் வேதனையில் ஆழ்த்தி விடுகிறது.

அடக்குமுறையை வீசி அறப்போர் வீரர்களை அடக்கிவிடவோ, அவர்தம் பாசறையை ஒழித்துவிடவோ முடியாது. இது மிக எளிதாக எவருக்கும் புரிந்திடும் உண்மை என்றாலும், அரசாள்வோர், அதிலும் தமது பிடி தளர்ந்து வருவதை உணர்ந்து பீதி கொண்டுள்ள நிலையிலுள்ள அரசாள்வோர், உண்மையினை மறந்து விடுகின்றனர். சிறைக் கோட்டம் தள்ளப்படும் இலட்சியாவாதி களோ, உறுதிபன்மடங்கு கொண்டவர் களாவது மட்டுமல்ல; தன்னைப் பற்றிய எண்ணம், தனது நலனைப் பற்றிய நினைப்பு, தனது குடும்பம் பற்றிய எண்ணம், இவைகளைக்கூட மறந்து விடவும், தான் தனக்காக அல்ல, மற்றவர்களுக்காகவே என்ற நெறியினை உணர்ந்து மகிழ்ந்திடவும், தன்னைப் பற்றிய எண்ணம் எழுப்பி விடும் ஆசை. அச்சம். கவலை. கலக்கம், பிரிவாற்றாமை போன்ற உணர்ச் சிகளை வென்றிடவுமான ஒரு துறவு நிலையைப் பெற்றளிக்கிறது. இது பற்றியே சிறைச் சாலையை அறச்சாலை என்றனர்.

பாளையங்கோட்டை சிறையிலே கண்டேன் இந்தப் பேருண்மையை உணர்த்தும் எழுத்தாரத்தை. அங்கு பொறிக்கப்பட்டிருந்தது என்ன?

“தன்னை வெல்வான்! 

தரணியை வெல்வான்!”

No comments:

Post a Comment