கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட, குடியிருப்பு பெற நிதியுதவி: தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 5, 2021

கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட, குடியிருப்பு பெற நிதியுதவி: தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

சென்னை, செப்.5 கட்டுமானத் தொழிலாளர்கள் வீடு கட்டவும், குடியிருப்பில் ஒதுக்கீடு பெறவும் நிதி உதவி அளிக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் சி.வி. கணேசன் அறிவித்துள்ளார்.

பேரவையில் நேற்று (4.9.2021) தொழிலாளர் நலன், திறன் மேம் பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் சி.வி.கணேசன் கூறிய தாவது:

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த வீடு இல்லாத தொழிலாளர்கள் சொந்த வீட்டு மனை வைத்திருந்தால், அவர்கள் வீடு கட்டிக் கொள்வது அல்லதுதமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கெனவே கட்டப் பட்டுள்ள குடியிருப்பில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

கட்டுமானம், அமைப்புசாரா ஓட்டுநர், உடல் உழைப்பு தொழி லாளர் சமூக பாதுகாப்பு நலவாரியம் மற்றும் 15 நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு சமூக நலத் திட்ட உதவியாக ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். 10-ம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் தேர்ச்சிபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் தற்போது வழங் கும்  கல்வி உதவித் தொகை ரூ.1,000இல் இருந்து ரூ.2.400 ஆக உயர்த்தப்படும்.

கட்டுமானத் தொழிலாளர்களின் 11ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை ரூ.1,000 மற்றும், 12ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் தேர்ச்சி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித் தொகை ரூ.1,500 ஆகியவை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.

கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரிய தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பட்டப்படிப்புக்கான ரூ.1,500 மற்றும் விடுதியில் தங்கி படிப்பதற்கான ரூ.1,750 ஆகியவை ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும்.

கட்டுமான தொழிலாளர் நல வாரிய தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர் நலவாரிய தொழி லாளர்கள் இயற்கை மரணம் அடைந் தால் அவர்களது குடும்பத்துக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரிய உறுப்பினர்கள் விபத்து மரணம் அடைந்தால் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரியத்தில் பதிவுசெய்த 85 ஆயிரம் ஓட்டுநர்களுக்கு ரூ.1,500 மதிப்பிலான முதலுதவி பெட்டி, சீருடை, காலணி அடங்கிய பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும்.

தமிழ்நாடு உடல் உழைப்பு தொழி லாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் 15 நலவாரியங்களின் தொழிலாளர்கள் விபத்து மரணம் அடைந்தால், குடும் பத்துக்கு வழங்கும் உதவித் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்படும். இயற்கை மரணத்துக்கான உதவித் தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும்.

சமையல் தொழிலாளர் நல வாரியம் என்பது சமையல் மற்றும் உணவகத் தொழிலாளர்கள் நல வாரியம் என்றும், அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம் என்பது அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர் நலவாரியம் என்றும் பெயர் மாற்றப் படும். நல வாரியங்களில் பதிவு செய்தவர்களில் 1 லட்சம் பேருக்கு பணித்திறன், அனுபவத்தை அங்கீ கரித்து திறன் மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்கப்படும் என்பது உட்பட 34 அறிவிப்புகளை அமைச்சர் கணேசன் வெளியிட்டார்.

No comments:

Post a Comment