இந்தியா என்றொரு நாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

இந்தியா என்றொரு நாடு

 இந்தியா

என்றொரு

மதச்சார்பற்ற நாடு

முன்பு இருந்தது

அது

காவி வண்ணத்தை

தன் மேனி முழுக்க

பூசிக் கொண்டதில்லை

 

பசுக்களை

காப்பதாய்ச் சொல்லி

மனிதர்கள் அங்கு

வேட்டையாடப்பட்டது இல்லை

பொதுத் துறை

நிறுவனங்கள் ஒவ்வொன்றாய்

தனியாருக்கு

தாரை வார்க்கப்பட்டதில்லை

சொந்த பணத்தை மாற்ற

வங்கி வாசலில்

காத்துக் கிடந்து

எவரும் செத்து மடியவில்லை

மாநில அரசுகளின்

அதிகாரங்களை

மொத்தமாய் மத்திய அரசு

கபளீகரம் செய்ததில்லை

 

வேளாண்

சட்டங்கள் மூலம்

விவசாயிகளின் கோவணங்கள்

உரியப் படவில்லை

இந்தியப் பிரதமர்

இந்தியாவில் இருந்ததை விட

அதிக நாட்கள்

வெளி நாடுகளில் இருந்ததில்லை

விளக்கேற்றி

பாத்திரங்களைத் தட்டி

வைரஸ்களை

விரட்டியது இல்லை

ஜிஎஸ்டி எனும் பெயரில்

இந்திய தொழில்துறை

குழி தோண்டி

புதைக்கப் படவில்லை

 

வெங்காய விலை உயர்வு

குறித்த கேள்விக்கு

தான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என

எந்த மத்திய அமைச்சரும்

பதில் அளித்ததில்லை

காஷ்மீருக்கு

அளித்திருந்த உறுதி மொழியை

இராணுவம் கொண்டு

உடைத்து எறியவில்லை

பள்ளிப் பாடத் திட்டங்கள்

அத்தனையும்

ஓர் மதச் சார்பாய்

திருத்தி எழுதப்படவில்லை

 

ஆளுநர்கள் துணை கொண்டு

கொல்லைப் புறம் வழியே

ஆட்சி அதிகாரங்களுக்கு

யாரும் வந்ததில்லை

குடியுரிமை

சட்டதிருத்தம் மூலம்

சொந்த நாட்டு மக்களை

அகதிகள் ஆக்கியதில்லை

இந்தியா

என்றொரு

மதச்சார்பற்ற நாடு

முன்பு இருந்தது ...

- பாசு ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment